பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 24, 2012

வர்ணங்கள் அற்ற வானம்...

வர்ணங்கள் அற்ற வானில்
சிறகுகளின்றிப் பறப்பதில்
என்ன இருந்து விடப் போகிறது?

ஏதாவது ஒரு துயரம் தொலைக்க
உன்னிடம் ஓடி வருகிறேன்
எப்பொழுதாவது,
திரும்புகையில் புதிதாய் ஒன்று கூடுகிறது.

எந்தக் கதையும் உனக்கு சுவாரசியம் இல்லை
முன்பே நீ அறிந்திருக்கக் கூடும்
இல்லையெனில், நீ
ரசிக்கும் அளவுக்கு சொல்லத் தெரிவதில்லை.

அடிக்கடி உன்னை விடைபெறுவதன் நிமித்தமாய்
வட்டத்தினுள் அடைபட்ட காலத்தை பார்க்கிறேன்
என்னை தன் கையில் வைத்து விளையாடியபடி
புன்னகைக்கிறது அதன் போக்கில்.

கடந்து வெளிவரும் வேளையில்
சட்டென உதிரும் ஒரு துளி நீரில்
எதுவும் இருக்கலாம்
நீ
நான்
நம் உறவு
எல்லாவற்றையும் தாண்டி எதுவுமில்லையென
நீ அடிக்கடி சொல்லும் அந்த ஒன்று.