பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 29, 2011

தொலைத்து விட்ட சித்திரங்கள்...


பேருந்தில் குழந்தையொன்று
பின் நோக்கிச் செல்லும்
மரங்களுடனும்
செடிகளுடனும்
பேசிக்கொண்டே வந்தது...
காற்றில் அலையும்
கைகளில் புதிதாய்
சிதறிக் கொண்டிருந்தன
பல நூறு வண்ணங்கள்...
புன் சிரிப்பில்
தெறித்து விழுகிறது
காணமல் போயிருந்த
நிலவொன்று...
யாருக்கும் புரியாமல்
போக
நான் ரசித்து கொண்டிருந்தேன்
அதன் விரல்களில்
உருவாகி மாறிக் கொண்டே
இருந்த
சித்திரங்களை...
ஒரு வேளை
நானும் தொலைத்திருக்கலாம்
அக் குழந்தை ரசித்துக்
கொண்டிருக்கும்
இயற்கையின் ரகசியங்களை...

Sep 28, 2011

பருத்திக் காடும், பொன் வண்டும்...


பள்ளிக் கூடம் லீவு விட்டால்
மாமா வீடு போவோம்
பஸ்ஸிலே பாதி தூரம்
கால் நடையா மீதி தூரம்...

குத்தைகைக்கு காடு புடிச்சு
மழை பெய்யும் போது மட்டும்
கடலைக் காய் நடும் மாமா
மீதி காலமெல்லாம் பருத்தி செடி வச்சிருப்பார்...

விடுமுறை காலமெல்லாம்
பருத்தி வெடிச்சிருக்கும்
மேகக் கூட்டம் வந்து
காடெல்லாம் நிற்பது போல்...

விடியும் முன்னே எழுந்து
ஒவ்வொரு செடியா பருத்தி பஞ்சு தேடி
எடுத்து கோணியில சுமந்து வந்து
குடிசைல பொதி வைப்போம்...

பணை வெல்லம் போட்டு
அத்தை குடுக்கும் வரக்காபி
அத்தனை ருசி இருக்கும்
அந்த முன்மதிய நேரத்திலே...

பக்கத்திலே இலந்தை மரம்
காய்ச்சு பழுத்திருக்கும்
வேலியோரம் சூரிப் பழம்
பொருக்கி எடுக்க சண்டை வரும்...

பொழுது சாயும் வேளையில
பொன் வண்டு புடிக்கப் போய்
தீப் பெட்டிக்குள்ள அடைச்சு வச்சு
கொண்டு வந்து இரவெல்லாம்
முழிச்சிருந்தேன் பொன்வண்டு ஒளிருமென...

ஞாயிற்று கிழமை வந்த
கொண்டாட்டம் தான் எனக்கு
சேவல் சண்டை வேடிக்கைக்கு
கூட்டிப் போவார் எங்க மாமா...

திரும்பி வரும் போது
கையில பத்து ருபாய் நோட்டு தந்து
செலவு பண்ணாம வச்சுக்க
புத்தியும் சொல்லிடுவார்...

இப்பவும் காடிருக்கு
பருத்தியும் இல்லாம
கடலையும் இல்லாம
நிரப்பி வச்சு கல்லு நட்டி...

எங்கே இருக்கும் அந்த
இலந்தை மரமும்
பொன் வண்டு பூச்சியும்
தேடித் போக நானுமில்லை
என்னை நானே தொலைச்ச பின்ன...

Sep 27, 2011

அவள் அவன் மற்றும் ஓர் மனமுறிவு...

ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றை தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்...

இருவரும் பிரிந்தது ஒரு மைதானமல்ல
வெவ்வேறு திசைகளில் போக...

மலைப் பாதையில்
மேல் நோக்கிய பயணத்தில் நீ
பள்ளத்தாக்கில் நான்...

கைக்கு கிடைத்த
செடி கொடி இண்டு இடுக்குகளைப்
பற்றியபடி மேலேறி வர
நடத்திய மரணப் போராட்டமே
பயணமாக நான்....

என்னை மீண்டும் கீழே தள்ளிவிடக்
காத்திருந்ததில் உன் பயணம்
மறந்தவனாய் நீ...

என் திசைகளில் நீ இல்லை
உன் எல்லா திசைகளிலும்
நான் இருந்தேன்...

முகமற்ற அருவத்தை வீழ்த்த
காற்றை பாளம் பாளமாக
வெட்டிய படி நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
பைத்திய காரனாகிக் கொண்டிருந்தாய்...

நான் திரும்பியும் பார்க்காமல்
நகர்ந்த போது
நீ
என் ஆடைகளைப் பறித்து
நிர்வாணமாக்க முயன்றாய்...

என் சிம்மாசனத்தை
நான் அடைந்த போது
உன் மகுடம்
கீழே விழுந்திருந்தது..

உன் முகமிருக்கும் இடத்திற்கு
என் பாதம் உயர்ந்த போது
கட்டுகளற்ற வெறிநாயாய்
உன் நாக்கை அவிழ்த்து விட்டாய்...

நான்
உன் வீட்டின் வழியே
மேள வாத்தியங்களோடு
ஊர்வலம் போன போது
நீ
என் பழைய கடிதங்களில்
பூதக் கண்ணாடி வைத்து
தேடிக் கொண்டிருந்தாய்...

நான்
மேலே மேலே நகர்ந்து
மேகங்களை அடைந்து
மழையை பொழிவித்த போது
நீ
நகர முடியாத
பெரு வியாதிக்காரனாய்
ஊர் எல்லையில் கிடந்தாய்
அழுகிய விரல்களோடு...

"பத்தினிகள் அற்ற ஊரில்
இன்னும் எப்படி
மழை பெய்கிறது? என்று
முனு முணுத்துக் கொண்டே
உன் பசிக்கு
ஏந்தினாய்
என் மழையை...

-தாமரை...

மழை நாடகம்...

அவர்களின் பிரிவுக்கு
அவர்களே தான்
காரணமாய் இருந்திருக்கிறார்கள்

அவர்கள் கண்களை
வீசிக் கொண்டது
அதே மக்களின் வீச்சரிவாளுக்கு
மேலாகத்தான்

அவர்கள் நெருங்கி வந்த போதும்
வீதிகள் இப்படித்தான்
பிரிக்கப் பட்டிருந்தன

மாடி வீட்டுக்காரர்கள்
குச்சு வீட்டுக்காரர்களோடு
அதிகம் பேசிக் கொள்வதில்லை
இப்போது போலவே

வீரத்தோடு உயர்த்திக் காட்ட
கைதான் இல்லை
இழுத்துக் கொண்டு ஓட
கால்கள் கூடவா இல்லை?

வேறொருவனுக்கு வாக்கப்பட்டு
புதுச் சரடு மின்ன அவ்வப்போது
வாசலில் எட்டிப் பார்க்கிறாள் அவள்

எதோ கொடுக்க எதோ வாங்க
கடை எடுபிடியாய்
அடிக்கடி வந்து போகிறான் அவன்

மழை வந்தாலும் வராவிட்டாலும்
அவனோடு ஒரு குடை
எப்போதும் வருகிறது

மறந்து விட்டுப் போன குடையை
வாங்க வருகிறான் அவன்
எடுத்துக் கொடுக்கிறாள் அவள்

கோழைகளுக்கு மழையில்
நனைய கொடுத்து வைக்கவில்லை
என்றாலும் குடையை
மறந்து விட்டுப் போகும்
மதி நுட்பமேனும் வாய்த்திருக்கிறதே...

-தாமரை...

ஏரியில் ஒருவன்....

உட்காரப்
புல்வெளி
எதிரே
நீர் வெளி
நீர் மேல் எண்ணெயாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத்து ரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்...
...........
.....
....

எல்லாம் தவிர்த்து
கவனமாய்க் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டை கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும்
மீன் ஒன்றைக்
காணும் ஆவலுடன்....

-எஸ். கோபிநாத்

காதல் தீவிரவாதி...

நான்
தீவிர வாதி தான்...

ரசனையான
வாழ்க்கையை
வெறித்தனமாய்
நேசித்த தீவிரவாதி....

சின்ன சின்னதாய்
ஏராளக் கனவுகள்
ஜெலட்டின் குச்சிகளை
என்னிடம் உண்டு....

பெண்ணடிமைத் தனக்
கட்டுப்பாடுகளை
உடைத்தெறிய
பலமுறை
கொரில்லாத் தாக்குதலகள்
நடத்தியதுண்டு
பெற்றோருடன்...

கடைசியில்
காதல் தடுப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்டேன்
குடும்ப கௌரவத்தை
குண்டு வைத்து தகர்த்த தாய்
குற்றச்சாட்டு...

தினம் தினம்
சித்திரவதைகள்
சொல்லடிகள்
இறுதியில்
நாள் குறிக்கப்பட்டது...

முன்பின் அறியாத
அந்நியனின் காலடியில்
ஆயுள் சிறையென
கல்யாணத் தீர்ப்பு
எழுதப் பட்டது....

பூச்சரங்கள்
அலங்கரித்த
அறைக்குள் வந்தான்
புருஷன் எனும் போலீசுக்காரன்...

அன்பான சொல் இல்லை
ஆதரவான பகிர்தல் இல்லை
.........
.....
...
அவ்வளவுதான்
முடிந்து விட்டது...

முதலிரவு
என்கவுண்டரில்
மொத்தமாய்
செத்துப் போனேன்
நான்....

-உமா சம்பத்

Sep 22, 2011

அவதூறு பேச்சாளி

ஒரு சிற்றாறிடம்
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!

சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!

ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!

யார் நிரபராதி?

நுழைவாயிலில்
எனது விருந்தாளியை
நிறுத்திச் சொன்னேன்
இல்லை;
நீ நுழையும் போது
உன் பாதத்தை
துடைத்துக் கொள்ளாதே;
ஆனால் நீ
வெளியே சென்றவுடன்
துடைத்துக் கொள்;

உனது தேவையாய்
இருப்பதை விட
எனக்கு அதிகம் தேவையாய்
இருப்பதை கொடுப்பதல்ல
கொடை!
என்னை விட உனக்கு
அதிகம் தேவையாய் இருப்பதை
எனக்கு கொடுப்பதே
கொடை!

ஒரு நாள் பசிக்கும்
ஒரு மணி நேர தாகத்திற்கும்
இடையில் உள்ள
வித்தியாசம் தான்
பெரும் பணக்காரனுக்கும்
பரம ஏழைக்கும்
இடையிலுள்ள
வித்தியாசம்...

உன் அறிவுக்கு
எட்டிய மட்டும் தான்
உன்னால்
மற்றவரைப் பற்றி
எடை போட முடியும்
இப்பொழுது சொல்!
நம்மில் யார்
குற்றவாளி
யார் நிரபராதி?

இங்கு
மிகச் சிறந்த ஒழுக்கமாய்
இருக்கும் ஒரு
நற்குணம்
மற்றோர் உலகத்தில்
மிகத் தாழ்ந்த ஒன்றாக
இருக்கலாம்...

Sep 21, 2011

ஒரு நாளின் பின்பகல்


செல்லரித்துப் போன
காகிதமென
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகுமோ
உன்னில் என் நினைவுகள்...

தேவைப்படும் என
தேக்கி வைக்காதே
இயல்பான ஒரு நதியின்
நீரோட்டத்தைப் போல
இயல்பாய் இருக்கட்டும்...

புகைப் பட காட்சிகளென
நிறைத்து
யாதேனும் ஒரு மழைநாளிரவில்
யதேட்சையாய்க் கையிலெடுத்து
கோடை வரை ரசித்திருப்பேன்
நம் நினைவுகளை....

உயிர் பிரிந்து வெளியேறும்
தருணத்தில் புலப்படாத
மெல்லிய ஓசைகளை மீறி
ஒலிக்கும் என் கவிதைகளை
நீ
வாசிக்கும் உதடசைவுகள்...

உண்ணவும்
உறங்கவும் மறக்கலாம்
அடிக்கடி மறக்க
நினைக்கும்
நம் நாட்களைத் தவிர
எல்லாவற்றையும்...

நீ வீட்டுப் போன
எழுத்துக்களில் நான் கவிதை
மொழிகளில் நான் இசை
வர்ணங்களில் நான் ஓவியம்
சுவாசத்தில் நான் தென்றல்
அன்பில் நான் மனிதனாய்...

மொத்தமாய்
ஒரு நாளின் பின் பகல் பொழுதுகளில்
சிரித்துக் கொண்டே பேசி
உன்னிடமிருந்து
பிரித்து வைத்தாய்
கண்களில் நீர் மறைத்து
மனதில் வலி மறைத்து
உன் வரவிற்காய் காத்துக் கிடந்த
காலங்கள் மறைத்து
உன்னோடு வாழ்ந்த
கனவுகளை மறைத்து
.......
....
...

இப்படி
எதுவுமே தேவை இருந்திருக்காது
என் காதலை
உன்னிடம்
மறைத்திருந்தால்....

உதட்டுக்கு வராத முத்தம்...

தோழா...
எப்படி
உன்னால்
சொல்ல முடிந்தது
என்னிடம்?

கல்லூரிப் பாடத்திலிருந்து
காண்டம் ஜோக்
வரையிலும்
பகிர்ந்து கொண்டவன் நீ!

நம் பரஸ்பர
ரசனைகள் பற்றி
பட்டியலிட
பக்கங்கள் போதாது....

கல்லூரி வாரவதியில்
கால நேரமற்று
பேசிக் கொண்டிருந்து
பதறிப் பிரிந்த போதும்...

கடற்கரையில்
விரல் கோர்த்து
அலையில்
நனைந்த போதும்...

வேடிக்கையாய்
என் கன்னத்தில்
வேகமர்றுத்
தட்டிய போதும்...

புறங்கையில்
பூப் போல
நீ இட்ட முத்தத்தின்
போதும் கூட
நான் நினைத்த தில்லை
இப்படி
சொல்லப் போகிறாய்
என்று?

நிறைய
தோழிகளின் காதலுக்கு
பாலமாய் இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான்...

ஆனாலும்
நீயும் கூட
உன் காதலை சுமந்து சென்று
மற்றவரிடம் சேர்க்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது
என்னிடம்?

எப்போதும்
தூது பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை
காதல்....

- உமா சம்பத்

குழந்தைச் சித்திரம்...

மேஜை மீதிருந்த
உங்கள் தூரிகையை
லாவகமாய்ப் பற்றி
புதிய வானத்தின் புதிய வண்ணங்களை
தீட்டுவதற்கு முற்படுகிறதொரு
குழந்தை

அதன் தூரிகை மொழியில்
முன்னேற்பாடற்ற புதிய வானம்
துலக்கம் பெரும் வேளை
பழைய வானத்தின் சாயல் ஒன்றின்
சிறு பிசிறைக் கூட
அது இச் சித்திரத்துள்ளாக
எடுத்து வரவில்லை

முற்றிலும் அது
புதிய நிறங்கள்
புதிய கோடுகள்
புதிய விஷயங்களால்
நிரம்பி வழிகிறது
உச்சரிப்பின் வார்த்தைகளற்ற
சித்திரத்தின் வான் கோப்பை

யாரும் வர வேண்டாம்
உங்கள் புலன்கள்
பிரவேசிக்க வேண்டாம்
குழந்தை ஓவியம் பார்க்க

ஒரு வேளை
நீங்கள் அதை
வானமேயில்லைஎன்று சொல்லி
அக் குழந்தையை
பயமுறுத்தி விடக் கூடும்...

-கடற்கரய்...
ஒ, கடவுளே
முயலை எனது
இரையாக்கும் முன்னர்
என்னைச்
சிங்கத்தின்
இரையாக்கி விடு....

இரவின் பாதையைப்
பாதுகாத்து வைத்து,
ஒருவன்
விடியலை
அடைந்து விட முடியாது...

எனது துன்பத்தின்
ஒரு பகுதியே
சில இன்பங்களின்
மீதான ஆசை
என்பது தான் விசித்திரம்....

உண்மை என்பது
எப்பொழுதும்
அறியப் பட வேண்டியது
சில போது
வாய் விட்டு உரக்க
சொல்லப் பட வேண்டியது...

நம்மிடம் இருக்கும்
உண்மையான இயல்பு
அமைதியாய் இருக்கும்
நம்மால் முயன்று
அடையப்பட்ட ஒன்று
ஓயாமல்
பேசிக் கொண்டிருக்கும்...
கணக்கற்ற சூரியன்களின்
இயக்கத்தை வைத்தே
காலத்தைக் கணக்கிடுகிறோம் நாம்
அவர்கள் தம்
சிறு பைகளில் உள்ள
சிறு இயந்திரங்களைக் கொண்டு
காலத்தை அளவிடுகின்றனர்
இப்பொழுது
எனக்கு கூறுங்கள்
ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில்
நாம் என்றேனும்
சந்திக்க
எவ்வாறு இயலும்?
இந்த
அதிசய ஏரியில்
கூழாங் கல்லான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏரிப் பரப்பின் மீது
சலனப் படுத்தினேன்
ஆனால்
ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சலனமற்றவனாகிப் போனேன்...
ஒரு முத்து
மணல் துகளின் மேல்
உழைப்பின் வலியினால்
கட்டப் பெற்ற
ஒரு கோயில்...
எந்தத் துகளின் மீது
எந்த ஏக்கங்கள்
எமது உயிர் உடல்களைக்
கட்டினவோ?
ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன்
இதுவரை
அவளுக்குப் பிறக்காத
எல்லாக் குழந்தைகளையும் பார்த்தேன்
என்னருகில்....
ஒரு பெண் என் முகத்தைப்
உற்று நோக்கியவுடன்
அவள் பிறக்கும் முன்
இறந்து போன
எனது எல்லா முந்தயரையும்
அறிந்து கொண்டாள்....
ஒரே ஒரு முறை தான்
பேச்சற்றுப் போனேன்
நான்
அது
நீ யார்? என ஒரு மனிதன்
கேட்ட போது?
விழித்த போழ்து அவர்கள்
என்னிடம் சொல்கிறார்கள்
நீயும் நீ வாழும் உலகமும்
ஓர் எல்லையற்ற கடலின்
எல்லையற்ற கடற்கரை மணலின்
ஒரு துகளே ஆகும்
என் கனவில்
அவர்களுக்குச் சொல்கிறேன்
'"நானே எல்லையற்ற கடல்
எல்லா உலகங்களும்
எனது கரையின் மணற் துகள்களே !
எப்பொழுதும் இந்தக் கரைகளின் மீது
மணலுக்கும் நுரைக்கும் நடுவே
நடந்து கொண்டிருக்கிறேன்
ஓங்கி வரும் அலை
என் காலடித் தடங்களை அழிக்கும்
காற்று
என் மேல் நுரையினை தெளிக்கும்
ஆனால்
கடலும் கடற்கரையும்
காலம் காலமாய் இருக்கும்...

Sep 20, 2011

உடைபடும் தூக்கத்தின் கதவுகள்...

பனி இதழ்களின்
உற்புறத்தின் புதர்களில்
பாய்வதற்கு பதுங்கியிருக்கின்றன
முத்தங்கள்
கனவுகளின் பூட்டை உடைத்து
என் பிரதேசங்களுக்கு
உன்னைக் கடத்தி வருகிறேன்
மூடிய இமையின் இருட்டடியில்
நீ ஒரு ஒளி
உருவமாய் மிதக்கிறாய்
தூங்கும் உடலுக்குள்
ஒரு பூவாய் யாத்திரை செய்கிறாய்
தூக்கத்தின் கதவுகளை
திறந்தே வைத்து
அதன் அறைகளில்
உன் அறிய பயன்களை
நிச்சயித்துக் கொண்டிருக்கிறேன்
காதலின் தோட்டத்தில்
நான் ஒரு பூவாக
பூக்கத் தொடங்கி விட்டேன்
பறித்துக் கொள்ள
உன் விரல்கள்
நடுங்குகிறதா?
அசைகிறதா?

- அய்யப்ப மாதவன்...

Sep 17, 2011

மெழுகுவர்த்தி


எப்பொழுது தேவைப் படுவதில்லை தான்
ஆனாலும் உபயோகித்திருப்பாய்
மின்சாரம் தொலைத்த பொழுதொன்றில்
மெழுகுவர்த்தி ஒன்றை....

முழுமையான வெளிச்சத்தை
தருவதில்லை எனினும்
அடையாளம் காட்ட உதவும்
சிறு தீபமென...

மெல்லிய காற்றின் சீண்டல்களில்
கூட அசைந்து துடிக்கிறது
அதன் மெல்லிய தீ நாக்கு
ஒரு நடனத்தை குறியிட்டு...

அழுது வடியும் கண்ணீரையோ
உருகி கரையும் உடலையோ
ரசிக்கிறோமே இன்றி
கவலைப் படுவது இருளைப் பற்றியே...

வீட்டில் ஒருவராவது இருக்கிறார்கள்
மெழுகுவர்த்தியினை வெளிச்சமென
நினைக்காது ஒரு தியாகத்தின்
உண்மை பொருளை உணர்ந்தவராய்...

தேவாலயங்களிலும்
பிறந்த நாள் விழாக்களிலும்
காணக் கிடைத்தாலும்
அங்கே சிறப்பு அவற்றுக்கில்லை...

மின்தேக்கிகள் நடைமுறைக்கு
வந்த பின் அதிகம்
மறக்கப் பட்டவை
சிம்னி விளக்கும் மெழுகுவர்த்தியுமே...

நான் எழுதிக் கொண்டிருப்பது
மெழுகுவர்த்தியை பற்றி என
நீ தவறாக நினைத்தால்
அது என் தவறல்ல...

பெயரற்ற உறவு...


விடுமுறை நாளென
நீ நேரம் வரை தூங்கிப் போக
விடிந்த பின்னும்
விடியாமலிருக்கிறது
எனது இன்றைக்கான நாளொன்று...

நேற்றிரவு உனக்கென
நான் எழுதி வைத்த
பனித்துளி கவிதைகளை
அதிகாலை கதிரவன்
திருடிக் கொண்டிருக்கிறான்...

எப்பொழுதும் போல்
உதாசீனப் படுத்தப் படும்
கோரிக்கைகளையே நான்
வைத்திருக்கிறேன்
உன்னிடம் ஏமாறு வதற்கென...

வீட்டில் நீ மீன் சாப்பிடும்
பொழுதெல்லாம் கூரிய முள்ளொன்று
சிக்குகிறது என் தொண்டையின்
மெல்லிய இடுக்குகளில்...

நேற்றிரவு இரவு விளக்கின்
ஒளியில் நீ தூங்கும் போது
அனல் கக்கும் சூரியனின்
ஒளிக் கதிர்களில் தவித்திருந்தேன்...

விட்டுக் கொடுக்கவே இயலாத
சில மணித்துளிகளை
யாரிடமோ கொடுத்து விட்டு
கொதிக்கும் மனதை
மறைக்கத் தெரிவதில்லை எனக்கு...

அடிக்கடி கோபம் கொள்வதில்
அர்த்தங்கள் இல்லையென
சொல்லி தேற்றுகிறாய்
முடிந்தால் தானே
முயற்சித்துப் பார்க்க...

இயலாமையின் கரங்களில்
சிக்குண்ட நினைவுகளை
கொல்லவும் தவிர்க்கவும்
நீ வேண்டும் என்னுடன்...

தொடரத்தான் செய்யும்
மனதின் மரண ஒத்திகை
கடைசியாய் துடித்து
அடங்கும் நொடிவரை...

எப்படி முடிக்க என்று
தெரியாமல் தொடங்கிவிட்ட
கவிதையென
அழகாகவும் அழுகையுடனும்
நம் பெயரற்ற உறவு...

Sep 16, 2011

தோளில் உறங்கும் தேவதை


ஆயிரம் முறை கூட
சண்டை போடலாம்
மீண்டும் மீண்டும்
மன்னித்து ஏற்றுக் கொள்வதால்...

என்னுடன் பேசும்
எல்லா நேரங்களிலும்
சிவந்தே இருக்கிறது உன் முகம்
வெட்கத்திலோ கோபத்திலோ...

ஒரு நாள் உன் வெட்கம்
பார்க்க ஓடி வந்து விட்டு
ஒரு கவிதையோடு
திரும்புகிறேன் என்
வெட்கங்களை தொலைத்து...

உறங்க விடா உன்
உறவுக்கென தினமும்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன்
நமக்கான
கனவுக் கவிதைகளை...

நீ உறங்கு
உனக்கும் சேர்த்து
விழித்திருக்கிறோம்
நானும் இரவும்
கூடவே குளிரூட்டும்
உன் முத்தங்களும்...

காதலியாகத் தான்
இருந்தாய் நேற்றிரவு
உன் கண்களால்
அணைத்த அந்த நொடியில்
மனைவியானாய்...

நீ இல்லாத பொழுதுகளில்
கொட்டி விட்ட விண்மீன்களில்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
நாம் தனித்து மயங்கி
கிடந்த நிமிடங்களை...

நாளையும் ஒரு
வெட்கத்தோடு வா
நான் உனக்கான ஒரு
முத்தத்தோடு வருகிறேன்
சந்திக்கட்டும்
வெட்கமும் முத்தமும்...

குழந்தைகள் மட்டுமே
உறங்கும் பொழுது அழகு
விதிவிலக்காய் என் தோள்களில்
உறங்கி விடும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறாய் நீ...

தேவதை கதைகளில்
நம்பிக்கை இன்றிப் போனேன்
ஒரு தேவதையோடு
இந்த இப்பிறவி முழுதும்
வாழும் வரம் கிடைத்த பின்...

Sep 15, 2011

ஜன்னலோரமாய் மலர்களோடு...


கவிதை கேட்டு
ஒரு மாலை வேளையில்
போனவள் தான்
அதன் பிறகு
கவிதைகளாகவே மாறிப் போனேன்
அவனுள்...

நேசிப்பதற்கே யோசிக்கும்
உனக்கு உன்னிடம்
நான் யாசித்த நாட்கள்
நினைவிருக்குமா என்ன?

கோபங்கள் அன்பின்
வடிவம் என்பதை
எப்பொழுது நீ
புரிந்து கொள்ளப் போகிறாய்...

இந்த உலகை அளக்கும்
உன் பேனாவால்
எனக்குள் நீ எழுதிப் போனது
நமக்கான
ஒரு காவியத்தை...

ஆயிரம் முறை காயப்பட்டும்
உன்னிடம் மயங்கும்
மனதிடம் என்ன தான்
எதிர் பார்க்கிறாய்
காதலைத் தவிர...

உன் புன்னகையில்
நான் சிரித்து மகிழ்ந்த
காலங்களை விட்டு
அகல மறுக்கிறது
என் நிகழ் காலம்...

அமைதி தான் உன்
ஆசையெனில் தவறில்லை
ஆனால் உன் மௌனத்தில்
எரிந்து கொண்டிருக்கும்
மனதை வீசி ஏறிகிறாய்...

உன்னுடன் வாழ
விதிகள் இல்லை தான்
இருந்தும் வாழ்கிறேன்
நீ என்னுள் இருந்த
வசந்த காலங்களில்...

திரும்பி வருவாய் என
தெரியும்
அதுவரை காத்திருப்பதை
தவிர வேறேதும் அறியா
கையறு நிலையில் நான்...

இறுதியாய் ஒன்று
எனக்குத் தெரியும்
உன் எழுத்துகள் எனக்கானவை என
இல்லையென சொல்லி விடாதே
நின்று விடப் போகிறது
உனக்கான இதயம்...

நமக்கான கனவுகளுடன்
என் ஜன்னலோரமாய்
காத்திருக்கிறேன்
தோட்டத்தில் உனக்கென்ன
வளர்த்த மலர்களோடு...

Sep 14, 2011

சொல்லாமல்....


உன் வீட்டு முகம் பார்க்கும்
கண்ணாடி முன்பு
நின்று கொண்டு சொல்!
உன்னுள் இருக்கும்
என் பிம்பம் அருகில் தெரியலாம்
ஆன்மாவின் பிரதிபலிப்பாய்!!

சில நொடிகள் மட்டுமே
பார்த்த முகத்தை
ஒவ்வொரு நொடியும் நினைத்துக்
கொண்டிருக்கும் நினைவுகளுக்கு
என்ன பெயர் வைப்பது!!

உன் மௌனங்களைக் கூட
மொழி பெயர்த்து கவிதை என்றேன்!
இனி என் மௌனங்களை
உன்னிடம் தருகிறேன்
கவிதை சொன்னாலும்
காலில் இட்டு மிதித்தாலும் சரியென!!

இலட்சியங்களோடு
வாழும் உனக்கு
இலக்குகளே இல்லாத
என் பயணங்கள்
வேடிக்கையாய் தோன்றுவதில்
வியப்பேதுமில்லை!!

சிறிய பறவை எனினும்
வானின் நீளங்களை
அளந்து திரிந்தவன்!
என் சிறகுகளை நானே
வெட்டிக் கொள்ளும் துயரம் இது!!

வார்த்தைகளின்
பின்னால் மட்டுமே
ஒளிந்து கொண்டவன் இன்று
வாழ்க்கை பிடிக்காமல்
ஒளியும் நாட்களில்!!

அன்பென்று கூறி
தங்கத்தில் பூசினாலும் சிறைகள்
தண்டனை தான்
இனி சிறைகளும் இல்லை
காவலும் இல்லை உனக்கு!!

உன்னை கவிதையாக்க
முயன்று தோற்றுப் போயிருக்கிறேன்
உனக்குத் தெரியும்
என் கவிதைகளுக்கு
தெரியுமா என்ன!!

எனக்குத் தெரிந்ததெல்லாம்
வெறும் வார்த்தைகளே
யதார்த்த வாழ்வென்று
நீ சொன்ன சமன்பாடுகள் அல்ல!!

வெறும் காற்று தான்
தென்றலாகவும்
புயலாகவும்
நீயே சொல்
நான் எதுவென்று?

எப்பொழுதுமே பிரிவில் தான்
புரிகிறது
பிரிக்க முடியாத
உறவுகளின் வலி!

எப்பொழுதும் சொல்லாமல்
புரிந்துகொள் என்பாய்
ஆம்...
என் அமைதியையும்
இனி நீயும்!!

Sep 13, 2011

நாளைக்கென...


விழியில் ஒளியும் நிறங்களை எங்கு தேட...
இன்னும் ஒருநாள் தேவைப் படுகிறது
உன் மீதான கோபத்தை நியாயப் படுத்த...
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
சிரிக்கும் மஞ்சள் மலர்களில் நிறைகிறது
அலைபேசியின் நினைவகம்...
பூனைக் குட்டிக்கான தட்டில் பால்
கண்டு அழுகிறது பக்கத்து வீட்டு குழந்தை...
உருமாறிக் கொண்டே அலைகிறது மேகம்
மேகமாகவே தோன்றுவது எப்பொழுது...
உதிரும் விண்மீன்களில் லயித்து
கூடவே உதிர்கிறது மனசு...
ஒவ்வொரு நாள் முடியும் போதும்
நாளைக்கென சில விஷயங்கள் பத்திரமாய்...
சிரிப்புகளுடனே கலந்திருக்கிறது
சில கண்ணீர் துளிகளும் சோகங்களும்...
விடைபெறும் வேளை வரும் பொழுது
அழும் மனதும் சிரிக்கும் உதடும் நம்மிடம்..
தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கும் பொழுது
அதீத ஆர்வம் உள்ளுக்குள் துடிக்கிறது...
எதை எதையோ எழுதிக் கொண்டு விரல்கள்
என்ன செய்து கொண்டிருப்பாய் என
யோசிக்கும் மனதுடன்...

Sep 11, 2011

திசைகளற்ற பறவையென


சரி என்று சொன்ன ஒற்றை நொடியில்
துவங்கும் புதிதாய் ஒரு பயணத்தில்
இழக்க நேரிடுகிறது
திரும்ப இயலா சில இடங்களையும்...
இரு உயிர்களின் கலத்தலை விட
கடினமானதாகிறது
இரு மனங்களின் புரிதல்களும்
தேடல்களும்...
வேறு வழிகள் இன்றி
சமரசங்களில் நீந்தி
கரை சேர்வோம் இருவரின்
கட்டப் பட்ட கைகளுடன்...
எனக்கான கவிதைகளும்
மெல்லிய இசைகளும்
இன்று வரை
உன்னை சேரவே இல்லை...
உடலின் வெப்பத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்
சில நேரம் மகிழ்வும்
பல நேரம் வெறுப்புமாய்...
இருந்தும் என்ன
அன்பை பகிரவும்
என்னை நேசிக்கவும் புதிதாய்
ஒரு உயிர் உன்னைப் போல...
வரவு செலவு
கணக்குகளில்
கழிந்து கொண்டே போகும்
காலங்கள்...
சுமைகளுடன் நான் திணறிய
கணமொன்றில் நீ
தாங்கிப் பிடிக்கிறாய்
கடமைகளின் கரங்களில்...
புதிதாய் உடைகளும்
அணிகலன்களும்
வித விதமான உணவுகளுமாய்
உறவுகளின் கூடுதலுமாய்
சுகமே என் சூழல்கள்...
திசைகளற்ற பறவையென
ஒவ்வொரு முறையும்
உன் கூட்டிற்கே வருகிறேன்
தாய்ப் பறவையென மாறிய பின்...
உன் நேசமும்
பாசமும் பொய்யென
போய் விடப் போவதில்லை...
இருந்தும்
என்னை ரசிக்கும்
எனக்கான கவிதைகளை
வார்க்கும் ஒருவனை
ரகசியமாய் வளர்க்கிறேன்
உனக்கு தெரியாமல்
எனக்குள்ளே...
என் தனிமைக் கனவுகளையும்
கையிலிருக்கும் மலர்களையும்
அவனுக்கென்றே
வைத்திருக்கிறேன் எப்பொழுதும்...

புரிதல் என்பது


ஜன்னலின் ஓரங்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகளில்
புதிதாய் ஒரு கடல்
அதனுள் நான்...
எதிர்பார்ப்பதும்
ஏமாறுவதும்
என் தொழில்
அதை ஏன் எச்சரிக்கிறாய் நீ..
உன்னிடம் எதிர்பார்க்காமல்
யாரிடம்?
புரியவில்லை எனக்கு
உன் வார்த்தை சூட்சமங்கள்...
சொல்லிப் போவதிலும்
சொல்லாமல் போவதிலும்
வேறுபாடுகளே இல்லை
சொல்வதை கேட்கிறேன்
என்பதை தவிர...
காத்திருத்தல் என்னில் ஒரு
மோசமான வியாதி
காத்திருக்கிறேன்
சரியான ஒரு தவறுக்கு...
நீயாகப் புரிந்துகொள் என்பாய்
புரிதல் என்பது
நானாக கற்பனை செய்வதல்ல
உன்னிடமிருந்து
தாமதமாக தெரிந்து கொள்ளும்
உண்மை மட்டுமே...
எல்லோரிடமும் சொல்ல முடியாததை
உன்னிடம் சொல்கிறேன்
என்னிடம் சொல்ல கூடாதென
சிலவற்றை நீ எப்பொழுது
வைத்திருக்கிறாய் உன்னுள்...
நதியின் கரையில்
கட்டுண்ட பரிசலென
எப்பொழுதும்
உன் வாழ்வின் ஒரு ஓரத்தில்
மட்டுமே கட்டப் பட்டிருக்கிறேன்...
கடல் ஒன்றின்
ஓரத்தில் ஒதுங்கிய
கிழிஞ்சலென மணலில்
புதையுண்டே கிடக்கும்
என் புதைபடா நேசமும்...
ஜன்னலோரத்தில்
தேங்கும் கடல் வடிகிறது
உன்னிடம் சொல்ல
இன்னும் ஒன்று
எனக்கென நான் சிரித்து
எத்தனை நாட்கள் ஆனது?

Sep 7, 2011

மரணமொன்று


மரணங்கள் புதிரானவை....
சில நண்பர்களின்...
முகம் மட்டுமே தெரிந்த சிலரின்...
முகம் கூட தெரியா பலரின்....
நினைவிலிருந்து கொண்டே
இருக்கிறார்கள்!!!
மருத்துவ மனையில்
இறுதி நாளில்
என்னோடு பேச ஆசைப் பட்ட
நண்பன் என்ன சொல்ல நினைத்திருப்பான்
விபத்தொன்றில்
எல்லோரையும் காப்பற்றி
வாகனத்தை ஓட்டிச் சென்றவன்
மட்டும் இறந்து போனானே ஒருவன்
அரளி விதையை அரைத்துக் குடித்த
பக்கத்து வீட்டுப் பெண்ணும்
புடவையில் குழந்தையை
கட்டிக் கொண்டு
ஊர்க் கிணற்றில் விழுந்து மிதந்த
ஒருத்தியும்
ஏன் இன்னும் நினைவை விட்டு
போகவே இல்லை
வீட்டுக் கூரையில்
தொங்கிய அண்ணனும்
கோவிலுக்கு சென்று
உடலாய் திரும்பிய அடுத்த தெருக்காரரும்
துணியில் சுற்றப்பட்டு
மருத்துவ மனையில்
கொடுக்கப் பட்ட பச்சை குழந்தையும்
இங்கே அனைவருக்குமே
மரணம் ஒன்று தானோ?
இவர்கள் மட்டும் ஏன் நினைவிலேயே
எத்தனையோ
இறந்தவர்களின் அடக்கத்தில்
நான் இருந்திருந்தும்
இவர்கள் மட்டும் இன்னமும்...
அகால மரணங்கள்
மனதை விட்டு
எளிதில் விலகுவதில்லை தான்
கும்பகோணமும்
சுனாமியும் சுமக்க முடியா
வலிகளாய்...
ஒரு மரணத்திற்கு
செல்வதை விட
மரணத்தை எதிர் நோக்கியிருக்கும்
ஒருவரை
காணச் செல்வது
கொடுமையானது...
மௌனமாய் அமர்ந்து
வார்த்தைகளின்றி
கண்களில் நீர் வழியும் நிலை
கொடூரம் தான்...
....
........
...........
எல்லாம் போகட்டும்......
உடலால் புதைந்து போனவர்களை விட
வெறும் உடலை சுமந்து
கொண்டு
புதைக்கப் பட்ட மனதினை
கொண்டிருப்பவர்களுக்காக
விழித்துக் கொண்டிருக்கிறது
என் மரணம்....

நிறைவேறா கனவொன்று...

இங்கு திருமணங்கள்
எல்லாம் சொர்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன...
எல்லோருக்குமே வாய்ப்பதில்லை
ஆசைப் படும் வாழ்வு...
கவிதையாய்
கனவுகளாய்
ஒவ்வொரு விதைகளாய் நடப்பட்டு
ஒரு அழகிய மலர்ச் சோலை
என
அனைவரினுள்ளும் ஒரு
வாழ்க்கையின் தேடல்...
இளமைக் கனவுகள்
யதார்த்த வாழ்வில்
வெறும் கதைகளிலே மட்டுமே
சாத்தியமாகிறது ...
கவிதைகளும்
கனவுகளும்
கற்பனை கோட்டைகளும்
கலைந்து போக
படிப்பும்
பதவியும்
பண வசதியும்
எழில் தோற்றமும்
தீர்மானிக்கும் பெரும்பாலும்
நிகழ் காலத்தை....
மனதின் தேவைகளை விட
ஒப்பந்த சித்தாந்தங்களே
மணமேடையில்
அமர்கின்றன...
காலம் கரையும்
கட்டுப் பாடுகளோடு....

தெரிந்து கொள்ளும் ஆர்வங்கள்
ஆசைகளென மிளிர
ஆசைகள் விருப்பகளாய்
விருப்பங்கள் தேவைகளாய்
தேவைகள் பழக்கமென
மாறிப் போய்
பழக்கங்களின் அடிமைகளாய்
நாம்....
பாடவும்
ஆடவும்
விளையாடிக் கொண்டும்
இருந்த பெண்கள்
மஞ்சள் கயிறில்
கட்டுண்டு...
பொருளாதார தேவையும்
போட்டி உலகமுமாய்
வியாபார சிந்தனைகளோடு
சிக்குண்ட மூளையுமாய்...
தனித் தனியான
உலகங்கள் ஒரே
வீட்டில் மட்டுமல்ல
ஒரே படுக்கையறையிலும்...
கனவுகளை தொலைத்த
ஒருவனின் இரவுகள்
மதுவின் மயக்கத்தில்
விரிகின்றது
கானல் நீரென...
அனைத்தும் புதைத்த
பெண்களுக்கு
அடுப்படியும்
குழந்தைகளும்
ஆறுதலாய்...
சொந்தங்கள்
உறவுகள்
சமூக சம்பிரதாயங்கள்
தேவைகளின் தூண்டல்கள்
மட்டுமே இன்னமும்
பேச வைத்துக் கொண்டிருக்கிறது
நல்லதொரு குடும்பமென்று...
அன்றாட மன்னிப்புகளிலேயே
தினமும் படுக்கைகள்
விரிக்கப்படுகின்றன...
தெரிந்தே இருந்தாலும்
விதிவிலக்காய்
விட்டு விடுவதில்லை
எந்த பெண்ணையும் ஆணையும்
மீண்டும் ஒரு முறை
அதே கணக்குகள்
அதே இரவுகள்
அதே மன்னிப்புகள்
வேறு வேறான உலகங்கள்...

காதலாகவே
வாழும் சிலரை
விட்டு விடலாம்
அவர்கள்
நிச்சயம் யதார்த்தமென
சொல்லும் வாழ்வை
மறந்தே இருக்கட்டும்...
எனக்கும் சொல்கிறாய்
நீ
உனக்கென ஒருத்தி
வேண்டுமென்று...
கானல் நீரில்
நான் தேடுவது
கவிதைகளை மட்டும் தான்
பசிக்கான மீன்களையோ
உடல் வருடும் விரல்களையோ அல்ல...
ஆகவே
இங்கு
இன்னுமும்
ஒளித்து வைத்து
யாருக்கும் தெரியாமல்
சிந்தும் பலரின் கண்ணீர்த்
துளிகளில்
மீதமிருக்கிறது
நிறைவேறா கனவொன்று...

Sep 4, 2011

நீ இல்லா நொடிகளில் 5

மழைச் சாரலோடு
விடிகிறது இன்றைய
காலை
உன் நினைவுகளோடு
விழிக்க மறுத்து
கற்பனைகளில் விழுந்து கிடக்கிறேன்
நிஜங்கள் பயமுறுத்தும்
நாளொன்றை சந்திக்க
இயலாமல்....

நேசிக்கவும்
கோபம் கொள்ளவும்
அன்பாய் அணைக்கவும்
பிடிக்கவில்லை என
நிரந்தரமாய்
விலகி நிற்கவும்
என்னிடம் மட்டுமே
சாத்தியமாகிறது
ஏனெனில்
நான் உனக்கானவன்...

புத்தகங்களோ
இசையோ
விடுமுறை
நாளில் பொழியும்
மழையையோ
மறந்து விட்டு
நமக்கான ஒரு கனவில்
அடைத்துக் கொள்கிறேன்...

மனதின் ரணங்களுக்கு
மயிலிறகால் மருந்திட்டவள் நீ
ஆறிப் போன
வடுக்களோடு
என்றுமே ஆறிவிடாத
காயங்களை நீயும்
தருவாயா என்ன?

ஒரு நாளின் தவறுக்கென
என்னை வெறுத்து
நிற்கும் உனக்கு
என்னைப் போல ஒதுக்கி
விடும் உறவு சுதந்திரம்
என்னிடம் மட்டும்  தானே...

விலகிப் போன
உன்னால் இந்த
உலகையே வெறுக்கத்
துடிக்கும் எனக்கு
அழகிய உலகென
நீ இருந்ததை
மறந்து விடுவாயா என்ன?

மன்னிப்பு மனிதர்களுக்கு மட்டுமே

வெளியில் முகமூடிகளோடு
மனதில் மிருகமென
அலைகிறேன்
பெருகும் ரத்த வேட்கையோடு...
நேசித்தலுக்கும்
புரிதலுக்கும்
இன்னும் பக்குவப் படாத
மனம்  இன்னும்
வனாந்திரங்களிலும்
குகைகளிலும்...
எப்பொழுதும் அகலிகைகளே
பாதம் பட காத்திருக்க வேண்டுமா
இங்கே என் போன்ற
துரியோதனர்களும்
சீதையின் வரவை நோக்கி...
குருதியின் வேகமும்
திமிரும் அடங்கும்
வேளையொன்றில்
வேதனைகளை சொல்லி
மன்னிக்கக் கோருவேன்
முகத்தை மறைத்துக் கொண்டு...
உண்மையான நேசத்தின்
உறவொன்றை
நேசத்தின் பெயராலேயே
காயப் படுத்திய உயிர்கள்
இருப்பது பாரம் தான்
இவ்வுலகில்...
கண்ணீரின் புனிதங்களை
தொலைத்தவன்
அழுவதில் எந்த
நியாயங்களும்
மதிக்கப்படுவதில்லை...
செய்த பாவங்களுக்கான
நரகத்தை
பிரிவின்
வலிகளே தரும்
தண்டனைகளென...

உன்னிலேயே முடியும்

இந்த இரவு வேளையின்
தனிமை பொழுதுகளில்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்
மீண்டும் ஒருமுறை
உன் குரல் கேட்கத்
துடிக்கும் ஆவலுடன்...
நீ என்னை வெறுத்தொதுக்கிய
நொடிகளில் உணர்கிறேன்
இதுவரை அறிந்திராத
வெறுமையின் நிறங்களை...
மித மிஞ்சிய
கனவுகளில் வாழ்ந்த
வாழ்வினை பலியிடுகிறேன்
கோபங்களின் வாசலில்...
வார்த்தைகளால் நேசிக்கத்
தொடங்கிய நம்மை
வார்த்தைகளே
பிரிக்கும் அவசரங்களில்...
அதிகமான நேசம்
அதிகமான எதிர்பார்ப்புகள்
சூழ்நிலை கைதிகளாய்
பொறுமை தொலைத்த
விட்டில் பூச்சிகளாய்
வேதனையின் வெளிச்சம் நோக்கி..
உணவே பிடிக்காமல்
கடந்து விட்ட இரு நாட்களில்
மனதை மட்டும்
நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளின் பசிக்கு...
உன் நிழலின் எச்சங்ககளை
மட்டுமாவது விட்டு செல்
உயிருடன் இருக்கும்
என் நினைவுகளுக்கு துணையென...
ஒரே ஒருமுறை
விட்டுக் கொடுத்திருக்கலாம்
பெண்ணே
ஒருநாள் காத்திருப்பின்
துயரம் போக்க...
தொடங்கியவரே
முடிப்பது தான் நியதி
உனக்காக தொடங்கியது
உன்னிலேயே முடியும்...
அனைத்து சொந்தங்களுமாய்
ஆனவள் நீ
அதனால் தானோ என்னவோ
அனைத்தையும் எடுத்து
சென்று விட்டாய் உன்னுடன்...
இன்று துணையென
இருக்கும் நம் நேசத்தின்
நினைவுகளில்
இந்த ஒரு பிறவியில்
வாழ்ந்துவிட முடியும் என்னால்...

Sep 3, 2011

நீ இல்லா நொடிகளில் 4


சொற்களால் அடிக்கப்பட்ட
கணங்கள் மிக அருகில்
இன்னும் தேவையாய்
இருக்கிறது நீ இல்லாத வலி...

நான் ஒரு பிடிவாதக்காரன்
அதனால் தானோ என்னவோ
பிடுங்கப் படும் என்
வார்த்தைகளில் விஷங்கள்...

நகக் கண்ணில் சொருகப்படும்
ஊசிகளென உன் பிரிவின்
வேதனை படரும்
நொடி துளிகள்...

கிடைக்காத பாவமன்னிப்பை
வேண்டி அனைத்துக்
கடவுளிடமும் தஞ்சம்
புகும் கோழையாய்...

மன்னிப்பவர்கள் இல்லையெனில்
எத்தனை நாள்
உயிர் வாழ்வேன் நான்
நரகத்தின் பிடியில் சிக்காமல்...

சேர்ந்து இருந்தால் என்ன
பிரிந்து சென்றால் தான் என்ன
உன்னை நினைக்காமல்
வாழ கற்றுத்தரவில்லை நீ...

நீ இல்லா நொடிகளில் 3


புகைப் படங்களில் கோரும்
மன்னிப்பை உன்னிடம்
சொல்லிப் போகலாம்
என் தீர்ந்து போன
கனவுகள்...

எனை பார்க்க மறுக்கும்
உன் கண்களில்
என்றும் பிம்பங்களை
மறைப்பவனாகவே நான்...

நீ எழுதத் தொடங்கிய
என் வாழ்க்கையின் வரிகளில்
அடிக்கடி முற்றுப் புள்ளிகளை
வைத்தவன் நான்...

ஒவ்வொரு பேருந்துப்
பயணமும் உன்னை
சந்தித்த பயணத்தை
நினைவு படுத்த
வெடித்தழுகிறது இயலாமை...

எனக்கு நானே சுமக்கும்
சிலுவை ஒன்றில்
உன் நினைவுகளின் பாரத்தை
ஏற்றி வாழ்வின்
மீத நாட்களில் சுமப்பேன்
வார்த்தைகளின் சவுக்கடிகளோடு...

என் வாழ்வின் இறுதி
நொடிகளில்
ஒருவேளை நான்
மகிழ்ந்தால்
உன்னோடு வாழ்ந்த
இந்த நாட்களின்
நினைவுகளால் மட்டுமே...

நீ இல்லா நொடிகளில் 2


தவறுகளை சுட்டிக் காட்டவும்
தட்டிக் கேட்கவும்
யாருமின்றி தவறுகளோடு
என் நாட்கள்...

விலை மதிக்க இயலாப்
பரிசினை தெரிந்தே
தொலைத்த பின்
வீணாய் அழுதென்ன
புலம்பியென்ன...

வறண்டு போன
கனவுகளையும்
கவிதைகளையும்
இனி நட்டு வைப்பேன்
பாலை நிலங்களில்...

கவிதைகள் எப்பொழுதும்
அமைதியாகவே
வாசிக்கப் படுகிறது
அது அமைதி இல்லாத
ஒரு இதயத்தின் அழுகையென
மறக்கப் பட்டு...

நடிக்கத் தெரியா
மனதில் ஆயிரம்
கேள்விகள்
முதல் கேள்வி உன்னிடமிருந்து...

என் எழுத்துகளே
தலை எழுத்தை
மாற்றுமென சொன்னவளுக்கு
வெற்று தாள்களில்
வேதனை கொடுத்தவன் நான்...

தவறுகளுக்கு
தண்டனைகளை தவிர்த்து
விடுதலை செய்கிறாய்
உன்னிடமிருந்து
இனி நான்
யாரென்ற அடையாளம்
தொலைக்க சில
நொடிகள் போதும்...

நீ இல்லா நொடிகளில் 1



இன்று காய்ந்து போன
ரொட்டித் துண்டுகளுடன்
கடந்து போகும்
நீ நினைவு படுத்தி
கொண்டிருந்த என்
உணவு வேளைகள்...

இன்னும் உன் கரங்களால்
கிடைத்து விடாத
ஒரு வாய் உணவிற்கென
ஏங்கித் தவிக்கும்
மனதில் பிரிவின் வலி...

நேசிப்பதற்காக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
வெறுக்கவேனும் நினைப்பாயல்லவா
என்னை...

கனவுகளில் வாழ்ந்த
ஒவ்வொரு நிமிடங்களையும்
ஒளித்து வைத்திருக்கிறேன்
மீண்டும் வாழ்வதற்கென...

எத்தனை முறை
கோபம்
கொண்டிருந்தாலும்
இன்று நான் விலகி
நிற்பதன் காரணத்தை
தேடித் பார்
புரியும் உனக்கு...

திறந்த வெளியொன்றில்
கொட்டும் மழையில்
நனைகிறேன் என்னை
அலங்கரித்த வண்ணத்துப் பூச்சியின்
வர்ணங்கள் மெதுவாய்
கரைவதை தவிர்க்க இயலாமல்...

இனிமையான வாழ்வொன்றை
தொலைத்து விட்ட
கண நேர கோபம்
என்னைப் பார்த்து சிரிக்க
தலை குனிகிறது கர்வம்...

கண்ணீரோடு எழுதும்
எல்லா வார்த்தைகளும்
அனைவருக்கும் கண்ணீரை
கொடுத்து விட முடிவதில்லை
ஆனாலும்
உறவுகளின் துயரத்தை
சிறிதேனும்
நினைவு கொள்ள வைக்கும்...

Sep 2, 2011

பிரிவதற்கான காரணங்கள்


சில நேரங்களில்
பிரிவிற்கான காரணத்தை
சொல்லி விட முடியாது...
ஆனால்
ஒருவன் குற்றவாளியாய்
கூண்டில் நிற்கலாம்...
நானாக
ஒப்புக் கொண்டு
தண்டனை பெறுவேன்...
கண்ணீர் காலங்களில்
தொடரும்
என் மீத நாட்கள்...
இனி உன்
சொற்களை கேட்க
முடியாமல் தவிக்கலாம்...
உன் அன்பில்
நனையும் நிமிடங்களை
தொலைக்கலாம்...
வேறு வழிகள் இல்லை
சில நேரங்களில்
நிரபராதிகள்
குற்றவாளிகளாய்
அன்பு கொண்ட
உயிர் ஒன்றுக்காக...
இறுதியாய் பேசிய
வார்த்தைகளுக்கு
மறுப்பு சொல்ல
மாட்டேன்...
நீ என்னை வெறுப்பது
கூட உண்மையாக
இருக்கலாம்...
அது
குற்றவாளியென
நான் பங்கு பெற்ற
நாடகத்தின்
வெற்றி...
இனி கவிதைகள்
முடியும் காலம்
உன்னை எழுதியவனை
எழுதாதே என
சொன்ன உறவுகளின்
காலம்...
உனக்கு
உறவென்றால்
எனக்கும்
உறவுதானே...
...
...
...
...

தண்டனை பெறும்
சில மனங்களில்
புதைந்து கொண்டு
அழுகிறது
உண்மையான சில
பிரிக்கப்படும் நேசங்கள்...

ஆம்
சில நேரங்களில்
பிரிவதற்கான
காரணங்களில் இருக்கும்
உண்மைகளை
சொல்லி விட முடிவதில்லை...