பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 6, 2012

நிலா


தெருவில் விற்றுப்போகும்

தின்பண்டம் கேட்டு மூக்கொழுக்கியபடி

அடம்பிடிக்குமொரு குழந்தை போல்

புதுப்பித்தலை எதிர்நோக்கியிருக்குமொரு

சிதிலமடைந்த புராதனச்சின்னம் போல்

எல்லாப் பயணங்களிலும்

பயணச்சீட்டின்றிப் பயணிக்கும்

ஒரு தேர்ந்த குயுக்திக்காரனைப் போல்

தாண்டிப் போவோர் பின்னெல்லாம்

தத்தெடுத்துக் கொள்வாரோவென

ஏக்கத்துடனே வாலாட்டியபடிக் குழைந்து

பரிதவிக்கும் தூக்கியெறியப்பட்டதொரு

பெட்டை நாய்க்குட்டி போல்

கூடவே வருவேனென்று

அடம் பிடிக்கிறது நிலா.

கெட்டவார்த்தை...


அடிக்கடி மோக வார்த்தையொன்றை உளறும்
வரமளிக்கிறேனென்று சொல்லி மறைந்தான் கடவுள்
இதைப் பரிசோதிக்கப் பெரு விருப்பம் கொண்டவள்
காசி நகர வீதிகளில் அலையும் அகோரியைப் போலே
சுயம் மறந்து பிண்டம் சுமந்து திரிந்தாள்
உடல் உபாதையில் மருத்துவரைச் சந்திக்கையில்
தன்னையுமறியாமல் அவள் அந்த வார்த்தையை பிரயோகித்தாள்
ஏறிட்ட அவன் என் நீலப்படத்தில் நடிக்கிறாயா? என்றான்
நேற்று துணி வியாபாரி ஒருவனிடமும் இதையே சொல்லப் போக
அவன் இவள் கட்டியிருந்த புடவைக்கொரு விலை பேசினான்
மனநிம்மதி தேடியொரு ஆசிரமம் கண்டறிந்தாள்
யோகியொருவன் கேட்ட கேள்விக்குத் தவறாக
இதையே உளறி வைக்க அவன் முற்றும் ”துறந்து” நின்றான்
அச்சத்தில் உறைந்த அவள் வரம் தந்தவனை வரச் செய்தாள்
அவனை நிந்திப்பதற்கு வாயெடுத்த போது வார்த்தை குழறி
அவனிடமும் இதையே மொழிந்தாள்
அவனோ இந்தா பிடி சாபம் எனக்கூறி
அவளைக் கற்படுக்கையாகி தன் மேனியைச் சரித்துக்கொண்டான்...

இடமாறு தோற்றப் பிழை


சுருட்டிய மயிர்க்கற்றையென
வளைந்தும் நெளிந்தும்
குறுக்கும் நெடுக்குமாய்
சுழன்று கொண்டேயிருக்கிறாய்
நினைவறை முழுதும்
வேனிற்கால உடல் தனில்
வேர்வையாய் வழிகிறாய்
விழி பார்க்கத் தவறினாலும்
மணி அறியும் பசித்த வயிறென
வலிகளினூடே ஆறுதலாக
உன்னையே உணர்கிறேன்
பயணப்பொழுதுகளினூடே
முகத்திலடிக்கும் தென்றலாகிக்
குறுக்கிடுகிறாய்
கரம் குவித்து பிடிக்க முயல்கையில்
கண்ணடித்துப் பிரிகிறாய்
இடமாறு தோற்றப் பிழையென....

பூமராங்


சொற்களை தூதனுப்பிப் பார்க்கிறாய்
துவண்டு உன்னிடமே தஞ்சம் வந்தடைகின்றன
சொற்களை பூமராங்காக்கி
என்னை இலக்காக்குகிறாய்
ஆச்சரியமாய் அவை உன்னைத் தாக்குகின்றன
உன் வார்த்தைகளை யாசித்திருந்தவள் தான் என்றாலும்
தேவைகள் என்றுமே ஒன்றில் நிலைத்திருப்பதில்லையென்பதை
நீயும் ஒத்திசைப்பாய் என்பதறிவேன்
ஜூலை 30 வெள்ளி இரவு 11:47க்கு
என்னை சலித்து விட்டதாய் சொன்னாய்
என் அழைப்புகளைத் துண்டித்தாய்
அழகாய்ப் பிரியவே எனக்கு விருப்பமென்றேன்
அடுத்த நாள் அதுவே நடந்தது
எனக்கான உன் சொற்கள் மறுக்கப் பட்ட பிறகு
உனக்கான என் சொற்கள் ஜாதிக்காய் பலகைகளுக்குள்
புழுக்கள் நெளியக் கிடக்கின்றன
66 நாட்களுக்குப் பிறகு
இயல்பாய்ப் பேச விளைகிறாய்
இறுகிய என்னை இளக்க மறுக்கின்றன
வழிநெடுக சிதறிக்கிடக்கும்
உன் இற்றுப் போன சொற்கள்
விட்டுக்கொடுத்தலின் சுகம் வலிது
அதனால் தான் விட்டுக்கொடுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உன்னை உனக்கே...