பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 31, 2011

புத்தாண்டும் ஒரு கொண்டாட்டமும்...


இப்படித்தான் முடிவு செய்தார்கள்
ராசுக் குட்டியும் சுப்புவும்
இப் புது வருடத்தை
எப்படியாவது கொண்டாடி விடுவதென்று
எங்கே போகலாம்
ஊட்டி வேண்டாம் என சுப்பு சொல்ல
கொடைக்கானல் முடிவானது
ராசுக் குட்டியின் மோதிரம் பள்ளிக் கூடம் போனது
சுப்புவோ ஆறுமுறை நடந்து
தின வசூல் கார்த்தியிடம் ஆறு வட்டிக்கு
பணம் வாங்கினான்
விடியால மூனு மணிக்கு பொறப்படனும் மாப்ள
சொல்லி விட்டு போன சுப்பு
ஒரு மணிக்கே தயார்

டவுன் பஸ் லேட்டாகும் நடந்திரலாம் மச்சி - ராசுக் குட்டி
நடந்து வந்து பழனி பஸ்ஸில்
உட்கார்ந்ததும் அர்த்தமாய் சிரித்து வைத்தான் அவனே
அங்கிருந்து எப்படி மச்சி என்றான்
வேற எப்படி மாப்ள இன்னொரு பஸ் தான்
சீட்டு வாங்கும் போது சபித்தான் நடத்துனரை
விலை உயர்வுக்கு காரண கர்த்தாவென
பழனியில் இறங்கியதும்
வரும் போது ஒரு தடவ கோயிலுக்கு
போயிடலாம் மாப்ள...
தேநீரை குடித்து காகித குப்பைகளை எறிய
பஸ்ஸூ வருது மாப்ள - சுப்பு
வேடிக்கை பார்த்து இயற்கை அழகை ரசித்துக் கொண்டே
பத்து மணிக்கு போய் சேர்ந்தார்கள்
மச்சி ஒரு பொகைய போடலாம் டா
ரெண்டு கோல்டு பில்டர் தாங்க
பனிரெண்டு ரூபாய் என்றதும்
இது என்னடா அநியாயம்- மனதுக்குள்
மொதல்ல போட் அவுஸ் போலாம்
பின்னாடி பார்க் அப்புறமா மத்தது எல்லாம்

மணி இரண்டாக
மாப்ள சாப்பிடலாம் வா
மச்சி சும்மா எப்படி வா ஒரு பீரை சாத்தலாம்
இங்கும் முடிவானது
ரெண்டு பீர்
ரெண்டு சாப்பாடு
விதி வலியது என்றது பில் ரூபத்தில்
பார்க் சவுக்கு காடு உச்சி
எல்லாம் சுற்றி முடிக்க மணி எழு
சுற்றி நடந்து களைத்த கால்கள்
தீர்ந்து போன சிகரெட் பாக்கெட்டை தூக்கி எறிய
புதிதாய் மற்றொன்று
எட்டு மணிக்கு ரூம் தேட
கையில் முந்நூறு இருந்தது
வாடகை பீதியை கிளப்ப
அதுவரை தெரியாத குளிர் சில்லிட்டது
ஊருக்கு புதுசா என்று கேட்பது போல
போயிடலாம் மச்சி என
முடிவெடுத்த போது
போயிருந்தது கடைசி பஸ்
ஒரு சின்ன பெட்டிகடையில்
உட்கார்ந்து விசாரிக்கையில்
குரங்கு குல்லாவை மீறி
தாளமிட ஆரம்பிக்கிறது பற்கள்
ஒரு வழியாய்
கூண்டு வைத்த சரக்கு வண்டி வர
நூறு ரூபாய் செலவில் பழனியில் விட
ஊருக்கு பஸ் இருந்தது
பழனி முருகன் புண்ணியத்தில்

கண்ணாடிக் கதவுகளை இறக்கி விட்டு
தனி தனி இருக்கையில் அமர்கையில்
அதன் கிறீச் சத்தம் மட்டுமே ஒலித்தது
பாதி வழியில் அலைபேசியில்
குறுஞ்செய்தி சுப்புவுக்கு
மணியை பார்த்தான் பன்னிரெண்டு
யாரா இருக்கும் என்ற யோசனையில்
செய்தியை விரிக்க
பின்னால் தனியே உட்கார்ந்திருந்த ராசுக்குட்டி
படிக்கிறான்
“விஸ் யு ஹாப்பி நியூ இயர்”
ஆங்கிலத்தில்
...
..
.
“விஸ் யூ த சேம். தாங்க் யூ”
பதிலனுப்பி விட்டு கண் மூடுகிறான்
ஊர் வந்து சேர்ந்தது
சைகளலால் விடை பெறுகிறார்கள் ...
எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில்
கொடைக் கானல் அழகையும்
புத்தாண்டு கொண்டட்டத்தையும்
நண்பர் கூடுமிடத்தில் இருவருமாய்
அதீத கற்பனைகளோடு
விவரிக்கக் கூடும்...

”இனிய புத்தாண்டு வாழ்த்துகள்”

கனவுப் பிரதி...


நிசப்தங்களின் வெளியில் பேசிக் கொண்டே அலைகிறது
எல்லைகளற்று விரியும் மௌனத்தின் குரல்
சற்று தொலைவில் ஒரு விண்மீனையோ
அகன்று விரிந்த வானத்தின் நீட்சியினையோ
தேடத் துவங்குகிறது தனிமை குரலின் பிரதிகள்
எதிலுமே லயித்து விடா மனதை வெகு விரைவில்
அணைத்துக் கொள்கிறது பெருவெளியின் தனிமை
காற்றையும் மரங்களையும் பூக்களையும்
வருடிய விரல்கள் நதியில் குளித்து நீள்கிறது
சூரியனின் கிரகணங்களில் குளிர் காய
இதுவரை ஆசுவாசப்படுத்திக் கொண்ட கனவுகள்
கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கிறேன்
முன்னொருமுறையும் இப்படித் தான்
யாருக்கும் தெரியாமல் என் கனவுகளை ஒரு
மூடியிட்ட கண்ணாடி புட்டிக்குள் அடைத்தேன்
மயங்கி மயங்கி ரசிக்கும் இரவுகளில்
அதீத ஒளி வெள்ளம் பரவி நனைக்கிறது என்னை
நொடி முட்கள் கடக்கும் ஒசையில் தெளிவாகிறது செவி
தூரத்தில் ஒலிக்கிறது நான் என்றோ அழுத குரல்
எல்லாவற்றிலும் சேர்ந்து கொண்ட பிரம்மையில்
எதிலுமே இல்லாமல் தனித்திருக்கிறது மனம்
எதிரெதிர் திசையில் ஒற்றையடிப் பாதையில் பயணிக்கும்
நினைவுகளும் கனவுகளும் முட்டி மோதி நிற்கிறது
சமரசங்களை விரும்பாமல்
ஆகச் சிறந்த நூலகத்தில் யாருமறியா ஒன்றாய்
தூசிகளுடன் காத்திருக்கிறது என் கனவுப் பிரதி
....
...
..
மேலும் மேலும்
சொற்களை அலங்காரமாய் நிரப்பி
நீ இல்லா துயரமொன்றை தொலைக்கும்
அக் கணத்தில்
உன் நினைவுகளின் வெளிக்குள்
உலகொன்றை நெய்கிறது கனவு
தொலைந்து போவதற்கு கூட
உன்னைத் தான் தேட வேண்டியிருக்கிறது...

Dec 10, 2011

கானல்நீரும் தாகமுமாய்...


என்றுமே பலித்துவிடாத
கனவுகள் நினைவெங்கும்
சிதறிக் கிடக்க கதறி அழுகிறேன் உன்னிடம்
சில நேரங்களில் உன் தோள் சாயல் கூட
ஆறுதலாய் இல்லை
எழுந்ததும் உன்னை பிரிய நேரிடும்
அச்சம் சுமந்த மனதில்
அடிக்கடி நீ சொல்லும் கானல் நீர்
மட்டுமே தெரிகிறது
எல்லா கவசங்களையும் மீறித்
துளைக்கிறது சில கூர் அம்புகள்
நியதிகளின் பெயரில்
அறுந்து தொங்கும் சதைகளுடன்
பயனற்று கிழ் விழவும்
தாங்கிப் பிடிக்கிறது அதே கானல்வெளி
எரியும் உடலுடன் சுற்றி சுற்றி
வெறும் கைப் பிடி சாம்பலென
உதிரும் வேளையில் வருகிறது தென்றல்
உன் வாசலில் தூவ
கனவுகளை எல்லாம் புதைத்துக் கொள்கிறேன்
நினைவுகளையெல்லாம் தூக்கிலிட்டு
இனி என்ன
கானல் நீரும்
அதன் மீதான தாகமுமாய்
மீண்டும் மீண்டும்
தொலையட்டும் வாழ்வு
சாவுக்கும் வாழ்விற்குமான
இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே...

ஆபிஸில் மதிய உணவு நேரம்


அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

-பிரதிபா கன்னடக்கவிதைகள்
மொழியாக்கம்: புதியமாதவி.

Dec 9, 2011

தவி(ர்)த்தலன்றி வேறொன்றுமில்லை...


மீண்டும் ஒரு இனிய கனவை வீணடித்துவிட்டு
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது...
தடித்து நீண்ட வினாடிகளாலான - இந்த இரவு-
ஒரு சர்வாதிகாரியின் முறைப்போடு - அருகமர்ந்து
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
என் முகவரிக்கு நீ அனுப்பிவைத்திருக்கும் மௌனம்-
எனக்கான பிரத்யேகங்கள் ஏதுமற்ற - உன்
அன்றாடங்களை முடித்துக் கொண்டு
இன்றும்-நீ
உறங்கிப் போயிருக்கக் கூடும்....
ஒட்ட இயலாமல் உருண்டு கொண்டிருக்கும்
நீர்க்கோளத்தின்
தவிப்பையறியா தாமரை இலையைப்போல-
விழித்திருத்தலுக்கும் உறக்கத்திற்குமான இந்த
இடைவெளிகளின்
பரிமாணங்கள் முழுவதும்
எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது...
உனக்கும் எனக்குமிடையே
எதுவுமே இல்லாத ஏதோ ஒன்று...

-சுவாதி ச.முகில்

விடை கொடு காதலனே..!


விடை கொடு காதலனே..!
கண்ணீர் விடாதே..!
இருள் போர்வைக்குள்
உன்னுடன்
இனிய சுகங்களைப்
பகிர்ந்து கொண்டதென்னவோ
உண்மைதான்..
நீ மேய்ந்த இடங்களெல்லாம்
நித்தமும் உன் நினைவைச்
சொல்லிக் கொண்டிருக்கும்!
ஆனாலும் அன்பே..!
பிரிந்து செல்கிறேன்..
நான் காதலை நேசிக்கிறேன்
கூடவே என் கனவுகளையும்!
ஒரு வேலைத் தேடித் தராத
உன் வெற்றுப் பட்டம்
என் எதிர்காலக் கனவுகளை
எரித்தே விடும்!
உன் உதடுகளில் எனக்கு
உணவு கிடைக்காது!
கரடு முரடான பாதையில்
கை கோர்த்து நடந்து
நாளைய வாழ்வை
நரகமாக்குவானேன்..?
ஓலைக் குடிசையில்
உள்ளங்களின் சங்கமத்தில்
காதல் கீதம் பாடி
களித்திருப்போமென்கிறாயா?
கற்பனையில் இவையெல்லாம்
கற்கண்டு விசயம்தான்!
சுடுகின்ற நிஜங்களில்
வாழ்க்கையின் தேவைகள்
சுட்டெரிக்கப்படும்போது
காதலென்பது வெறும்
கண்ணீராய்த்தான் முடியும்!
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது காதலனே!
நம்முடைய நெருக்கம்
நமக்கே சுமையாகுமுன்
நண்பர்களாகவே பிரிவோம்!
விடை கொடு காதலனே..

- பெமினா (துபை)

நீ உணர மறுத்த காதல்


உன்னையே தேடிக் கொண்டிருந்த
எனக்கு வாய்த்துவிட்டது
என்னைத் தேடும் ஒருவனின் தேடல்..

நீ எதிர்பார்த்திருந்த
நிபந்தனைகள் எதையும்
என்னிடம் விதிக்கவில்லை அவன்..

நான் உன்னிடம் வாரியளித்த
அன்பைவிடவும்
மேலதிகமாய் என்னில் பொழிகிறான்..

என் வழித்தடங்களை
ஒருபோதும் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை அவன்..
ஆனால் அவற்றால் ஏதேனும் ஆபத்து நேருமென
நானாகவே மேலோட்டமாய் சொல்லி வைத்தேன்..

உன்னால் ஏற்பட்ட காயத்திற்கும்
சேர்த்தே மருந்து குழைக்கிறான்..
உன்னையும் சேர்த்தே நேசிக்கிறான்
நீ என்னால் நேசிக்கப்பட்டதால்..

இப்போது காயங்களாறி
நடமாடத்துவங்கியிருக்கிறேன்.
இனிவரும் மழையிரவுகளில்
அவனுக்காய் அடைகாப்பதற்கு என்னிடம்
அதே கதகதப்போடு மிஞ்சியிருக்கிறது
நீ உணர மறுத்த காதல்..

-இசைப் ப்ரியா

Dec 3, 2011

கோலங்கள்...


என் வீடு சின்னஞ் சிறிய குடிசை
முன்னால் அகன்ற வாசலும்
வேப்பமரமும் மருதாணிச் செடியும்
ஓரமாய் ஒரு செம்பருத்தியும் உண்டு...
அம்மா அதிகாலையில் சிறியதாய் கோலமிடுவாள்
நெளிவுகளால் நிறையும் வாசல்...
அதிகாலையில் விளக்கொன்றை
வெளிச்சத்திற்கென பிடித்திருப்பேன்
தெருவிளக்கு ஒளிரா நாட்களில்...
அக்கா கொஞ்சம் பெரிதானதும்
கோலப் பொடி கை மாறியது...
அம்மா சாணமிட்டு மெழுகி
கருப்படித்த களிமண் அடுப்பில் மட்டுமே
அதன் பிறகு நெளிவுகளை வரைந்தாள்...
அக்காவோ நெளிவுகள் கைவரப் பெறாமல்
கட்டங்களை நிரப்பினால் வாசலில்...
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
அவளும் தூரிகை பிடிக்கிறாள் விரல்களில்
அம்மாவின் கருப்பு வெள்ளை கோலங்கள்
அக்காவினால் கலரென மாற்றப்படுகிறது...
கார்த்திகை மாதங்கள் முழுதும்
தீபங்களால் நிறைக்கிறாள்
மார்கழியில் சங்குகள்
தையில் தேர்க் கோலம் என
வண்ணங்களில் மிளிர்கிறது வாசல்...
கிளிகள் மயில்கள் மான்கள்
பொங்கும் பானைகள் கரும்புகள் என...
பச்சை தீர்ந்து போன நாளொன்றில்
நீல நிற கிளிகள் பறந்தது
அது போலவே மான்கள் சில நேரம்
புலிகளென உறுமியது
அதிகாலை சாரல் மழையில்
நனைந்து கொண்டு போட்ட மீன் கோலத்தின்
மீன்கள் மழை நீரில் கரைந்து நீந்தியபடி சென்றது...
எனக்கு எப்பொழுதும் சில புள்ளிகள் வைக்கும்
வாய்ப்புகள் கிடைக்கும்...
விடியும் பொழுது சில நேரம்
திண்ணையில் அமர்ந்து கொண்டு
யாரையும் மிதித்து விடாமல்
காவலிருந்திருக்கிறேன்...
எல்லோருக்கும் சொல்ல முடிந்த என்னால்
என் அப்பாவிடம் சொல்ல முடியவில்லை
பூக்கள் கிளிகள் மயில்கள் தீபங்களை
மிதித்த படி தான் கடந்து செல்வார்
அக்காவோ அம்மாவோ எதுவும்
கேட்டதில்லை எனும் போதும்
அவர் இல்லாத போது
சிறிதேனும் திட்டி இருக்கலாம்
மனதிற்குள்ளாவது...

Dec 2, 2011

நீண்ட தெருவும் சில பூக்களும்...

இப் பெருநகரத்தின் எதாவது ஒரு
நீண்ட தெருவில்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
இருவரும் எதிரெதிர் திசைகளில்...
நெருங்கும் நம் இருவருவரின் பார்வைகளும்
கண நேர சந்திப்பில் திடுக்கிட்டு இயல்பாகலாம்...
முன் செல்லும் குழந்தையை
அதட்டி நீ அழைக்கும் போது
தனித்து விட்டுப் போன என்னையும்
அழைப்பதாகவே இருக்கும்...
எப்படியும் நலம் விசாரிக்கப் போவதில்லை
கேட்டாலும் பொய் சொல்லத் தெரியா
உதடுகளும் என்னிடம் இல்லை...
நினைவிருக்கிறதா?
சில வருடங்களுக்கு முன்
இதே நீண்ட தெருவில்
சில மரங்கள் பூக்களை
தூவிக் கொண்டிருந்தது...
இருவரும் கை கோர்த்து
அலைந்தபடி இருந்தோம்...
இன்று மரங்கள் இல்லை
நம் காலடியில் நசுங்கிய பூக்களும்
எனக்கென நீ விட்டுப் போன காதலுமாய்
நீண்டு கொண்டே...


தொலைகிறது சுயம்...


இன்னும் அமைதியாகத்தான் இருக்கிறாய் நீ
உள்ளுக்குள் சுழலும் சூறாவளிகளை மறைத்து
நானும் இயல்பாகவே இருக்கிறேன்
மனதின் நடுக்கங்களை பூட்டிக் கொண்டு
ஒரு நதியின் பெரு வெள்ளமதில்
புரட்டப்படும் சருகென தொலைந்து போகிறது சுயம்
மௌனங்களை சுமக்கிறேன்
மொழிகளை தீயிலிட்டுக் கொளுத்தி
சில நேரங்களில் பூக்களின்
பாரம் தாங்காமல் ஒடிந்து விடுகிறது காம்புகள்
நானும் எதிர் பார்த்தே காத்திருக்கிறேன்
என்னை தாங்கிப் பிடிக்கும்
உன் ஒற்றைச் சொல்லுக்கோ
உயிருடன் எரித்து விடும் நினைவுகளின்
கடும் சினத்திற்கோ...

மௌனமாகும் புல்லாங்குழல்....

முக நூல் கவிதையொன்று...


ஏன் அடர்ந்த மௌனத்தை
இசைத்துக் கொண்டிருக்கிறது
உன் புல்லாங்குழல்...

மேகத்தில் எழுதிவிட்டேன்
என் கனவுகளை...
அதுதான்
மழையாய்ப் பொழிந்திருக்கும்
நேற்றிரவு உன் வாசலில்...

பேசாமலே இருந்திருக்கலாம்
வசந்தமும் தெரியாது
வலியும் தெரியாது
பேசாமல் இறந்திருக்கலாம்....

உன் மௌனங்களால்
விழுங்கப்பட்ட
என் வாழ்கையின் துயரங்களை
சொல்லி அழுகிறது
மேகங்கள்....

- தீபு நல்லசிவம்

Dec 1, 2011

கண்ணாடி முகம்...


அடி பட்டு வீழும் ஒருவனை
அச்சோவென கடப்பதில்
யாரிடமும் வேறுபாடில்லை
சாக்கடையில் விழும் காசுகளை தேடும் ஒருவன்
சுத்தம் செய்பவனை கண்டு
முகச் சுழிப்போடு கடந்து விடுகிறான்
சிவப்பழகில் மயங்கி
விற்றுக் தீர்கிறது ரசாயன பூச்சுகள்
பூக்களில் கூட செயற்கை
காடுகளை அழித்து
பூங்காக்கள் வளர்க்கிறோம்
அடிக்கவும் உதைக்கவும்
கற்றுத் தருகிறோம் தற்காப்பென
அணைக்க மறந்த தொலைக் காட்சியில்
இரவு முழுதும் ஓடுகிறது நீலப் படங்கள்
அதிகாலை பயறும் ஓட்ஸ் கஞ்சியும்
மதியம் சப்பாத்தி இரவு பழங்கள் என
பட்டியலிடுகிறது உணவு
இப்பொழுதெல்லாம் கிராமம் நகரமாகவும்
நகரம் நரகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது
சூத்திரங்களும்
எண் கணிதங்களும்
வேற்று மொழி இலக்கணங்களும்
அல்ஜீப்ராக்களும்
புரியாத புதிராகவே இன்னமும்
ஒரு வேளை இவை
சிறார்களுக்கு கற்றுத் தரும்
ஆசிரியர்களுக்கு தேவைப் படலாம்
நான் ஆசிரியனும் இல்லை
அதற்கான தகுதிகளும் இல்லை
எல்லாவற்றிலும் வரைமுறைகளை
பொருத்திக் கொண்டு
தொலைகிறது வாழ்வு
திருமணம் செய்து கொள்
இன்னொரு உயிர் மீதான
அளவற்ற அங்கீகாரம் இது
சந்ததிகளை உருவாக்கு
அவர்களில் உன் கனவுகளை
விதைத்து நாசமாக்கு

சில நேரங்களில் நான் நானாகவே
வாழ ஆசைப் படுவது என் இயல்பு
ஏனெனில் நான்
நிச்சயம் உங்களில்
ஒருவன் இல்லை,
ஒரு பறவையை ரசிக்கிறேன்
அதன் இறகுகளை தொடாமல்
நதியொன்றில் ஆடுகிறேன்
அதன் மூலம் பற்றி கவலை இல்லை
அது போலவே
வீட்டில் வளரும் பசுவும்
மதியம் ருசித்த திராட்சை பழங்களும்...

கண்ணாடியில் தெரிகிறது
என் முகம் மட்டும்...

இன்னும் எதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய்...

கடிதமென்றே எழுதத் துவங்குகிறேன் இதை...எத்தனையோ வருடங்களை தாண்டி நெடு நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்கும் பொழுது கடிதமென எழுதும் கலை கைவரவில்லை. இருந்தும் தொடங்கியாயிற்று...

ஒரு ஒய்ந்து அடங்கிய ரயில் பாதையில் தனியே அமர்ந்து கொண்டு இதை ஆரம்பிக்கிறேன்.ஒரு சிறுவனை போல தண்டவாளத்தில் காதினை வைத்து ஒலிகளை உணர முடியவில்லை என்னால். இப்போதிருக்கும் மன நிலையில், பயன்பாட்டில் இருக்கும் தன்டவாளமென இல்லாமல் மழையிலும் வெயிலிலும் நனைந்தும் காய்ந்து துருவேறிக் கிடக்கிறது. சில நாட்களாக அடித்துக் கொட்டிய மழையில் இருப்புக் கம்பிகளை மறைத்து உயர்ந்து நிற்கிறது புற்களின் கூட்டம். இன்னும் வெப்பம் தயாரிக்காத கதிரவனிடமிருந்து தப்பிய படி படர்ந்திருக்கிறது அதிகாலை பனி துளிகள்.என் கரங்கள் என் இரு அலை பேசிகளையும் கவனித்துக் கொண்டே இருக்கிறது... உன்னிடமிருந்து வரும் ஒரு குறுஞ்செய்திக்கோ, ஒரு தவறிய அழைப்புக்கோ...

தண்டவாளக் கம்பிகள் முன்னாளில் எத்தனை நீராவி இயந்திரங்களையும், பயணிகள் ஏற்றப் பட்ட பெட்டிகளையும் சுமந்திருக்கும்.எத்தனை மனிதர்கள் எந்தெந்த காரணங்களுக்காகவோ பயணம் தாங்கி இருக்கும் இந்தப் பாதை, இப்பொழுது கையசைத்துப் பார்க்கிறேன் அப் பயணங்களில் சென்றிருக்க கூடிய குழந்தைகளுக்கென... முன்னால் விரியும் கனவுக் காட்சியில் பதிலுக்கு கையசைக்கும் குழந்தைகள். பயணம் முடித்த பெட்டிகள் இப்பொழுது எங்கிருக்கும், ஒரு வேளை பயன்படாதென உடைத்து போட்டிருக்கவும் கூடும். அலை பேசியில் மெல்லிசை தவழ்கிறது, நீயோவென எப்பொழுதும் போல எதிர் பார்த்து ஏமாறுகிறது மனதும் நினைவும்...

பயன்பாட்டில் இல்லையெனும் பொழுதும் ஏன் இன்னும் இப் பாதையை, கம்பிகளை, குறுக்கு கட்டைகளை இப்படியே வைத்திருக்கிறார்கள். யாருடைய நினைவுப் பொருளாக இன்னமும் இது காலம் காலமாய் காத்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ உறவுகளை புதிதாய் ஒரு காலத்தில் மலர வைத்திருக்கலாம், எத்தனையோ காதலர்களை சுமந்திருக்கலாம், பின்னர் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களின் காதல்களையும். என் தலைமுறைக்குத் தான் தகுதியின்றி போனதோ என்னவோ...எப்போதோ ஒரு முறை தனிமையில் சந்திக்கும் காதலர்களும், விடுமுறை நாளன்று மதுப் புட்டிகளோடு கூடுபவர்களையும் தவிர்த்து, வேறு யாருடைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இப் பாதை.

என்ன இது உனக்கென்ன எழுதும் ஒன்றில் இருப்புப் பாதைகளைப் பற்றி எழுதுகிறேன்... சரி தான், இதே போலத் தான் தட தடத்திருக்கும் உன் மனமும் உன் அழைப்புகளை நான் நிராகரித்து மௌனமாய் இருந்த போதும்...எல்லாவற்றையும் பரந்து விரிந்து பார்க்கிறேனோ இல்லையோ, கொஞ்சம் புரிந்து கொள்ளவாவது செய்கிறேன். உன்னிடம் மட்டும் ஏன் இந்த அழிச்சாட்டியம் செய்கிறது மனசு. எந்த ஒரு நொடியிலும் அறிவை வைத்து உன்னையும் என்னையும் சிந்திக்க விடுவதே இல்லை. வெறும் உணர்ச்சி களின் கொந்தளிப்பாகவே மாறி விட்ட பிறழ்வு நிலையில் கோபம் கொண்ட மிருகமென மாறி விடுகிறது என் மௌனம். அதீத கற்பனைகளில் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லி விடலாம் ஒரு நொடியில், எனக்கு அந்தக் கவலைகள் இல்லை. இவ்வுலகில் நான் யாரையும் விட உன்னையே நம்புவேன்... என்னை விடவும். பிறகு ஏன்?

அருகில் உள்ள பாதையில் கடக்கிறது மின்ரயில். புகையில்லை, அருகாமை வெப்பமில்லை. அதிக பட படப்பும் இல்லை. அதிக வேகம் இருக்கிறது. குழந்தைகளும் மற்றவர்களும் வேகமாகவே கடந்து போகிறார்கள். இப்படித் தான் உன் மீதான என் கோபமும் கூட அதி வேகமாக கடந்து விடுகிறது. மிஞ்சும் அன்பைக் கொண்டு என்னை தவிக்க விடுகிறது அதே கோபம். மீண்டும் அழைக்கிறது அலை பேசி, ஆர்வமே இல்லாமல் எடுக்கும் பொழுது யாரோ ஒருவர் தஞ்சாவூருக்கு பஸ் எத்தனை மணிக்கு தம்பி என்கிறார்? என்ன பதில் சொல்ல... தெரியலைங்க என்ற படி துண்டிக்கிறேன்.

உண்மையில் உனக்கு நேசிக்கவும், அன்பை பகிர்ந்து கொள்ளவும் உறவுகளும் நட்புகளும் அதிகமாகவே இருக்கலாம். சில பகிர்வுகள் மட்டும் நமக்கானவை சில நம் கனவுகளுக்கானவை. தனிமையில் புலம்பித் தவிக்கும் எனக்கு, உன்னைத் தவிர வேறு யாரிடமும் சிரிக்கவும், அழவும் தோன்றுவதில்லை என்பது மறுக்க இயலா நிதர்சனம்.நான் கோபம் கொள்பவன் தான் ஆனால் சந்தேகிப்பவன் அல்ல. எனக்கென்று ஒரு இடம், நானிருந்த ஒரு இடம், வேண்டாம் என நீயே சொல்லி தள்ளி வைத்த ஒரு இடம்... எப்படி முடிகிறது உன்னால், அதை வேறொன்றால் நிரப்ப...காரணங்களே இல்லை எனும் போதும்... அது என் இடம்.

எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி தான், ஏன் எழுதுகிறீர்கள்? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வசதியாய் இருக்கிறது... உண்மை உனக்குத் தெரியும், காரணம் அதுவல்ல... நீ என்னை நேசிக்க, நான் உன்னை நேசிக்க... உன் நேசத்தினால் எழுதத் துவங்கியவன், என் கனவுகளை வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகளில் வண்ணங்கள் எனத் தீட்டி உன் வீட்டுத் தோட்டத்தில் பறக்க விட்டவன். உன் கனவுகளை கடன் வாங்கி சில கற்பனைகளை கலந்து கவிதைகள் செய்து அதில் வாழத் துவங்கியவன்...இன்னும் சொல்வதென்றால் நான் வாழ்வது உன் நாட்களை கடன் வாங்கிக் கொண்ட பிறகு தானே...

கை நிறைய மீதமாய் நாட்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் இடுக்குகளின் வழியே ஒழுக விடுகிறேன். நீ இல்லாத நாட்கள், உன்னுடன் பேசாத மொழிகள், உன்னைப் பேசாத கவிதைகள்... போடி... நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல நீ இன்றியும் அமையாது என் உலகு...இத்தனைக்குப் பிறகும் ஏதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய் உணர்கிறேன்... உன் காதுகளில் சொல்கிறேன் ,அழைத்து விடு தேவதைகளின் ராட்சசியே...

மழை...



Nov 30, 2011

அவளும் அவன் கவிதையும் -பிறாபுல் சீலீடர்


அறிந்து கொண்டீர்களா
அவள் மாறிவிட்டாள் என்பதை.
அந்தக் கவிஞனால் கூட
அவளை அடையாளம் காண
முடியவில்லை.
அவள்
பிறர் அறியாமல்
மறைவாய்
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.

மனித மனங்களின்
மூலைமுடுக்குகளில்
நுழைந்து
ஆழம் பார்க்கிறாள்.
அவள் சுமந்து வரும்
உலகளாவிய செய்திகளில்
அதிரடி மாற்றங்களில்
கவிஞனின் கவிதை
தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கவிதைக்கு முதலிடம் தர
மறுத்தவர்களையும்
முழுமையாக
ஆட்சி செய்கிறது
கவிதையின் ராஜாங்கம்.

கவிதை
அவளைப் பலியாடாக்கிவிட்டது.
தன் தலையில்
கைவைத்துக் கொண்ட
பத்மாசுரனாய் அவள்.
வாதங்களிலும்
இசங்களிலும்
கிழிந்து தொங்குகிறது
அவள் கவிதையுடல்.
அவள் இருக்கையை
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.
அவளுக்கான அவள் முகத்தை
கவிதை
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ
நிலத்தைப் போல
உறுதியான
அவள் ஆளுமையை
கவிதை விரும்புவதில்லை.
காற்றைப் போல
அவளிருக்கட்டும்.
உலகத்தைச் சுற்றிவரட்டும்.
அவன் கவிதைகள் மட்டுமே
அவளை அடையாளம் காணட்டும்.
அவளுக்கும்
அவன் கவிதைகளுக்குமான உறவு
தலைமுறைகளாக
தொடரும் கதை.

கவிதை..
அதுதான்
அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
கவிஞனின் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் அவள்.

மற்றபடி
அவனும்
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்
வந்துப்போகும்
ஒரு வலைப்பதிவு
அவ்வளவுதான்.

- மொழியாக்கம் : புதியமாதவி.

பிறழ்வின் காலடிகள்


இன்னும் ஈரமாகதான்
இருக்கிறது
குறுஞ் செய்தியில்
நீ புதைத்தனுப்பிய
முத்தங்கள்...

பெரு மழை யொன்றை
எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
யாருமறியாமல் கரைந்தழுக...

இலைகளற்ற மரத்தினடியில்
காத்திருக்கிறது
நிழல் வேண்டும்
என் கனவுக் கூட்டம்...

கிடைத்த வரை இலாபம்
என்பதான வாழ்க்கை வாழ
முடியாமல் வெட்கித் துடித்து
தானே சாகிறது மனது...

ஆசைகளும்
கோபங்களும்
காதலுமாய் பெருகும்
என்னில்
மனப் பிறழ்வின் காலடிகள்...

அரைக் கோப்பை தேநீரிலும்
நிறைத்துக் கொண்டே இருக்கும்
புகையிலுமே வாழ்ந்து விட
முடியும் என்றான போது
எப்படி குறையும் உன் மீதான
என் பெரும் காதல்...

சக்தி ஜோதியின் இரு கவிதைகள்...

காலையில் வாசித்த சக்தி ஜோதியின் இரு கவிதைகள்...

அலைச்சல்

காற்றின் ஈரத்தை
உணவாக்கி
உயிர்த்திருக்கும்
மரமென
அடி பெருத்து அசைகின்ற
முத்தம் ஒன்றை
நீண்ட அலகுடைய
கனவுப்பறவை
கொத்திக் கொண்டு செல்கிறது
பாலைவன மெங்கும்
இன்னும்
ஒருமுத்தம் தேடி.



வெளிப்பாடு

உன் நினைவில்
தாமரைக் கொடியெனச்
சுகித்திருக்க
கதிர்களால் உயிரூட்டுகின்றாய்

உன்னை விட்டகன்றால்
பிரிவுத்துயர்
என்னை வாட்ட
காய்ந்துச் சாகின்றேன்

நெருப்பை விழுங்கிக் கொண்டு
குளிர் ஒளியை வெளியெங்கும்
விரிக்கும் நிலவென

பிரிவின் வாதையைச் சுமந்து கொண்டு
புன்னகையோடு உற்றோரை
எதிர்கொள்கிறேன்

உன்னைப் பிரிகையில்
பெருகும் துயரத்திற்குக்
குறைந்தது இல்லை

நினைவின் மகிழ்வு.

நாளைய பறவையொன்று...


நேற்றைப் போலவே
இன்றும்
உதிர்ந்து போன அதே
கனவுப் பூக்களுடன்
விடிகிறது என் காலை...

உதிரம் சொட்ட
ஓடும் உயிரின் பின்னால்
துரத்திக் கொண்டே தான்
அலைகிறது
சில அரிவாள்களும்
கூர் மழுங்கிய
கத்திகளும்....

வெட்டப்படும் அடிமரத்தின்
உச்சிக் கிளையில்
அடைகாக்கும் பறவையொன்று
உயிர் தப்பிப் பறக்க
விழுந்து உடைகிறது
நாளைய பறவையொன்று...

ஓடிக் கொண்டிருக்கும்
நொடி முட்களுடன்
நகர இயலாமல்
துடித்துக் கிடக்கிறது
நீ இலா நாட்கள்...

Nov 13, 2011

சிறு துளிகள் - நான்கு


நீ அழும் போது
ஆறுதல் சொல்ல முதலில் வருபவர்
நீ நேசித்தவராக இருப்பதில்லை...
உன்னை நேசித்தவராகவே இருக்கிறார்கள்...

எனக்கும் உனக்குமிருந்த
அனைத்து வேற்றுமைகளும் காணாமல் போனது
காதலெனும் ஒற்றுமையால்...

எல்லோரிடமும் புதைந்திருக்கிறது
யாரிடமும் சொல்லப்படாத ஒரு உண்மை...

எல்லோரும் விடுமுறையில்
சுற்றுலா செல்வது போல
நான் உன் ஊருக்கு வருகிறேன்,
நீ வாழும் வீட்டை ரசிக்க...

ஏன் என்கிற
உன் ஒற்றை கேள்வியை
எதிர் கொள்ள இயலாமல்
நீ வரும் வழியில் பதுங்குகிறது
என் காதல்...

உன்னைப் பற்றிய கவிதைகளில்
ஏதாவது ஒரு எழுத்துப் பிழை
திருஷ்டிப் பொட்டென...

சில நேரங்களில்
தடம் புரண்டு விடுவது
ரயில் மட்டுமல்ல,
வாழ்வும்...

கடைசியாய் நான்
உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது
சொல்லாமல் விட்டது
உன்னை நேசிப்பதை மட்டும் தான்...

நீ செல்லும் வரை
நீ தான் என் உலகம்,
நீ சென்ற பின்பு
என் உலகெங்கும் நீ...

நீ தூக்கி எறிந்து விட்டுப் போன பின்னரும்
நம் நேசத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு
அழுகிறது மனசு...

இரவு தொடங்கியதும்
கனிகள் தேடும்
வௌவாலெனப் பறக்கிறது
நினைவுகள் உன்னைத் தேடி...

ஒரே ஒரு முறை
தோளில் சாய்ந்து
சிந்திச் சென்ற கண்ணீர் துளிகள்
இன்னும் சுடுகிறது என்னில்...

என் முகம் பார்த்த பின்
நீ உறங்கச் செல்வதும்,
உன் முகம் பார்த்த பின்
நான் உறக்கம் கலைவதும்...
வடிவங்களற்ற கவிதை மொழி...

உனக்கென்ன பேசாமல் சென்று விட்டாய்,
இன்னும் உன் பின்னால்
அலைந்து கொண்டிருக்கிறது இதயம்
உன் சொற்களை பிடித்து என்னிடம் சேர்க்க ...

நீ கவனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
எத்தனை பறவைகள் பறக்கின்றன
மனதினுள்...

பெற்றோரை இழந்து
தவிக்கும் சிறுவனாய்,
உன் மொழியின்றி தவிக்கிறது
எனது கவிதையொன்று...

உன் குரல் கேட்கா நாளில்
எதோ ஒன்றை இழந்து விட்டதாய் உணர்கிறேன்...

தெருவெங்கும் புழுதி காற்று கண் நிறைக்க
நினைத்துப் பார்க்கிறேன்
என் கண்ணில் விழும்
ஒரு தூசுக்கென
நீ பதறிய நிமிடங்களை...

என் வாசல் கொடியில் காயும்
உன் சுடிதார் பூக்களோடு
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி...

என்னை சலனப் படுத்துவதில்
உனக்கும் மழைக்கும் அப்படி என்ன போட்டி...?

உன்னிடம் கோபம் கொள்ளாமல்
யாரிடம் கோபம் கொள்ள...?
சரி வா!
சமாதானம் பேசலாம்
சண்டை போட்டுக் கொண்டே...

காத்திருக்கிறாள்

எப்பொழுதும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்
மழைகாலத்தில் குடையொன்றை தாங்கியபடி
கண்களில் மின்னி மறையும் கனவுகளோடு
கூர்ந்து நோக்கும் விழிகளில் வெறுமையோடு
ஒற்றை மலரோடு இல்லை மல்லிகை சரங்களோடு
மற்ற அனைவரையும் போலவே
குழந்தை நினைவுகளோடு
இன்னும் இன்னும்
நிறைய சொல்ல முடியா
சோகங்களோடும் மகிழ்வுகளோடும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்...

சிறு துளிகள் - மூன்று

தனிமையில் விடப்பட்ட
பிறகும் செவிகளில்
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது
உன் குரல்....
விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம்,
கூடவே நம்மை ரசித்துக் கொண்டு
மழை....
தனிமை பொழுதுகளிலெல்லாம்
என்னை நீயாக மாற்றி விடுகிறாய்,
சில நேரங்களில் உன்னை நானாகவும்...
மழைக் குளிரால்
நடுங்கிக் கொண்டிருந்தது ஊர்,
நம்மைச் சுற்றி கததப்பாய்
நெருப்பு வளையம் செய்தது காதல்...
மழை நனைந்து,
நீ நம் அறை நுழைகையில்
காதோரம் வழியும் மழைநீரில்
கூடவே இறங்கி தடுமாறுகிறது என் காதல்...
நீயாக இல்லையென்று சொல்லி
பிரிந்து போகும் வரையில்
நான் தந்தையாகத் தான் இருந்தேன்...
விடுகதைகளுக்கு விடைகளை
யோசிக்கும் பொழுதெல்லாம்
கண்களை மூடிக் கொள்ளும் வழக்கத்தை
எங்கு கற்றுக் கொண்டாய் நீ...
ஒரு கவிதையை உனக்கென எழுதி,
உன் வருகைக்கு காத்திருக்கையில்
ஓராயிரம் கவிதைகள் மனதில்...
நானின்றி நீ அங்கு
என்ன நினைப்பாயோ,
அதையே தான் நானும்
இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
நீ இல்லாத சில நாட்களில்
நான் வாழவே இல்லையென்பது
உனக்கு தெரியும் தானே...
கோயிலுக்கும் பொம்மைக்கும்
பெயர் பெற்ற ஊரில் நீ இருந்திருந்தால்,
சிலைகளும் பொம்மைகளும்
உன்னைப் போலவே இருந்திருக்கும்...
நீ என்ன செய்தாலும்
உன்னை விட்டு ஒரு நொடி கூட
விலக விடாதிருக்கிறது
உன் அன்பு...
எப்பொழுதும் இழப்புகளே
மிஞ்சுகிறது சமரசங்களற்ற வாழ்வில்,
இருந்தும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
உன் சுவடுகளை வாழ்வெங்கும்....

சிறு துளிகள் - இரண்டு

எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்ந்தது போதும்...
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
வாழ்வோம் இனி...

உன்னுடன் பேசாமல்
இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதை தவிர
வேறு எதையும் செய்வதில்லை நான்...
நீ இன்றி நான் வாழ முடியாது
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
நீ வந்துவிடவில்லை
நான் செத்துவிடவில்லை
நம்மைப் பார்த்து சிரிக்கிறது
காதல்...
நீ
இந்த ஒற்றை எழுத்தின்
வளைவுகளில் கூட சிக்கிக் கொண்டு
துடிக்கிறது இங்கொரு உயிர்...
என் எல்லா தவறுகளையும்
சரியாக்கியவள் நீ...
நீ போன பின்பு
தவறுகளே அற்ற வாழ்வு
மிகக் கொடுமையாய்...
வன்மையான சொற்களும்
கொடுமையான மௌனங்களும்
உன் மென்மையான இதழ்களுக்கு
கொஞ்சம் கூட பொருந்தவில்லை...
நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?
ஆம்....
ஏனெனில்
அது மகிழ்சியாக நடிப்பதை விட
சுலபமானது...
உனக்கும் எனக்குமான
சில ரகசியங்களை
நீ மழையிடம் சொல்லி இருக்கிறாய்
நதியிடமும்
ஒரு இசை தட்டிடமும்
மூன்றுமாய் எனை கேலி செய்ய
இனி நான் நம் ரகசியங்களை
கடலிடமும்
பறவைகளிடம்
சொல்லப் போகிறேன்...
வருந்திச் செல்கிறது
ஒரு மனங் கொத்திப் பறவை...
உன்னை விட
என் மீது அன்பு செலுத்த
வேறெவரும் இல்லையென.....
என்னை விடவும்
எனக்கு நெருக்கமானவள்
நீ...
கல்லறை வாசகத்தை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், இந்த வாசகங்களை செதுக்க நான் கேட்டுக் கொள்வேன்...

" அவன் இறந்துவிட்டான் - உயிருடன் இருக்கும் போதே..."
தினமும் கதறி
அழுவதை வேடிக்கை
பார்த்த பின்னரே
தாலாட்டை துவங்குகிறது
இரக்கமற்ற இரவுப் பொழுது..
இப்படித்தான்
அன்பு தொலைந்து போகிறது
இந்த நேரத்தில் அன்பு செலுத்த வேண்டும்
இத நேரத்தில் அன்பு செலுத்தக் கூடாது
என்கிற விதிமுறைகளுக்கான விதிகளை
நாம் விதித்துக் கொள்கிற
நிமிடங்களில்...
நாம் சண்டை போட
காரணங்களே தேவை இல்லை
காதல் மட்டுமே
போதும்...
தேவையற்ற காரணத்தைச் சொல்லி
அலைகிறேன்
உன் வீடிருக்கும் தெருவில்
உனைப் பார்த்து விட...