பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 18, 2012

எவ்வளவு காலம்?



ஆமாம், எவ்வளவு காலம் தான் மனிதன் வாழ்கிறான்?
ஓராயிரம் நாளா அல்லது ஒரு நாள் மட்டும் தானா?
ஒரு வாரமா அல்லது சில நூற்றாண்டுகளா?
இறப்பதில் எவ்வளவு காலம் மனிதன் செலவிடுகிறான்?
என்றைக்குமேஎன்று சொல்வதற்கு என்ன பொருள்?
இந்தச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த நான்
இவற்றில் தெளிவு பெற முடிவு செய்தேன்.

ஞானமிகுந்த பூசாரிகளை அணுகினேன்
அவர்களின் சடங்குகள் முடியும் வரை காத்திருந்தேன்.
கடவுளையும் சாத்தானையும் சந்திக்க
அவர்கள் தத்தம் வழி செல்வதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் கேள்விகளால் அவர்கள் சலிப்படந்திருந்தனர்.
அவர்கள் அதிகமாய் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் நிர்வாகிகள்.
நாளுக்கு நாள் அலுவல் மிகும் மருத்துவர்கள்
கையில் ஆரியோமைசின் தோய்ந்த கத்தியுடன்
நோயாளிகளைப் பார்ப்பதற்கிடையில்
என்னை வரவேற்றனர்.
அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டது;
நுண்கிருமிகளின் மரணம் அன்று
அவை தாம் ஆயிரக்கணக்கில் மடிகின்றனவே
உயிர் பிழைக்கும் சில கிருமிகளின்
தொந்தரவுதான் சிக்கல்.”
அவர்கள் சொன்னது என்னை அதிர்ச்சியுறச்
செய்ததால்
வெட்டியான்களை அணுகினேன்.
கொடிய சாபங்கள் சூழ்ந்த பேரரசர்கள்
காலராவின் ஒரே வீச்சில் அவிந்து போன பெண்கள்,
அலங்கரிக்கப்பட்ட பெரும் பிணங்கள்,
சிறிய எலும்பு உடல்கள்-
இவை எரிக்கப்படும் ஆற்றோரம் சென்றேன்.
கரை மணல்வெளி முழுதும்
பிணங்களாலும் சாம்பல் வல்லுநர்களாலும்
நிறைந்திருந்தது.

வாய்ப்புக் கிடைத்ததும்
கேள்விகளைச் சரமாரியாகத் தொடுத்தேன்.
என்னை எரிக்க அவர்கள் முன்வந்தனர்
அது மட்டும் அவர்கள் அறிந்தது.
என் தாய் நாட்டில், வெட்டியான்கள்
குடிப்பதற்கிடையே பதில் சொன்னார்கள்
ஒர் அழகிய பெண்னைக் கட்டிக் கொள்.
இதப் பைத்தியகாரத்தனத்தை விட்டுத் தொலை.’

இவ்வளவு மகிழ்ச்சியான மக்களை நான் கண்டதில்லை.
மதுக் குவளைத் தூக்கிப் பிடித்து,
உடல் நலமும் மரணமும் வேண்டி
அவர்கள் பாடினார்.
அவர்கள் பெரும் கள்ளப்புணர்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதையும் சுற்றிவிட்டு
முதியவனாக நான் ஊர் திரும்பினேன்.

இப்போது யாரையும் நான் கேள்வி கேட்பதில்லை.
ஆனால், நாளுக்கு நாள் குறைவாக
அறிந்து கொண்டிருக்கிறேன்.

Sep 5, 2012

எல்லோரையும் விட...

அப்பேருந்து நிலையத்தில்
அப்படியொன்றும் கூட்டமில்லை
எனக்கான பேருந்தும் அதனிடத்தில்
ஜன்னலோரமாய் நீ
அனிச்சையாய் உதிர்கிறது
விரலிடுக்கின் சிகரெட் துண்டு
அமர்கிறேன்
உனைப் காண ஏதுவான இருக்கையில்
அழகு
காதோரச் சுருள் முடியும்
நீண்ட கூந்தலும்
கண்களில் பெயர் தெரியா நாட்டியம்
அல்லது நாடகம்
பேருந்து நகர
நானோ
உனக்கானதொரு கவிதையை
தொடங்குகிறேன்
அடுத்த நிறுத்தம்
இன்னொருத்தி வருகிறாள்
இவளும் அழகு
தெற்றுப் பல்
குதிரை வால் சடை
காற்றில் விளையாடுமதில்
நானும்
நீர்ச் சுழியில் சருகாய் மனம்
யார் அழகு... ?
இன்னும் சில நிறுத்தங்கள்
இன்னும் சில பெண்கள்
இருப்பதோ இரு விழிகளும்
ஒற்றைப் பார்வையும்
இடையில் ஏறியவர்கள் எல்லாம்
இடையிடையே இறங்கிவிட
நீ மட்டும் இருக்கிறாய்
உறுதியாய்ச் சொல்கிறேன்
எல்லோரையும் விட நீ தான் அழகு...

ஆணுக்கும் பெண்ணுக்கும்…


ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்து,
என் நாளங்களில்
நூற்றாண்டுகளின் சாரத்தைப் பாய்ச்சுபவளே !

உன்னை வெற்றி கொள்ள
உன் விரிந்த சதை மேல்
என் ஆன்மா கவிகிறது.
ஒரு வேங்கையைப் போல் சோம்பல் முறித்துக் கொண்டு
என் இதயம் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது.
விண்மீன்களை ஒளி பற்றிக் கொள்வது போல்
சிதறிய என் உயிர் உன்னைப் பற்றிக் கொள்கிறது.

காற்றைத் தழுவும் பாய்மரம் போல
என்னை நீ அணைக்கிறாய்.
விதையைப் பெறும் பாத்தியைப் போல
உன்னை நான் அணைக்கிறேன்.
என் துயரங்கள் உன்னைச் சுடவில்லையெனில்
அவற்றின் மீது படுத்துக் கொள்.
என் சிறகுகளுடன் உன்னைப் பினைத்துக் கொள்.
அவை உனக்குப் பறக்கும் ஆற்றலைத் தரலாம்.
என் ஆசைகளைச் சீராக்கு.
அவற்றின் போராட்டம் உன்னைப் புண்படுத்தலாம்.
துயரத்தை நான் இழந்த பிறகு
எனக்கென நீ மட்டுமே இருக்கிறாய்
வாளைப் போல் என்னைக் கிழித்தெறி.
அல்லது, ஓர் உணர்கொம்பைப் போல்
என்னை மென்மையாகத் தொடு
என்னை முத்தமிடு
என்னைக் கடி
என்னைக் கொழுந்துவிட்டெரியச் செய்.
எனது ஆண்விழிகள்
எல்லையற்ற உன் கடல் விழிகளில்
உடைந்தழியும் கப்பலாவதற்காக
நான் கரைக்கு வருகிறேன்.