பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

சிறு துளிகள் - நான்கு


நீ அழும் போது
ஆறுதல் சொல்ல முதலில் வருபவர்
நீ நேசித்தவராக இருப்பதில்லை...
உன்னை நேசித்தவராகவே இருக்கிறார்கள்...

எனக்கும் உனக்குமிருந்த
அனைத்து வேற்றுமைகளும் காணாமல் போனது
காதலெனும் ஒற்றுமையால்...

எல்லோரிடமும் புதைந்திருக்கிறது
யாரிடமும் சொல்லப்படாத ஒரு உண்மை...

எல்லோரும் விடுமுறையில்
சுற்றுலா செல்வது போல
நான் உன் ஊருக்கு வருகிறேன்,
நீ வாழும் வீட்டை ரசிக்க...

ஏன் என்கிற
உன் ஒற்றை கேள்வியை
எதிர் கொள்ள இயலாமல்
நீ வரும் வழியில் பதுங்குகிறது
என் காதல்...

உன்னைப் பற்றிய கவிதைகளில்
ஏதாவது ஒரு எழுத்துப் பிழை
திருஷ்டிப் பொட்டென...

சில நேரங்களில்
தடம் புரண்டு விடுவது
ரயில் மட்டுமல்ல,
வாழ்வும்...

கடைசியாய் நான்
உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது
சொல்லாமல் விட்டது
உன்னை நேசிப்பதை மட்டும் தான்...

நீ செல்லும் வரை
நீ தான் என் உலகம்,
நீ சென்ற பின்பு
என் உலகெங்கும் நீ...

நீ தூக்கி எறிந்து விட்டுப் போன பின்னரும்
நம் நேசத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு
அழுகிறது மனசு...

இரவு தொடங்கியதும்
கனிகள் தேடும்
வௌவாலெனப் பறக்கிறது
நினைவுகள் உன்னைத் தேடி...

ஒரே ஒரு முறை
தோளில் சாய்ந்து
சிந்திச் சென்ற கண்ணீர் துளிகள்
இன்னும் சுடுகிறது என்னில்...

என் முகம் பார்த்த பின்
நீ உறங்கச் செல்வதும்,
உன் முகம் பார்த்த பின்
நான் உறக்கம் கலைவதும்...
வடிவங்களற்ற கவிதை மொழி...

உனக்கென்ன பேசாமல் சென்று விட்டாய்,
இன்னும் உன் பின்னால்
அலைந்து கொண்டிருக்கிறது இதயம்
உன் சொற்களை பிடித்து என்னிடம் சேர்க்க ...

நீ கவனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
எத்தனை பறவைகள் பறக்கின்றன
மனதினுள்...

பெற்றோரை இழந்து
தவிக்கும் சிறுவனாய்,
உன் மொழியின்றி தவிக்கிறது
எனது கவிதையொன்று...

உன் குரல் கேட்கா நாளில்
எதோ ஒன்றை இழந்து விட்டதாய் உணர்கிறேன்...

தெருவெங்கும் புழுதி காற்று கண் நிறைக்க
நினைத்துப் பார்க்கிறேன்
என் கண்ணில் விழும்
ஒரு தூசுக்கென
நீ பதறிய நிமிடங்களை...

என் வாசல் கொடியில் காயும்
உன் சுடிதார் பூக்களோடு
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி...

என்னை சலனப் படுத்துவதில்
உனக்கும் மழைக்கும் அப்படி என்ன போட்டி...?

உன்னிடம் கோபம் கொள்ளாமல்
யாரிடம் கோபம் கொள்ள...?
சரி வா!
சமாதானம் பேசலாம்
சண்டை போட்டுக் கொண்டே...

காத்திருக்கிறாள்

எப்பொழுதும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்
மழைகாலத்தில் குடையொன்றை தாங்கியபடி
கண்களில் மின்னி மறையும் கனவுகளோடு
கூர்ந்து நோக்கும் விழிகளில் வெறுமையோடு
ஒற்றை மலரோடு இல்லை மல்லிகை சரங்களோடு
மற்ற அனைவரையும் போலவே
குழந்தை நினைவுகளோடு
இன்னும் இன்னும்
நிறைய சொல்ல முடியா
சோகங்களோடும் மகிழ்வுகளோடும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்...

சிறு துளிகள் - மூன்று

தனிமையில் விடப்பட்ட
பிறகும் செவிகளில்
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது
உன் குரல்....
விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம்,
கூடவே நம்மை ரசித்துக் கொண்டு
மழை....
தனிமை பொழுதுகளிலெல்லாம்
என்னை நீயாக மாற்றி விடுகிறாய்,
சில நேரங்களில் உன்னை நானாகவும்...
மழைக் குளிரால்
நடுங்கிக் கொண்டிருந்தது ஊர்,
நம்மைச் சுற்றி கததப்பாய்
நெருப்பு வளையம் செய்தது காதல்...
மழை நனைந்து,
நீ நம் அறை நுழைகையில்
காதோரம் வழியும் மழைநீரில்
கூடவே இறங்கி தடுமாறுகிறது என் காதல்...
நீயாக இல்லையென்று சொல்லி
பிரிந்து போகும் வரையில்
நான் தந்தையாகத் தான் இருந்தேன்...
விடுகதைகளுக்கு விடைகளை
யோசிக்கும் பொழுதெல்லாம்
கண்களை மூடிக் கொள்ளும் வழக்கத்தை
எங்கு கற்றுக் கொண்டாய் நீ...
ஒரு கவிதையை உனக்கென எழுதி,
உன் வருகைக்கு காத்திருக்கையில்
ஓராயிரம் கவிதைகள் மனதில்...
நானின்றி நீ அங்கு
என்ன நினைப்பாயோ,
அதையே தான் நானும்
இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
நீ இல்லாத சில நாட்களில்
நான் வாழவே இல்லையென்பது
உனக்கு தெரியும் தானே...
கோயிலுக்கும் பொம்மைக்கும்
பெயர் பெற்ற ஊரில் நீ இருந்திருந்தால்,
சிலைகளும் பொம்மைகளும்
உன்னைப் போலவே இருந்திருக்கும்...
நீ என்ன செய்தாலும்
உன்னை விட்டு ஒரு நொடி கூட
விலக விடாதிருக்கிறது
உன் அன்பு...
எப்பொழுதும் இழப்புகளே
மிஞ்சுகிறது சமரசங்களற்ற வாழ்வில்,
இருந்தும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
உன் சுவடுகளை வாழ்வெங்கும்....

சிறு துளிகள் - இரண்டு

எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்ந்தது போதும்...
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
வாழ்வோம் இனி...

உன்னுடன் பேசாமல்
இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதை தவிர
வேறு எதையும் செய்வதில்லை நான்...
நீ இன்றி நான் வாழ முடியாது
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
நீ வந்துவிடவில்லை
நான் செத்துவிடவில்லை
நம்மைப் பார்த்து சிரிக்கிறது
காதல்...
நீ
இந்த ஒற்றை எழுத்தின்
வளைவுகளில் கூட சிக்கிக் கொண்டு
துடிக்கிறது இங்கொரு உயிர்...
என் எல்லா தவறுகளையும்
சரியாக்கியவள் நீ...
நீ போன பின்பு
தவறுகளே அற்ற வாழ்வு
மிகக் கொடுமையாய்...
வன்மையான சொற்களும்
கொடுமையான மௌனங்களும்
உன் மென்மையான இதழ்களுக்கு
கொஞ்சம் கூட பொருந்தவில்லை...
நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?
ஆம்....
ஏனெனில்
அது மகிழ்சியாக நடிப்பதை விட
சுலபமானது...
உனக்கும் எனக்குமான
சில ரகசியங்களை
நீ மழையிடம் சொல்லி இருக்கிறாய்
நதியிடமும்
ஒரு இசை தட்டிடமும்
மூன்றுமாய் எனை கேலி செய்ய
இனி நான் நம் ரகசியங்களை
கடலிடமும்
பறவைகளிடம்
சொல்லப் போகிறேன்...
வருந்திச் செல்கிறது
ஒரு மனங் கொத்திப் பறவை...
உன்னை விட
என் மீது அன்பு செலுத்த
வேறெவரும் இல்லையென.....
என்னை விடவும்
எனக்கு நெருக்கமானவள்
நீ...
கல்லறை வாசகத்தை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், இந்த வாசகங்களை செதுக்க நான் கேட்டுக் கொள்வேன்...

" அவன் இறந்துவிட்டான் - உயிருடன் இருக்கும் போதே..."
தினமும் கதறி
அழுவதை வேடிக்கை
பார்த்த பின்னரே
தாலாட்டை துவங்குகிறது
இரக்கமற்ற இரவுப் பொழுது..
இப்படித்தான்
அன்பு தொலைந்து போகிறது
இந்த நேரத்தில் அன்பு செலுத்த வேண்டும்
இத நேரத்தில் அன்பு செலுத்தக் கூடாது
என்கிற விதிமுறைகளுக்கான விதிகளை
நாம் விதித்துக் கொள்கிற
நிமிடங்களில்...
நாம் சண்டை போட
காரணங்களே தேவை இல்லை
காதல் மட்டுமே
போதும்...
தேவையற்ற காரணத்தைச் சொல்லி
அலைகிறேன்
உன் வீடிருக்கும் தெருவில்
உனைப் பார்த்து விட...