பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 9, 2012

இன்னொரு உலகம்

நீண்டுயர்ந்த சுவர் முன் நிற்கிறேன்
அது பிரம்மாண்டம்
அது புதிர்
அது வியப்பை எனக்குள் விதைக்கிறது..

சிலர் ஏணியை வைத்து மேலேற முயற்சிக்க
முடியாத சிலரோ சுவரின் காது பதித்து
சப்தமொன்றை ஆராய்கிறார்கள்...

காகிதத்தை எடுத்துக் கொண்டு
தனிமையில் அமர்கிறேன்...
எப்படி இருக்கும் சுவர் மறைத்த மறுபுறம்?

புல்வெளியாக, பாலையாக
கடலாக, பெரு நீர்விழ்ச்சியாக

ஒரு வேளை பகலும் இரவும் இருக்குமா
பகல் மட்டுமே இருக்குமோ
இல்லை இரவு நீளுமோ

போய் பார்த்து விட ஆசை தான்
எனக்கு முன் யார் போயிருக்கிறார்கள்
போய்த் திரும்பியவர்கள் இருகிறார்களா?

அறிந்தவற்றை மட்டுமே சிந்திக்க
அறியா வெளி நிரப்பி அமையுமோ

சூரியனும்
நிலவே இல்லாததுமான
ஒரு சிவப்பு ஆகாயம் விரியலாம்
மொழி இல்லா சைகைகளும்...
அல்லது
உயிர் வாடையற்ற ஒரு
புதை குழி என்னை இழுத்து மூடலாம்...

இக் காகிதத்தை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
மறுபுறம் செல்லும் முயற்சியில் வென்றால்
அனைவருக்கும் வாசித்துக் காட்டலாம்
அல்லது
என்னையே நான் யாரென்றும் கேட்கும்
மனப் பிறழ்வை அடையலாம்
கொஞ்சம் காத்திரு
திரும்பி நான் வந்தாலும் வரலாம்

எல்லோருக்கும்
இன்னொரு உலகம்
இருக்கிறது.
எல்லோருக்குள்ளும்
இன்னொரு உலகம்
இருக்கிறது...