பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 30, 2011

வீர வணக்கம் தோழியே...


செங்கொடியே...
செந்தமிழே...
உனைக் கருக்கி உயிர் துறந்து
ஆத்திகனுக்கு கடவுளானாய்
என் போன்றோருக்கு தாயானாய்...
வல்லூறுகளிடம் வரம்
கேட்கும் இழிநிலையில் நாம்...
இங்கே உன் தியாகம்
விற்கப் படுகிறது செய்தி தாள்களில்...
சட்டங்கள் மக்களுக்காக!!
இங்கே சட்டமே கொல்லுமெனில்...
நீ உயிர் பிழைத்திருந்தால்
உன்னையும் ஏதாவது ஒரு
சிறையில் அடித்திருப்பார்கள்
தற்கொலை முயற்சியென...
இனி தெருவில் இறங்கி
உரக்கக் கத்துவோம்
இரங்கா இதயங்களிடம்...
இனியேனும் அமைதியாய் உறங்கு
தமிழுக்காக நீ தந்த உயிரை
தமிழ் உள்ளவரை
நினைவு கொண்டிருப்போம்...

வீர வணக்கம் தோழியே...

Aug 28, 2011

முதல் சிலிர்ப்பு


கண்கள் சிரிக்க
சிந்தை மயங்கி கிடந்த
நடுக்கம் பெற்ற மனதில்
பயமும் மகிழ்வுமாய்
அந்த நொடிகள்....

விரல்கள் தீண்டினாய்
மென்மையாய் தூண்டிவிட்ட
தீபமாய் மாறி
எரியத் துவங்கினேன் ...

உனக்குள் நானும்
உணரும் நீயுமாய்
கலந்திட்ட காதலின்
முதல் சிலிர்ப்பு அது...

யாருக்கும் கேட்காமல்
நீ கொடுத்த முத்தத்தின்
மெல்லிய ஓசைகளை
உணரும் என் காது மடல்கள் ...

ஒற்றை விரலால் என்
முகத்தில் நீ எழுதிய
கவிதைகளின் பொருள்
இன்னும் தேடி அலைகிறேன் நான்...

கழுத்தின் உதடு வருடல்கள்
முதுகில் வரைந்த ஓவியங்கள்
சிவந்து போன கன்னங்களுடன்
மயங்கும் விழிகளில்
நீங்கா கனவுகள்...

ஈரக் கூந்தல்
விரல் நுழைத்து
உச்சி முகரும் அந்த நொடியில்
உணர்வுகள் தடுமாறும்...

உடலெங்கும் நனைத்தது
வியர்வையா
உன் முத்தங்களா
ஐயம் கொண்டு இதழ் வெடிக்கும்...

உடைகள் பாரமென
பாரங்கள் சுகமென
பயமொன்று உள் நுழைய
வெளியேறுகிறது மீதமான
தயக்கமொன்று...

வெட்கத்தால் முகம் சிவக்கும்
என்னை முழுதுமாய்
சிவக்க வைக்கும்
கலை ஒன்றை எப்படி
அறிந்தாய் ...

அனுமதி கோரும்
பார்வையில்
அந்த அரைநொடி கணமொன்றில்
புன்னகையால் சம்மதம்
தருகிறேன் நான் ...

தங்கஆபரணங்கள் நீக்கி
உயிரை அணிகிறாய்
குழைந்த தேகத்தில் அவிழ்கின்றன
இன்ப முடிச்சுகள் ஒவ்வொன்றாய்
ஒரு மெல்லிசையின் தேடலென...

கொடுத்தலுக்கும்
பெருதலுக்குமான போராட்டங்கள்
பந்தயக் குதிரைகளென
வேகமான மணித் துளிகள்
அனலடிக்கும் குருதியின்
அடங்காத தொடக்கமாய்..

இன்பமும் வேதனையும்
கலந்த இடமொன்றில்
இருளும் ஒளியும்
சங்கமித்த காலம்
கண் மூடிய ஏகாந்தம்...

உடல் சிலிர்த்து
நீயடங்கும் வேளையில்
இறுகி கொள்ளும்
கைகளை பிரித்து விட
நிமிடங்கள் போதுமானதாக இல்லை...

வெப்பப் பெருமூச்சில்
உனை அணைத்து
விரலால் தலை கோதி
நெற்றியில் நான்
தந்த முத்தத்தின் ஈரம்
என் உதடுகளில் இன்னும்
எஞ்சியிருக்கிறது உனக்கென ...

சொல்லாத நிஜங்கள்


ஏதோ ஒரு சுமையை
மனதில் ஏற்றி விட்டதாய்
குழம்பித் தவிக்கும்
பொழுதுகளில் நான்...
என்ன செய்யப் போகிறாய்
என்னை நீ
இப்படியே தவிக்க விடுவதால்
முரண்பட்டு திரிகிறது
எனது நாட்கள்...
பேச வேண்டும் என
பேசும் சொற்களில்
நிறைய உணமைகளை
மறைத்து விடுகிறாய் போலும்...
மரகொத்தி ஒன்றின்
இடைவிடா முயற்சியென
துளைகளாகிக் கொண்டிருக்கிறது
வினாக்களின் விசாரணை...
குரல்வளை இருக்கும்
கயிருகளென திணறிக்
கொண்டிருக்கிறேன் என்
தனிமைப் பொழுதுகளில்...
விடுபட நினைத்து
உயிர் கழற்றும் வேளையில்
கனவுகளோடு வருகிறாய்
கரங்களை பிடித்துக் கொள்ள...
முடிவிலா ஏக்கங்கள்
திசை தேடும் பயணங்களென
உன்னை தேடும் என்
உயிர் காற்றில் நிரம்பி
தவிக்கிறது நமக்கான
ஒரு வாழ்வு...

கலர் மீன்களும் கடிகார முட்களும்...


அணிலோ
கிளி ஒன்றோ
வருமென காத்திருக்கிறது
இடி தாக்கிய
ஒற்றைப் பனை மரம்...

காகங்களே இல்லா
உலகொன்றில் நதியென
நானும்
அகத்தியனின் கமண்டலமாக
நீயும்..

திருவிழா கால
குழந்தைகளாடும்
குடை ராட்டினத்தில்
புலியை துரத்துகிறது
மானொன்று...

கண்ணாடிக் கூண்டுக்குள்
அலைந்து கொண்டே
இருக்கின்றன
கலர் மீன்களும்
கடிகார முட்களும்...

என் மரணம் பற்றி
எனக்கு தெரியும்
காதல் முடிந்து கனவுகள் முடங்கி
எங்கே எப்பொழுது
இது மட்டுமே ரகசியம்...

என்னால் வரிசையாக
அடுக்கப்பட்ட விண்மீன்கள்
எரிகற்களாய் மாறிப் போய்
கிழே விழுகிறது
சிரிக்கிறது நிலவு...

அதிகம் சிரிப்பவனும்
அதிகம் சிரிக்கவைப்பவனும்
தன்னுள்
அடங்காத துயரத்தை
வைத்திருக்கிறானோ என்னவோ...

உன் வீட்டுக் குப்பைத்
தொட்டியில் கிழித்துப்
போட்ட கடிதங்கள்
அனைத்தும் எனக்காக
நீ எழுதியவை...

பேசத் துடித்து
தனித்திருக்கும் உனக்கு
உன்னுடன் மட்டும்
பேசும் மொழியொன்றில்
கவிதைகளை அனுப்புகிறேன்
இவை பேசும்...

அதிகாலை கவிதைகள்
விடியலோடு கரைந்து போகிறது
எனினும் காலவெளிகளில்
கலந்து இருக்கும்
ஒரு கருவைப் போல...

Aug 26, 2011

பலி



மெய்மையும் பொய்மையும்
இரண்டற கலந்து விட
தனிமை வெளி
நிலவின் கொஞ்சலாய்
தாயின் மடியாய்
வண்ணத்துப் பூச்சி ஒன்றின் இறகுகளாய்
கனவுகளின் வர்ணங்களாய்
இரவு விளக்கின் மெல்லிய ஆறுதலாய்
இன்னும் இன்னும்
அனைத்துமாய் ஆன பின்
யதார்த்த வாழ்வின்
விரிசல்களில் தொடங்குகிறது
நமக்கான கண்ணீர் ஊர்வலம்
முகம் காணமுடியா பொழுதுகள்
வறண்ட புன்னகையின் சிதைவுகள்
மூடப் பட்ட பாத்திரத்தின்
கொதிக்கும் நீரென நிமிடங்கள்
நிழல் கொடுக்க மறுக்கும்
மரமொன்றில் கூடு தேடும் தனிப் பறவையாய்
வெறுமை சுவற்றில்
கரிக்கோடுகளாய் கனவு வெடிப்புகள்
கொடுக்க எதுவும் இல்லாததால்
பெறவும் தகுதி இல்லாதவனாய்
சில நினைவுகள் தொலைக்க
வாழ்வை பலியிட தொடங்குவேன்
தொலைக்க முடியா சில நினைவுகளுக்கு
என்னையே பலிகொடுக்கலாம் நான்...

Aug 25, 2011

மறக்க துடிக்கும் நாளொன்று...


நெடு நாட்கள் கழித்து
புகையால் நிரம்புகிறது
நுரையீரல்
இப் புகையோடு சேர்த்து
உன் நினைவுகளையும்
வெளியேற்றி விட
முடியுமா என்ன?

எத்தனையோ மறக்க
நினைத்த கணங்களோடு
சில நாட்களும்
சேர்ந்து கொள்ள
நீள்கிறது காலம்...

நினைப்பதையெல்லாம்
சொல்லிவிட முடியாது
அது போல் தான்
எழுதி விடவும்
முடிவதில்லை என்னால்...

இதுவரை முற்றுப் புள்ளியில்
முடிந்து விடாத என்
கவிதைகளில்
இறுதி வார்த்தைக்கு பிறகு
நழுவி விழுகிறது
கண்ணீர்த் துளியொன்று...

அன்று யாருமற்ற
தனிமை பொழுதின் தொடக்கத்தில்
பூக்களோடு நான் காத்திருந்தது
உனக்கு வாழ்த்து
சொல்வதற்கென்று
நினைத்தாயா...

காலணிகள் எப்பொழுதும்
தெருவின் ஓரத்திலேயோ
வீட்டின் மூலையிலோ
அனாதையாய்
விடப் படுகின்றன
மனதின் ஓரமாய் நானும்...

உறவுகளும்
நண்பர்களும் வாழ்த்த
மீண்டும் மனம் நகரும்
அந்த காலம் தேடி
நான் இல்லாத அந்த
நாட்களை நோக்கி....


மறதி ஒரு வரம்
மறக்க வேண்டிய நிமிடங்கள்
மறக்க முடியா நிகழ்வுகளாய்
மாறி விடுவது
வேடிக்கை தான்...

நிஜங்களும்
நிழல்களும்
ஒன்றாக முடியாதென
உண்மை மெதுவாய் சிரிக்க
விடிகிறது
சிவந்த கண்களோடு
மறக்க துடிக்கும்
அதே நாளொன்று...

Aug 23, 2011

தேவதை





உன்னைப் போல ஒரு பெண்
குழந்தை வேண்டுமென
ஆசையாய் பெற்ற
மகளிடம் மாட்டிக்கொண்டு
விழித்த கதை தெரியுமா உனக்கு...
அது நீ உன் தாயை
பார்க்கச் சென்ற ஞாயிறு
தூங்கி விழித்த பின்
அருகில் வந்து
தோள்களில் ஆடி
விளையாட அழைக்கிறாள்
மரமொன்றின் கீழ்....

பிஞ்சு குரல் ஒலிக்கிறது
அப்பா இதன் பெயரென்ன?
"மரம்" என்கிறேன் நான்
பிறகு ஏன்
எங்க மிஸ்"tree " என்கிறாள்?
அது ஆங்கிலம் என்றேன்...
இது என்ன?
ஒரு பூவை காட்டி
மலரென்றேன்
ஐயோ எங்க மிஸ் flower என்கிறாள்
அதுவும் ஆங்கிலத்தில் தான்
என்றேன்...
எல்லா மொழியிலும்
ஒரே பேரு தான இருக்கணும்
ஏன் வேற வேறயா இருக்கு? என்கிறாள்
சிறிது நேரம் மௌனமாகிறேன் நான்

மீண்டும் தொடர்கிறாள்
வேறு ஒன்றிலிருந்து
என்னை இங்கே பாப்பா
என்கிறீர்கள்
என் பள்ளியில் என்னை
பெரிய பெண் என்றே
அழைக்கிறார்கள் என்றாள்
நீ மற்றவர்களை விட
உயரமாக இருப்பதால்
என்றேன்...
அப்பா உங்களுக்கு
பூதமும்
பூச்சாண்டியும் தெரியுமா?
தெரியாது என்றேன்,
எங்க மிஸ்க்கு தெரியும்
படிக்கலான புடிச்சு குடுபாங்க...


அம்மா எப்ப வருவாங்க?
சாயந்திரம் என்றேன்
அது எப்போ வரும்?
சூரியன் மறையும் போது
சூரியன் ஏன் மறையுது?
அதுக்கு ஒய்வு வேணுமில்ல
அப்போ அதுக்கு வீடு இருக்கா?
உலகம் தான் அதனோட வீடு
வீட்டுகுள்ள எப்படி போகும்?
...........
.....
....
..

ஒய்ந்து உறங்கும் வேளையில்
புன் முறுவல் முகத்தில்!!
ஒரு வேளை தேவதைகள்
தேவதைகளின் கனவுகளில்
மட்டும் தான் வருவார்களோ?
எல்லாம் சரி....
இக் குட்டி தேவதையின்
கேள்விகளுக்கு
எப்படி பதில் சொல்கிறாய்
என் பெரிய தேவதையே!!
எனக்கென்னவோ
ஒரு குட்டி தேவதை
போதாதென்றே தோன்றுகிறது
எப்பொழுது வருவாய்?

இடைவிடாத ஏக்கங்கள்


ஒரு நாளின் நள்ளிரவுப்
பொழுதின் தொடக்கத்தில்
உன் கன்னத்தில் பதித்த
முத்தத்தின் ஈரத்தை
சுமந்து திரிகிறது உன்
வீட்டு வரவேற்பறை காற்று...

மின்னலென பார்வைகள்
புன்னகைகள்
ஆதரவாய் தலை கோதிய
விரல்களென அத்தனைக்கும்
ஆசைப் படுகிறது
விலகி வந்த உயிரொன்று...

நிலவின் ஒளியில்
பார்த்த உன் முகத்தை
பகல் பொழுதில் புகைப் படங்களாக்கி
ரசித்து மகிழ்கிறது
இடைவிடாத ஏக்கங்கள்...

வறண்டு போன பாலை நிலத்தில்
சிறு சாரலென நீ பொழிந்து போன
மழையில் மலர்ந்திருக்கிறது
சில கனவுப் பூக்கள்
ஒரு வேளை நாளைய
கண்ணீர் பூக்களாகவும்
இருக்கக் கூடும்....

மழை கானா பூமியில்
சுமக்கும் குடையென
உன் நினைவுகள்
பாரம் என தூக்கி
எறிய முடியவில்லை என்னால்...

நேசிப்பதற்கு எப்பொழுதுமே
இரண்டு இதயங்களும்
பிரிந்து செல்ல ஒரு
இதயமுமே
போதுமானதாக இருக்கிறது...

என் நினைவுகளில் நீ
அங்கு விழித்திருக்கலாம்
நமக்கான கனவுகளோடு
நானும் இங்கு விழித்திருக்கிறேன்
உனக்கான கவிதைகளோடு...

ஒற்றை காகமென


அன்புத் தோழியே
நலமா...
நாம் பேசிக் கொண்டிருக்கும்
இந்த நாட்களிலேயே
உன்னுடன் பேசாமல்
சில எண்ணங்களை
ஒளித்துவைக்கிறேன் நீ
வேதனை கொள்வாய் என...
மாற்றிக் கொண்ட
மின்னஞ்சல் கடவுச் சொற்களோடு
காணாமல் போயிருக்கும்
என் மீதான
உன் நம்பிக்கைகளும்...
பணியின் நெருக்கடிகளும்
உறவுகளின் கண்டிப்புமாய்
இனி பேச்சுக்கள்
குறுஞ் செய்திகளாகும்
நாட்களை எதிர் நோக்கி என் காலம்...
என்ன செய்வது என்று
எனை கேட்கும் கேள்விகளில்
மறைந்திருக்கிறது உன் தவிப்பு...
கொடுத்து விட்ட மனதிற்கு
காதலை பெற்றதன்
விலையாக பறி போகலாம்
நம் பெயர் சொல்லாத உறவு...
தினமும் என் அலைபேசியில்
ஒலிக்கும் உன் குரல்
நினைவில் படிந்து
நீங்க மறுக்கும் கனவெனப்
போய்விடுமா என்ன?
நடு இரவில் கரைந்து
செல்லும் ஒற்றை காகமென
அலைகிறேன் வெளியெங்கும்
நம்மைச் சுமந்து கொண்டு
நீ வரும் நாள் ஒன்றை எதிர் பார்த்து...
வரா விட்டால்
ஆறுதல் சொல்லி விடாதே
எனக்கு தெரிந்தே இருக்கிறது
என்னை நேசிக்கும்
எல்லோரும் தயாராய்
வைத்திருக்கிறார்கள்
பிரிந்து செல்வதற்கான
ஒரு காரணத்தையும்....

Aug 22, 2011

நினைவுகளின் மிச்சத்தில்


ஒவ்வொரு நாளின்
முன்னிரவுப் பொழுதுகளில்
நான் விழித்திருக்கக் காரணம்
நீயாகவும் இருக்கலாம்....
இதுவும் கடந்து போகும்
நிலையில் இல்லை நான்
எதையும் இழக்கா
நினைவுகளின் மிச்சத்தில் ...
இதே தெருவில் ஆயிரம் முறை
நடந்தவன் தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
கொதித்துக் கிடக்கிறது
தெருவும் நீ நடந்த இதயமும் ...
உறக்கம் தொலைக்கும் இரவுகளில்
நிலவை ரசிக்கும் மழலையாய்
உன் நினைவுகளை
ரசிக்க பழகி விட்டேன்
ஒரு வேளை நீயும்
வாழ்வின் விதிகளால் கட்டுண்டு
அதே தெருவில் விட்டு
வந்திருக்கலாம் எனக்கான உன்னை..






Aug 13, 2011

மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


ஆகவே தான் கேட்கிறேன் நீங்கள்
மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று?
அவர்கள் எப்பொழுதும்
நிலைத் தன்மையையும்
நம்பிக்கையையுமே எதிர் பார்கின்றனர்
நானோ சாகசத்தையும்
தெரியாத புதிரையும்...
நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
நானும் உங்களை..சரி தானே!
தோழமை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்றால்
"ஆமாம்" என்பேன்
நீ இல்லாமல் தனியாக வாழ முடியுமா என்றால்
அதற்கும் "ஆமாம்" என்பேன்...
ஆண்களே எப்பொழுதும்
ஒரு வீட்டை நிர்வகிக்க
காதல் செய்ய
குழந்தைகளை வளர்க்க
பணம் சம்பாதிக்க
வெற்றியாளராக விளங்க
அனைத்துமாய் எதிர் பார்க்கப் படுகிறான்..
உங்கள் நாடி நரம்புகளில்
பரவசம் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்பதே
உங்கள் விருப்பமாய்...
ஆனால் அதில் ரத்தம் தான்
ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்பதை
மறந்து விடுகிறீர்கள்...
நான் வற்புறுத்தினால்
எப்பொழுதும் இல்லாத ஒன்றைப் பற்றி
அதிக பணமும் சுதந்திரமும் வேண்டும் இல்லத்தரசி
காதலியை இழந்து விடுவோமோ என
பயந்து கொண்டிருக்கும் காதலன்
விரும்பிய பேரத்தை முடிக்காத வியாபாரி
பாடகராக விரும்பும் வைத்தியர்
அரசியல்வாதியாக விரும்பும் பாடகர்
விவசாயியாக விரும்பும் எழுத்தாளன்
இப்படி என்னவெல்லாமோ...
ஆகவே உங்களை மீண்டும்
ஒருமுறை கேட்கிறேன்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

Aug 12, 2011

இரோம் ஷர்மிளா


நேற்று ஒரு பதிவை கணினியில் எழுதிக் கொண்டிருந்த பொழுது தோழர் சந்தோசு செல்வா அரட்டையில் வந்தார்... பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம், சேகுவேரா, ஈழத் தலைவர் பிரபாகரன் ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது " மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பற்றி சொன்னார்.. மிக சமீபத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் வாசித்த நினைவு வந்தது... நாம் அனைவரும் விளம்பரப் படுத்தப் பட்ட அன்னா ஹசாரே போன்றோரை மட்டுமே தூக்கிப் பிடித்து கொண்டிருக்கிறோம்... வட கிழக்கு மாநிலங்களில் இந்திய பேரினவாத அரசு எப்பொழுதும் முறைகளையே கையாண்டு வருகிறது.. நாம் இந்தியாவின் வடகிழக்கு மாநில முதல்வர்களின் பெயர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கப் போவதில்லை... இங்கே இரோம் ஷர்மிளா குறித்த சில தகவல்கள்....

"மணிப்பூர் அயர்ன் லேடி" அல்லது "Menghaobi" என்று அழைக்கப்படும் ஷர்மிளா(மார்ச் 14, 1972 இல் பிறந்தார்,பெற்றோர் கேட்ச் நந்தா (தந்தை), Ongbi சக்தி (அம்மா) ஒரு சிவில் உரிமைகள் ஆர்வலர், அரசியல் ஆர்வலர், மற்றும் கவிஞர் . அவர் முதல் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வன்முறை சட்டங்கள் இது ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம், 1958 (AFSPA), நீக்கப் பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உணவு மற்றும் நீர் மறுத்து, அவர் "உலகின் மிக நீளமான பசி" என்று அழைக்கப்படுகிறார்.

நவம்பர் 2,2000 தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பத்து அப்பாவி மக்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனும் இந்திய துணை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்."மலோம் படுகொலை" என்று அழைக்கப்பட்ட இந்த கொடிய நிகழ்வு இந்திய வன்முறை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப் படவே இல்லை. அக்கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தண்ணீர் இன்றி போராட்டத்தை துவக்கினார் ஒரு கால்நடை தொழிலாளியின் 28 வயது மகள். அவர் இரோம் ஷர்மிளா.

அவர் உண்ணா விரதம் தொடங்கிய மூன்று நாட்களுக்கு பின்னர், போலீஸ் மூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 309 கீழ் சட்டவிரோத "தற்கொலைக்கு முயற்சி", என்கிற பேரில் கைது செய்யப் பட்டார் , பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை வேகமாக சீரழிந்து, காவலில் பின்னர் வலுக்கட்டாயமாக உயிரோடு வைக்க nasogastric செருகல் பயன்படுத்த பட்டது . அதிலிருந்து IPC பிரிவு 309, இன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், ஷர்மிளா கைது செய்யப் படுவதும் வெளியே விடப்படுவதும் வழக்கமாகிப் போனது. மீண்டும் கைது "தற்கொலை முயற்சிகள்" [அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து] ஒரு வருடம் நீட்டிக்க மீண்டும் மீண்டும் தண்டிக்கப் பட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் 2000 ல் இருந்தது "காலவரையறையின்றி ஒரு கிளர்ச்சி" என்ற சந்தேகத்தின் பேரில் எந்த குடிமகனையும் தடுத்து அனுமதிக்கும் AFSPA,. சட்டம் எதிர்ப்பு மற்றும் சித்திரவதை, மனித உரிமைகள் மறுத்தல் , கட்டாய காணாமல் போதல் ஆகியவற்றை பொது மக்களிடையே கடைப்பிடித்து வருகிறது.


அவருக்கு 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்ய ஒரு மகளிர் அமைப்பு கோரியது.அவருக்கு "அமைதி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உயர்வு மற்றும் வாதிடும் செயல்படும் ஒரு சிறந்த நபர் அல்லது குழு," இது மனித உரிமைகலுக்கான Gwangju பரிசு 2007 இல் வழங்கப்பட்டது."மக்கள் காவல் துறையினர்" என்ற லெனின் "ரகுவான்ஷி" விருதை பகிர்ந்து மனித உரிமைகள் குழு.

28 நவம்பர் 2010 அன்று, பிரிட்டன் பசுமை கட்சி தலைவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கெய்த் டெய்லர் ஷர்மிளா கோரிக்கையான AFSPA நீக்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இது போன்ற தேவதைகளும் இந்த மண்ணில் பிறந்தது துயரப்படவே தவிர வேறெதற்கும் இல்லை. வணங்குகிறேன் தோழி.

நன்றி தோழர் சந்தோசு செல்வா... இந்த தோழியின் புகைப்படத்தை உங்கள் முகவரியாக கொண்டதற்கு...

Aug 11, 2011

நினைவு காலங்களில்....






நினைவிருக்கிறதா?
இல்லை நினைவு படுத்திக் கொள்ள என்னைப் போலவே காலத்தின் ஏணிகளில், வருடப் படிக்கட்டுகளில் கிழிறங்கி தயக்கமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா?... மனிதன், வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் எத்தனையோ இருந்தாலும், எல்லோருடைய நினைவிலும் நிச்சயம் இருக்கும் அந்த பருவ கால ஈர்ப்பு, காதலின் ஞாபகங்கள் என்றும் பசுமையாக.. என் மனமும் விரிகிறது உனக்காக வாழ்ந்த அந்த சில காலங்களின் இனிமையான கனவுகளில்....

கண்களின் கண்கள் சந்தித்தோ, குரல் கேட்டு மயங்கியோ தொடங்கவில்லை நம் உறவு... நமக்கான தொடர்பை உறவேன்றே நம்புகிறேன், நட்பென்றும் காதலென்றும் சொல்ல இயலாது.. நீ அனைத்தும் கடந்து என்னில் நிலை பெற்றவள். உறவென்றே இருக்கட்டும் அதில் தான் சொல்ல முடியா அத்தனை பந்தங்களும் இருக்கின்றன.

சரியாக இயங்காமலோ, இயக்கத் தெரியாமலோ என்னை அழைத்தாய்... நான் பழுது நீக்குபவன் தொலைபேசி இயந்திரங்களை... எத்தனை சொல்லியும் புரியவில்லை உனக்கு... வேறு வழி இல்லை என்று பதினைந்து நிமிட நடைக்குப் பின் அடைந்தேன் உன் அலுவலகம், வியர்த்த முகத்துடனும் அதில் நனைந்த உடையுடனும்...

நான் சரி பார்க்கும் பொழுது சரியாகவே வேலை செய்தது உன் தொலை பேசி. கோபம் இருமடங்காய் மாற, கொட்டி விட்டு வந்தேன் நெருப்பில் கலந்த வார்த்தைகளை... திரும்பி என் அலுவலகம் வருகையில் அலறிக் கொண்டிருந்தது என் தொலை பேசி, கையிலெடுத்து செவி மடுக்க " மன்னியுங்கள்" என்றாய், உன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு...

தொடர்ந்து வந்த நாட்கள், இதோ இதனை மகிழ்வும் வேதனையும் எழுத காரணமானவை. எனக்கென நான் கனவுகண்ட பெண்ணின் சாயலோடு என்னில் நுழைய நினைக்கிறாய் அன்று. விருப்பங்கள் கேட்டாய், பிடித்த திரைப் படம், வண்ணம், எழுத்துகள், பாடல்கள், பாரதி எல்லாமும்... இறுதியில் கேட்காமல் கேட்டாய் " உன்னை எனக்கு தருவாயா?" என....

என் மீதான உன் அன்பு என்னை எப்படி சலனப் படுத்தியது என்று தெரியுமா உனக்கு? என் புகை பிடிக்கும் பழக்கத்திற்காக நீ பட்டினி கிடந்த நாட்கள், இருந்தாலும் அழைப்பாய்!! சரியான நேரத்தில் நான் உண்ணுவதை அறிந்து கொள்ள...சொல்லிக் கொண்டே இருந்தேன் நீ ஏமாந்து விடுவாய், தூக்கி எரிந்து விடுவேன் என்று... நீ நம்பவில்லை நான் பலவீனமானேன் உன்னிடம்...

உனக்கும் கவிதைகள் பிடித்திருந்தது... சிலவற்றை எழுதி என்னிடம் கொடுப்பாய், பெரும்பாலும் காதல் கவிதைகள். எண்ணங்கள் ஒன்றாகி ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் அது. தினமும் என்னை கடக்கும் பொழுது புன்னகைத்தபடியே செல்கிறாய். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் வேளையொன்றில் கேட்டாய் " என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று?" மௌனமாய் இருந்தேன், புரியாமல் இல்லை... ஆனால் உன் அளவிற்கு அன்பு செலுத்த முடியுமா என்னால்? மனதில் மட்டும் ஏனோ இனம் புரியா ஆரவாரம்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது, உனக்கு வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னாய், மகிழ்ச்சியில் வாழ்த்தினேன். என் மகிழ்ச்சியில் நீ துயருற்ற தருணம் அது. சமாதானம் செய்யவே போராட வேண்டி இருந்தது.கவலையின்றிப் போ நானிருக்கிறேன் என்று சொல்ல வந்த வார்த்தைகளை உமிழ் நீரோடு விழுங்கிக் கொண்டேன். ஆறுதல் சொல்லும் நேரமெல்லாம் நீ அழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நிமிடங்கள் அவை.

இறுதியாய் அந்த நாள், நீ என்னையும், நான் உன்னையும் பார்த்துக் கொண்ட இறுதி நாள். என்னை காத்திருக்க சொல்லி விட்டு வந்தவுடன், தேநீர் விடுதிக்கு அழைத்தாய். இருவரும் அருகருகே நடந்த முதல் நாள் அன்று. எதிர் படும் பார்வைகளில் கிண்டல். உன் கண்களில் நீர். ஏதாவது பேசு என்று சொல்லி நான் பேசிக்கொண்டே இருக்க நடந்தோம். உன் மனதின் வேதனையை உணர்ந்தும் மௌனமாய் நானும் கூடவே...
தேநீர் விடுதிக்கு மிக அருகில் வந்ததும் வேண்டாம் திரும்பலாம் என்றாய்...ஏன் என்றேன்.. ஒரு வேளை நாம் தேநீர் அருந்தும் பொழுது நான் உன் எதிரில் அமர்வேன், உன் கண்களை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றாய். அது என்னால் முடியாது, இன்னும் அதிகமாக வேதனை தரும் நிகழ்வு என்றாய். என் அருகில் அமர்வாய் எனில் வருகிறேன், இல்லையெனில் வேண்டாம் எனச் சொல்ல, சிதறிப் போனது இதயம்... திரும்பி நடந்தோம்...

பேருந்து நிறுத்தத்தில் உனக்கான பேருந்து இல்லை. வேறு ஒரு பேருந்தில் ஏறி உன்னை பேருந்து நிலையத்தில் விட வந்தேன். பின்னால் அமர்ந்த என்னை, உன் கண்களாலேயே அருகில் வா என்றாய். அந்த நொடியில் நீ சொல்லுவதை செய்ய வேண்டும் போலிருந்தது எனக்கு. உன் வலிகளை குறைக்க வேறு என்ன வழிகள் இருக்கிறது.உன் அருகில் அமர்ந்தவுடன் என் தோள்களில் தலை சாய்த்தாய், உன் கண்ணீர் என் தோள்களில் வழியத் தொடங்கியது. நீ எனக்கானவள் ஆகியிருந்தாய் அந்த நொடியில்...


பேருந்து நிலையம். சற்றே அதிகமான உன் அழுகை இப்பொழுது, அதை மறைக்கும் முயற்சியில் நீ தோற்றுக் கொண்டிருந்தாய். அழுகையின் உச்சம். அப்பொழுதும் கேட்டாய் அதே கேள்வியினை... " "இப்பொழுதாவது சொல்! என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று". நான் அன்று போலவே இன்றும் மௌனமாகிறேன். என் பைத்தியகாரத் தனத்தை என்னவென்று சொல்ல... தலைகுனிகிறேன் உன்னை நேரில் சந்திக்க துணிவில்லை எனக்கு..


பேருந்து வந்தது, உள் சென்று மீண்டும் பார்த்தாய் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்த படி. ஆயிரம் அர்த்தங்கள், பரிதவிப்புகள், வலிகள், எதிர்பார்ப்புகள் என ஒன்றாய் கலந்த அப் பார்வை.. காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நகர்ந்து செல்ல துவங்கியது பேருந்து... நீ என்னை பார்த்த இறுதி நொடிகள் மனதில்... அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த என் கண்ணீர் கரை தாண்டத் தொடங்கியது எனக்கு. தவறு செய்தவன் போல் புலம்புகிறேன் தினமும்...

இன்றும் சற்று நேரத்தில் விடிந்து விடும், நானோ சிவந்த விழிகளுடன் கடமையென துவங்குகிறேன் என் இன்னுமொரு நாளை. மீண்டும் சந்திப்போமா?. ஆனால் எங்காவது கவிதை வாசிக்கும் பொழுதோ, பேருந்தில் பயணம் செய்யும் பொழுதோ கூடவே வரும் உன் நினைவுகளும்... நீயும் இதே போல் ஒரு நிலையில் இருந்துவிடக் கூடாது என வேண்டுகிறேன். என் நினைவு காலம் முழுதும் உன்னில் இருக்க வேண்டுமென விரும்பியவன் தான்.. ஆனால் இனிய நினைவுகள் கூட வலி மிகுந்தவையே... வலிகளும், வேதனைகளும் என்னோடு போகட்டும்...

எனக்காக நீயும்
உனக்காக நானும்
வாழ்ந்த அந்த காலங்கள்!!!
கடந்து போய்விட்டால்
என்ன?
வாழ்ந்து கொண்டே தான்
இருக்கிறேன்
நீ விட்டுப் போன
நினைவு காலங்களில்....

புன்னகையொன்றை களவாடிய பொழுது...








உன்னைச் சந்தித்த அந்த நள்ளிரவுப்
பொழுதொன்றின் தொடக்கத்தில்
களவாடிக் கொண்டேன்
உன் இதழ் உதிர்த்த
வெட்கப் புன்னகையொன்றை...

காலில் சதங்கைகளைக்
கட்டிக்கொண்டு என்னுடன்
வந்தது அப் புன்னகை
திரும்பிப் பார்த்த பொழுது
நீ மேலும் சில புன்னகைகளை
பிரசிவித்துக் கொண்டிருந்தாய்....


ஒற்றைப் புன்னகையோடு வந்திருக்காலாம்
எல்லாவற்றையும் கவர்ந்து செல்ல
நினைத்து மீண்டும் வந்தேன்
ஒரு கூடைப் புன்னகை மலர்கள்
நடக்கும் பொழுது பாரம் தாங்காமல்
விழுகிறேன் தரை மீது...

விடுபட்ட புன்னகைகள் திசைக்கொன்றாய்
பறக்கிறது பட்டாம் பூச்சிகளென
நட்சத்திரத்திடம் ஒன்று
வயல் வெளிகளில் ஒன்று
நதியிடம் ஒன்று
மலரிடம் ஒன்று
மரத்திடம் கொடியிடம்
துள்ளிக் குதிக்கும் கன்றிடம்
நடனமிடும் பறவையிடம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்...


தொலைத்து விட்ட புன்னகைகளை
திரும்ப பெற இயலா சோகத்துடன் நான்
கேட்கவா முடியும் அவற்றிடம்
திருடத் தெரிந்தவனுக்கு
பத்திரப் படுத்த தெரியவில்லை....

உன்னைப் பார்க்கிறேன்
தவற விட்ட புன்னகைகளை
திருப்பி தாவென கேட்கிறாய்
ஒரு மழலையின் சிணுங்கலோடு
புதிய புன்னகையை மறுதலித்து...

வீடு திரும்பி என் கால்கள்
வரும் வழியெங்கும்
தெருவில் என்னை கேலியாய்
பார்த்து புன்னகைக்கிறது
நான் தவற விட்ட புன்னகை கீற்றுகள்...

வெறுமையாய் அறையில்
வீழ்ந்த பொழுது
காற்று பறித்த புன்னகையொன்று
வந்து பதுங்கி இருந்தது
என் படுக்கை அறையில்
உன் முத்தங்களை சுமந்து கொண்டு....

எப்படி வந்தாய் என
முத்ததிடம் கேட்டேன்
முகவரி சொன்னது நீதான் என்றது
காலையில் கேட்டால்
ஆமென்றா சொல்லப் போகிறாய் நீ....

Aug 10, 2011

நீ சொன்ன வாழ்த்து

பிறந்தநாட்கள் ஒவ்வொரு வருடமும் வருகிறது
இனிமையாய் கழியும் இன்று
நீ சொன்ன வாழ்த்துக்களால்...
நீ வாழ்த்துச் சொல்லுவாய் என்றால்
எத்தனை முறை வேண்டுமானாலும் பிறக்கலாம்...
நண்பர்கள் உறவுகள் வாழ்த்துகளுடன்
அலங்காரமாய் என்னை சுற்றி
பறக்கிறது உன் சொல் பறவைகள்...
முன்பெல்லாம் பிறந்த நாட்கள்
முடிவு நாட்களின் முகவரி என்றவன் தான்
இன்று தெரிகிறது உன்னை நேசிக்க பிறந்தவனென்று...
ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி
நிமிடங்களுக்கு ஒருமுறை பிறக்கிறாய் எனக்குள்
மெல்லிய மழையின் சாரலாய்
எனை வாழ்த்திப் போகிறது உன் அன்பு
என் இதயத்துள் கருவாகிறாய் நீ...
ஆயிரம் வாழ்த்துகள் பெற்றாலும்
நள்ளிரவில் என் தூக்கம் கலைத்து
ஈர முத்தம் பதித்து நீ வாழ்த்துச் சொல்லும்
ஒரு பிறந்த நாளுக்காய்
தவமிருக்கிறது என் பிறந்தநாள் ஒன்று...
நாட்காட்டிகள் காத்திருக்கின்றன
நீயும் நானும் பிறந்த தினங்களை காட்டிட
நாம் பிறந்த தினத்தை ஒளித்துக் கொண்டு
கண் சிமிட்டி ரசிக்கிறது காதல்...

Aug 9, 2011

அதிர்வு


எனக்கான முதல் கவிதையொன்றை
எழுத நினைத்த நாளொன்று
இரவின் வெளிச்சத்தில்
தூங்காத பொழுதொன்றில் வந்தது...

எப்படி ஆரம்பிக்க?
ஒன்றும் புரியாமல்
புரண்டு புரண்டு விழுகிறது
வார்த்தைகள்
வேடிக்கை பார்த்தது மௌனம்...

கற்பனைகளையும்
கனவுகளையும் தாண்டி
இது செயல் படும் தருணம்
படபடக்கும் மனசில்
கதிரவன் வீழ்ச்சி
நிலா அதிர்வு...

அக்கவிதையில் முயல்கள் துள்ள
தேனீக்கள் மலர் தேடியது
தாமரை மலர்ந்தது
ரோஜா ஒன்று பனித்துளியில்
நிரம்பியது....

ஒருவாறு எழுத்துக்களை வருடி
சொற்களின் இதழ் சேர்த்து
துவண்டு விழுகையில் கிடைத்தது
என் முதல் கவிதையின் முடிவு...

சற்றே ஆசுவாசம் பெற்ற போது
அக்கவிதை என்னிடம் சொன்னது
இன்னும் இருவரிகள் நீ எழுதியிருந்தால்
நான் முழுமையடைந்திருப்பேன் என்று...

Aug 8, 2011

உயிர்க் கோலம்










நகரமும் அல்லாத கிராமத்தின் பழமை தொலைத்த என் ஊர்...விடியற் காலை... பனி பொழியும் இந்த நாளின் துவக்கத்தில் வெளியூர் பயணம்.... தெருவெல்லாம் அமைதியாய், இரவு நேர தெரு விளக்குகள் சில எரிந்தும் எரியாமலும்... குளிருக்கு நான் பிரத்யேகமாக வேறு உடைகள் அணிவதில்லை. மெல்லிய குளிர் ஒரு அனுபவம்... மெல்ல உடலில் ஊடுருவி, முழுதும் ஆக்கிரமித்து, அமைதியாய் ரசிக்கவைக்கும் ஆனந்தம்.... ரயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கை போல... இரண்டு தெருக்களை தாண்டி நடக்கிறேன்... ஒரு இளம் பெண் தான் வீட்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்... மனம் லயித்துப் பார்த்துக் கொண்டே கடந்து போகிறேன்... பேருந்து நிறுத்தம், கூட்டமின்றி வந்தது ஒரு அரசு பேருந்து... அங்கிருந்து நகரப் பேருந்து நிலையம், மறுபடி ஒரு நீண்ட பயண தொடக்கம், இடையில் நுரையீரலை புகையால் நிரப்பிக் கொண்டேன்...

பேருந்து வெறுமையாக இருந்தது... இரண்டே பேர்... ஓட்டுனர், நடத்துனர் என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர்... எப்பொழுதும் போல எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கை... சில அமைதியான நிமிடங்கள்... நகரம் விட்டு வெளியே வந்திருந்தது பேருந்து... என் நினைவுகள் காலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுற்றத் துவங்கியது... இதே போல் நான் வெகு நாட்கள் வாழ்ந்திருக்கிறேன்... குளிர் காற்று முகம் வருட,முன்னோக்கி நகரும் பேருந்தில் பின்னோக்கி நகர ஆரம்பித்தன என் நினைவுகள்....

அது அவளின் கிராமம், பெயர் என்று ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அது அவளின் கிராமம். அடிப்படை வசதிகள் கூட முழுமையாய் சென்றடையாத அந்த மிக சிறிய பகுதி நகரத்திலிருந்து கிட்டத் தட்ட முப்பது கிலோமீட்டர்களில் இருந்தது. நீரோடையின் சலசலப்பு, மரங்களின் தூய்மையான காற்று, மதிய நேர வெயிலோடும் கூட குளுமையை பரப்பி நிற்கிறது உனது கிராமம், உன்னை வளர்த்த கிராமம். நீ நடந்த தெருக்களும், நீர் பிடிக்கும் தெருக் குழாய்களும், கிணற்றடியும் என்றும் உன் வரவிற்காக காத்துக் கொண்டே இருந்தன. உன் வீட்டின் முன் ஒரு பெரிய வேம்பும், அதனால் உன் வீடு வாசலில் படரும் நிழலும், அதில் வசித்த பறவைகளும், நிழலில் படுத்துறங்கும் நாயும் காணாமல் போயிருக்கும் இந்நாட்களில்....என் நினைவில் நீங்காமல் இருக்கிறது நம் முதல் சந்திப்பு, அது என்னையே எனக்கு அறிமுகம் செய்த முதல் பயணத்தின் தொடக்கம்.. ஒரு மலையின் குகைக் கோவில் ஓவியங்கள் போல மறையாமல் இருக்கிறது நம் நினைவுகள்...

அந்த அதிகாலையில் நான் பணிக்கென தனியே நடந்து வருகையில் உன் வீட்டு வாசலுக்கு நீ நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். அதிகாலை மண் வாசனை புறப்பட்டு என்னை மென்மையாய் வருடிச் சென்றது. உன் விரல் பட்ட நீர்த் துளிகளெல்லாம் பனித் துளிகளாகவும், விரல் பட காத்திருந்த துளிகளெல்லாம் பன்னீர்த் துளிகள் போலவும் இருந்தன.உன்னை கடந்த அந்த நொடியில், தலை குனிந்தவாறு உன் விரல் பட்ட நீர்த் துளிகள் என் மீது பட்டுவிட தயங்கி நின்றேன். நிமிர்ந்து நீ என்னைப் பார்த்த அந்த பார்வையில் கோரப்பட்ட மன்னிப்பு, சற்றே மிரண்ட மானின் பரிதவிப்பு இரண்டுமாய்.. நேர்கோட்டில் சந்தித்த பார்வையை தவிர்க்க வேண்டி நீ தலை குனிந்தாய்.. அழகிய மலரொன்று அதிகாலையில் தலை குனியுமா என்ன... முகம் பார்த்து ரசிக்க முடியா ஏமாற்றம் எனக்கு...

அடுத்த நாளும் அதே அதிகாலையில் மீண்டும் வருகிறேன், நிகழ்ந்து விடாதா நம் அடுத்த சந்திப்பு என்கிற பதைக்கும் மனதோடு.ஆனால் இன்று நீ வாசலுக்கு தெளித்துக் கொண்டிருந்தது பசும் சாணம் கலந்த நீர். என் ஆடை மீது பட்டு, புது வண்ணம் கொண்டது மேல் சட்டை.. நிமிர்ந்து பார்த்தேன், இம்முறை நீ நிற்கவில்லை, பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடினாய்.. திரும்பி அறைக்கு வந்து வேறு உடை மாற்றி திரும்புகிறேன், வாசலில் நீ... உன் வீடு கடக்கும் பொழுது ஒளிந்து கொண்டு, சென்ற பின் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாய். திரும்பி முகம் பார்த்தேன், இந்த முறையும் தலை குனிந்தாய் சிறு புன்னகையோடு... பின்னொரு நாளில் தான் தெரிந்தது, முதலில் நான் அணிந்து வந்த உடையின் நிறம் உனக்கு பிடிக்காது என்று... அதிலிருந்து அந்த மேல் சட்டை அணிவதில்லை நான்..

அடுத்தடுத்த நாட்களிலெல்லாம் நீ நான் வரும் முன்னதாகவே நீர் தெளிப்பாய், உன் கைகளில் கோலப் பொடிகளுடன் வர்ணமாய் மாறிக் கொண்டிருக்கும் உன் வாசல். சில பண்டிகை நாட்களில் தெரு முழுதும் வண்ணமயமாய்... கோலத்தின் இறுதியில் நீ எழுதிப் போகும் நல்வரவு எனக்கானது என்று எனக்குத் தெரியாமலா போகும்...ஆர்ப்பரிக்கும் மனதோடு அலைந்த நாட்கள் அவை. முதலில் புள்ளிகள் தொடங்கும் போதே நம் கருவிழிப் புள்ளிகளும் சந்திக்கத் தொடங்கின. நம் பார்வையின் சந்திப்பில் பல நேரங்களில் சிதறிப் போயிருக்கிறது நீ வைக்கும் கோலப் புள்ளிகள். சில நேரம் மிதிக்காமல் செல்ல வேண்டி நான் தயங்கி நிற்கும் பொழுது, எழுந்து நின்று வழி விடுவாய். அப்பொழுது தான் பார்ப்பது போல் பார்ப்பேன், அதிகாலை வானம் சிவக்கிறது உன் முகத்தில். வாசல் கோலங்களை விட்டு உன் முகத்தின் அழகுக் கோலத்தை ரசிக்கத் தொடங்கிய தினம் அன்று... தினமும் வழக்கமாகிப் போனது உன் முகமும், வாசல் வர்ணங்களும்...

இப்பொழுதெல்லாம் நான் அதிகாலை விடியலுக்கு காத்திருக்க, தவமிருக்க ஆரம்பித்தேன். உன்னைக் காணும் அந்த நொடிகளுக்காக நாள் முழுதுமாக காத்திருக்கிறேன் என்ற உண்மை என்னில் உணர்கிறேன்.. சற்றே முன்னேற்றம் பெற்று புள்ளிகளிலிருந்து வளைவுகளுக்கு வந்திருந்தது உன் கோலம்.பார்வைகளிலிருந்து புன்னகைகளாய் உரு மாறியிருந்தது நம் உறவு. தினமும் அதிகாலை நேர பறவையின் குரல்களும், சிவந்த கதிரவனின் ஒளியும் நம்மை மெதுவாக ரசிப்பது போல இசையும் ஒளியும் மனதில் காதலென குடிகொண்ட அந்த அற்புத மணித் துளிகள்.காதலா இல்லை ஈர்ப்பா என உணரும் முன்னரே, என் பணி மாற்றம் காரணமாய் வேறு இடத்திற்கு மாற வேண்டி வந்தது... அன்று நம் கடைசி சந்திப்பு.. அன்றும் அதிகாலை தான். என் கையில் வழக்கத்திற்கு மாறாக புதிதாய் பயணப் பெட்டி. அன்று நீ அப்பொழுது தான் நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். உன்னைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே நின்றேன், கைகளில் மட்டுமன்றி, கண்களிலும் நீர்த் துளிகளோடு நீ. இருவர் கண்களிலிருந்தும் தானாக விழுந்த துளிகளில் உன் வீட்டு வாசல் ஈரமாகி கொண்டிருந்தது...

அன்றிலிருந்து பண்டிகை நாட்களைத் தவிர வேறு நாட்களில் நீ கோலமிடுவதில்லை என்றும், உன் தாய் தான் தினமும் வாசலில் நீர் தெளிக்கிறார்கள் எனவும் நண்பனை விசாரித்த பொழுது தெரிந்து கொண்டவை. கனத்து போன இதயம், புரட்டி போட்ட காலம், பணி மாறுதல்கள், பயணங்கள், பல்வேறு நகரங்கள்.. எதிலும் மறக்க முடியா உன் நினைவுகள்... ஒரே ஒரு முறை உன் கிராமம் வந்தேன். நீயில்லாத கிராமம் அது...

வெகு நாட்கள் கழித்து உன் கிராமத்தில் நான். அதே அமைதிதான் ஆனால் இதில் அழகில்லை. வெறிச்சோடிக் கிடந்தன தெருக்கள். பொதுக் கிணறு குப்பைத் தொட்டியை மாறிக் கிடந்தது. வீடு வீடாய் குழாயில் நீர் வந்து சேர்ந்திருந்தது. தெருக் குழாய் மட்டும் குற்று செடிகள் சூழ, கள்ளி செடிகள் வேலியாய் மாறிக் கிடந்தது. பூட்டிக் கிடந்தது உன் வீடு, காணாமல் போன மரத்துடன் முன் வாசல். சில வருடங்களுக்கு முன் உனக்கு திருமணம் நடந்ததும், பிறகு தாய் இறந்து போனதுமாய் உன்னை பற்றிய செய்திகளை கேட்காமலேயே சொல்லிக் கொண்டு வந்தான் நண்பன்... பல ஆண்டுகளாக நீர் தெளிக்காமல் வறண்டு கிடந்தது உன் வீட்டு வாசல்.. அன்றொரு நாள் நீ வரைந்த கோலம் ஒன்றையும், நல்வரவு வார்த்தைகளையும் அங்கே பொருத்திப் பார்த்து கண்ணீருடன் நிற்கும் என்னை தோள் தட்டி ஆறுதல் சொல்லும் நண்பனுக்குத் தெரியுமா என்ன? உன் கோலங்களுக்கு உயிர் உண்டு என்பது....


நடத்துனர் தோள் தட்டி எழுப்புகிறார். தம்பி பேருந்து நின்று பத்து நிமிடமாகிறது என்று... மன்னியுங்கள் சார்.. உறங்கி விட்டேன் என்று பதிலுரைத்து விட்டு கிழே இறங்கி தேடுகிறேன் கோலமிடப்பட்ட வாசல் ஒன்றை இந்த பெரு நகரத்தில்...

தாமரை






தாமரையை பற்றி கவிதையொன்று
எழுதச் சொன்னாய்.....

தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
சில நேரங்களில் வண்ணங்களைப் பற்றியோ
கோர்க்கப்படும் சரங்களிலோ தாமரை பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நானோ
தாமரை பூத்த குளங்களைப்
ரசித்துக் கொண்டிருக்கிறேன்...
இளஞ் சிவப்பு, ஊதா, வெண்மை என
பல தாமரைகள் உண்டு
நான் ரசித்ததென்னவோ
அடர் சிவப்பில் குருதியின் நாளங்களை
கொண்ட மலரொன்றை...


தன் இரு புறங்களிலும்
நீர் ஒட்டி விடாத இலைகளை பரப்பி
அழகான குழந்தை போல இதழ்
விரித்துச் சிரிக்கிறது,
எப்பொழுதும் குளிர் நீரில்
இருப்பதால் என்னவோ அதி மென்மையாய்
விரல்களால் தீண்டவும் பயம் என்னில்...
நடுங்கும் கைகளோடு நான் வருடும்
வேளையொன்றில்
தேனுண்ணும் பறவையென மாறி
சிறகடிக்கிறது ஒளிந்து கொள்ளும் மனம்....
சில வக்கிர மனங்கள்
பறித்து சூடி தங்களை அழகு படுத்திக்
கொள்ளும் பொழுது
தாமரைப் பூக்கள் பூக்களாய் இருப்பதில்லை
வெறும் காகிதப் பூக்களாகவே,
என்னில் என்றும்
பூக்களையும் நீர் நிலைகளையும்
பிரிதரிந்தவனில்லை
வெறும் இதழ்களை நம்பி வந்தவன்
வேர்களில் சிக்கி தவிக்கிறான்
நான் வேர்களை நம்பியவன்...
எல்லோரும் சொல்வது போல்
எல்லாமே பூக்களுமே ஒன்று அல்ல
ஒரு பூவின் வாசனையை
வேறு ஒரு பூவிடம் தேடுபவன் அறிவிலி
நான் ஒரு ரசிகனே
எனக்கென மலர்ந்த
தாமரையை ஒன்றை
அதன் இதழ்களை
அதன் பரந்த இலைகளை
நீர் மறைத்த வேர்களை
செம்மை பரவிய அதன் நிறத்தை....


இனி என்ன,
தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
தனக்கான சூரியன் எதுவென்று
தாமரைக்கு தெரியும்....
என்னவளுக்கு சொந்தமாய்
இருக்கிறது ஒரு தாமரையும்
ஒரு ரோஜாவும்...

Aug 1, 2011

படுகொலைகள்















சில கணங்களில் நிகழ்கிறது
மனித உறவுகளின் படுகொலைகள்
யாரையும் கேட்காமல்
யாருக்கும் தெரியாமல்....

இங்கே கொலைக்கு
தேவைப்படுவதெல்லாம்
நேசிக்கும் மனமும்
கோபம் கொண்ட இதயமுமே...



சுடு சொற்களை வீசி விட்டு
இனி என்னால் உனக்கு
எந்த தொந்தரவும் இல்லை
எனும் போது நிகழ்ந்தே விடுகிறது
அக் கொலைச் செயல்...

ஏதாவது தவறுகள்
செய்திருந்தால் மன்னித்துக் கொள்
எனும் போது
சிதையில் தள்ளப்படுகிறது காதல்...


இனி தவிக்கவோ
துடிக்கவோ வேண்டி இருக்காது
உன் வாழ்க்கை உனக்கு
என் வாழ்க்கை எனக்கு
என்கிறது குரல் ...

இவ்வளவு எளிதாய்
நிகழ்ந்துவிடுமா ?
அன்பு கொண்ட
இதயங்களின் முறிவு....

இங்கே எல்லோரும்
கொலையை செய்து விட்டோ,
தடுக்கவோ முடியாமல்
நிற்கிறோம்
கண்ணீர்
நினைவுகளோடு....


" இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"






அன்பு தேவதையே,
நான் இதுவரை உனக்கு கடிதங்கள் எழுதியதில்லை... எழுதிய கடிதங்கள் முழுமையற்று போனது... ஆனால் இன்று இந்த சூழலில் உனக்கு எழுத வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...உண்மையில் கடிதம் என்பது தூரங்களின் வடிவம்... உனக்கும் எனக்கும் அப்படியொன்றும் அதிக தூரமில்லை...இன்னொன்று கடிதங்கள் உணர்வுகளின் வெளிப்பாடே அன்றி வேறொன்றுமில்லை...

உன்னை காதலிக்க துவங்கிய அந்த நொடிகள் தான் எத்தனை அழகானவை, அற்புதமானவை... என் மனதில் சிறு சிறு கனவின் விதைகளை நீ நட்டுச் சென்ற அந்த ஆழமான பொழுதுகள்... இன்று அந்த கனவுகள் மலராய் பூத்துக் குலுங்கும் நேரத்தில் நீ அருகில் இல்லை... மனதில் மலர்ந்த மலர்களை ரசிக்கவும் இயலாமல், களையென பிடுங்கி எறியவும் முடியாமல் என் கண்ணீர்த்துளிகளை அவற்றின் வேர்களில் பாய்ச்சுகிறேன்....

நீயும் நானும் கொண்ட நேசம் ரம்மியமானது... அதிகாலை பொழுதைப்போல, முழு நிலவின் பிரகாசத்தைப் போல, கைதேர்ந்த ஒரு ஓவியரின் விலை மதிக்க முடியா படைப்பைப் போல, வசீகரிக்கும் ஒரு கவிதையைப் போல, மெல்லிய மழையின் தீன்டலைப் போல, சிறு குழந்தையின் முத்தத்தைப் போல எத்தனை இயல்பாய் நீ எனக்குள் நிறைந்திருக்கிறாய்....

என் காதலை எப்படி நிரூபிக்கப் போகிறேன், நியாயத் தராசினைக் கொண்டு எடை போடா முடியுமா என்ன? வாமனனைப் போல் அடிகள அளந்து என் தலை மீது வைக்கவோ? அனுமன் போல நெஞ்சு கிழித்து உன் முகம் காட்டவோ முடியுமா என்னால்?... ஆர்ப்பரிக்கும் மழையைப் போல் புவியை நிறைத்து, அருவிஎனப் பெருகி எப்படிச் சொல்லப் போகிறேன். நதியைப் போல் நீளுமோ, கடலைப் போல் ஆழமாகவோ... என் கவிதைகளில் கிறுக்கிக் கொண்டா? பின் அடையாளம் எதுவென்பாய்? இதோ என் உறக்கம் தொலைத்த விழிகளும், தத்தளிக்கும் கனவுகளும், வார்த்தைகள் அற்றுக் கிடக்கும் கவிதைகளும், காரணமின்றி கண் நிறைக்கும் நீரும்.... இவை இன்றி வேறென்ன சொல்லிவிட முடியும் நம் நேசத்தைப் பற்றி...

என் சின்னஞ் சிறிய உலகின் தேவதை நீ... என் கவிதைகளின் இளவரசி நீ... என் ஆசைகளின் முதற்ப் புள்ளி, என் எழுத்துக்களின் பொருட்ச் சொல். ஒரு ஜன்னலின் கதவுகளை திறந்து உலகின் பரந்த வெளிகளுக்கு என்னை அழைத்துச் சென்றவள் நீ... ஒவ்வொரு நொடியும் வாழும் கலையினைக் கற்றுக் கொடுத்தவள் நீ... மரணித்துக் கொண்டிருந்த மனதொன்றை அன்பெனும் மருந்திட்டு காப்பறியவள் நீ.. என் தாயின் மறு பிரதி நீ... என் சேயின் கருப்பொருள் நீ... என் காலங்களில் வசந்தமாய், கோடை யாய், குளிராய் என அனைத்து மாற்றமும் நீ...

முடவன் ஒருவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட கதையாய் உன் மீதான என் காதல். காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கும் பலவகைகளில்.. இன்று என் மித மிஞ்சிய காதலே எதிர்ப்பாய் மாறிப் போனது... என் காதல் எனக்குத் தெரியாமலே உன்னைச் சுற்றி வலைகள் விரித்த போது நீ கதறினாய்... உன் கால்கள் அதில் சிக்குண்ட போது வலைகள் உன்னை நெருக்கியதே தவிர, என் வலைகளை நீக்கி விட முடியவில்லை என்னால்... இறுதியில் ஒரு நாள் நீ எனக்குத் தெரிந்தே வலைகளை அறுத்த பொழுது, நடுங்கும் கைகளுடன் உன்னிடம் மண்டியிட்டேன், தவித்துப் போன மனதுடன்....

அதீத காதலின் வலிகளை அடைந்தவள் நீ, கொடுத்தவன் நான்... உன் கதறல்கள் என்னை சேராதபடி தடுத்துக் கொண்டிருந்தது என் அதிகக் காதலின் ராகங்கள்.... இறுதியில் என்னை விட்டு செல்லும் ஒரு நாளில், நான் என் உயிருடன் சண்டையிட்டு சாவின் பாதையில் நடக்கத் துவங்கினேன்.ஒரு மிகப் பெரிய முகக் கண்ணாடியினை வைத்து போரிடு என்பது போல இருக்கிறது... இங்கே என் எதிரில் நிற்பவை என் கனவுகளும், ஆசைகளும், வாழ்விற்கான என் கற்பனைகளுமே... என் கூரிய கவிதைகளால் நான் அவற்றை வெட்டி வீழ்த்தும் பொழுது நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் குருதியின் சுவடுகள் என் ரணங்களிலிருந்து.... என்றுமே வென்றுவிட முடியாத எதிரிகளுடன் போரிட்டு வீழும் பொழுது ஒருவேளை அக்கண்ணாடி அகற்றப் படலாம்....

சிந்தனை தடை பட்ட, உணர்வுகள் எரியூட்டப்பட்ட ஒரு உலகத்தில் இனி நான் கழிக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளும் கொடிய விரல்களென மாறி என் குரல்வளை நசுக்கும்.... தாகத்திற்கென நான் மழையை எதிர் நோக்கி கிடக்கும் வேளைகளில் சூரியனின் கதிர்கள் என்னைப் பொசுக்கிக் கொண்டிருக்கும்... இந்த உலகம் என்றுமே காதலுக்கானது, காதலர்களுக்கான ஒன்று அல்ல என்பதை என் வறண்ட குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

என் கவிதை வாழ்வின் இறுதி அத்தியாங்கள் உனக்கானவை.. எனவே இனி அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை... எனக்குள் இருக்கும் உன்னால், உனக்காக பரிசென வைத்திருக்கப் போவது அவற்றை மட்டுமே.... என் இதயத்தின் கடைசி துடிப்பு, மூச்சுக் காற்றின் இறுதித் துளிக் காற்று, கண் நிறைக்கும் கனவுகள் என அனைத்துமே உனக்கானவை.... நான் மரித்துவிடும், மண் மூடும் நொடியொன்றில் கலங்கி விடாதே, ஆறுதல் சொல்ல அங்கே நான் இருக்கப் போவதில்லை....

நேசம் என்பது புனிதமானது மட்டுமில்லை, புதிரானடும் தான்.... யார் மீது யாருக்கும், காரணங்களே இன்றியும்... மிக மிக வேகமாய் காதலின் படிகளில் ஏறிய எனக்கு, இறங்கத் தெரியாத இன்று குதித்து உயிர் விட மட்டுமே தெரிகிறது... இனி என் கல்லறையில் எழுத ஒரு வாசகமும் உண்டு..." இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"

இறுதியாய் ஒன்று, நான் தவறுகள் செய்தவன்... மன்னித்துவிடாதே... தண்டித்து விடு... மன்னிப்பைக் கோரும் அளவிற்கு நான் எந்த நொடியிலும் வாழ்ந்து விடவில்லை... இனி என் நினைவுகளில் நீ விட்டுச் சென்ற வானமும், நட்டுச் சென்ற மலர்களின் சுகந்தமும், உனக்கே உனக்கான கவிதைகளுமாய்.... என் இறுதிப் பயணத்தை நோக்கி....

"காதலுக்காக
எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுக்கலாம்
காதலையும் கூட...."

என்றும் நினைவுகளுடன்..

மழை....