பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 11, 2011

புரிதல் என்பது


ஜன்னலின் ஓரங்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகளில்
புதிதாய் ஒரு கடல்
அதனுள் நான்...
எதிர்பார்ப்பதும்
ஏமாறுவதும்
என் தொழில்
அதை ஏன் எச்சரிக்கிறாய் நீ..
உன்னிடம் எதிர்பார்க்காமல்
யாரிடம்?
புரியவில்லை எனக்கு
உன் வார்த்தை சூட்சமங்கள்...
சொல்லிப் போவதிலும்
சொல்லாமல் போவதிலும்
வேறுபாடுகளே இல்லை
சொல்வதை கேட்கிறேன்
என்பதை தவிர...
காத்திருத்தல் என்னில் ஒரு
மோசமான வியாதி
காத்திருக்கிறேன்
சரியான ஒரு தவறுக்கு...
நீயாகப் புரிந்துகொள் என்பாய்
புரிதல் என்பது
நானாக கற்பனை செய்வதல்ல
உன்னிடமிருந்து
தாமதமாக தெரிந்து கொள்ளும்
உண்மை மட்டுமே...
எல்லோரிடமும் சொல்ல முடியாததை
உன்னிடம் சொல்கிறேன்
என்னிடம் சொல்ல கூடாதென
சிலவற்றை நீ எப்பொழுது
வைத்திருக்கிறாய் உன்னுள்...
நதியின் கரையில்
கட்டுண்ட பரிசலென
எப்பொழுதும்
உன் வாழ்வின் ஒரு ஓரத்தில்
மட்டுமே கட்டப் பட்டிருக்கிறேன்...
கடல் ஒன்றின்
ஓரத்தில் ஒதுங்கிய
கிழிஞ்சலென மணலில்
புதையுண்டே கிடக்கும்
என் புதைபடா நேசமும்...
ஜன்னலோரத்தில்
தேங்கும் கடல் வடிகிறது
உன்னிடம் சொல்ல
இன்னும் ஒன்று
எனக்கென நான் சிரித்து
எத்தனை நாட்கள் ஆனது?

No comments: