பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 29, 2013

கொடுமணல் - ஒரு பயணம்.



           நேற்று மாலை நானும் குக்கூ சிவாவும் மாலையில் பேசிக் கொண்டிருந்த போது, எந்த வித திட்டமுமின்றி நண்பா கொடுமணல் போகலாம், வண்டிய எடுங்க என்றார். இது தான் சிவாவின் சிறப்பே. என்ன முடிவு செய்கிறோம், எப்போது முடிவு செய்கிறோம் என்பது அவருக்கே தெரியாது. அதுவும் மாலை 4.30 க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்க விசயம். சரி என்று கிளம்பியாயிற்று. ஊத்துக்குளியிலிருந்து சென்னிமலை செல்லும் பாதையில் சென்று, கொடுமணல் என்று வலதுபுறம் திரும்பிய பாதையில் சிறிது தொலைவு சென்றதும் முதலில் நாங்கள் பார்த்தது பாதையின் இடதுபுறத்தில் மக்களால் கைவிடப்பட்ட ஒரு சுதைசிற்பக் கோயில். சமணர் காலத்துக் கோயிலாக இருக்க வேண்டும். வழக்கம் போல் அது சித்தாந்தங்கள் மாற்றப்பட்டு இந்துக் கோயிலாக உருமாற்றம் பெற்றிருந்தது. உடைந்து கிடைந்த கதவுகள் மற்றும் கோயிலின் உட்புறத்தில் விரவிக் கிடந்த குப்பைகள் யாரும் வந்து போவதில்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. கோபுர வேலைப்பாடுகளும், முன்சுவரில் இருந்த இரு உருவங்களும் அழகானவை. நிச்சயம் பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பினும் மக்களாலும் அரசாலும் கைவிடப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.
 முதல் கோயிலின் கோபுரம்

     பக்கத் தோற்றம்
 
 
முன்பக்கத் தோற்றம்.       

அங்கிருந்து கிளம்பி கொடுமணல் செல்லும் பாதையில் சென்றோம்.அங்கு சென்று சரியான பாதையை விசாரித்துக் கொண்டு செல்கையில் அங்கும் ஒரு சுதைக் கோயில். அது புணரமைக்கப்படவில்லையெனும்போதும் கைவிடப்படவில்லை. அதற்கு அருகில் வேறு சிறு கோயில் ஒன்றை உருவாக்கி இருந்தார்கள். மின்வசதி இருந்தது. மக்களின் வழிபாட்டில் இன்னும் தொடர்கிறது. இக்கோயிலில் முன்சுவரில் இருந்த ஆண், பெண் உருவங்கள் பிரம்மாண்டம். இக்கோயில் அக்கிராம மக்களால் தூய்மையாக பேணப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களும் ஏறக்குறைய சமகாலத்தவையாக இருக்கக்கூடும். முன்சுவரில் இருந்த உருவ அமைப்புகள், கோபுரம், உட்புறம் என எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்புக் கொண்டவை.
 முன் சுவரிலிருக்கும் பெண் உருவம்:

முன்சுவரிலிருக்கும் ஆண் உருவம்:


          அதற்குப் பிறகு சுமார் இரண்டு கி.மீ தொலைவில் இருக்கிறது தொல்லியல் துறையால் ஆராய்ச்சி செய்யப்பட்ட இடம். நொய்யல் நதி கரையோரம் முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் இப்போது மூடப்பட்டு சமதளமாக வெறும் மண்பரப்பாக காணப்படுகிறது. அங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது என்பதைக் குறிக்கும் எந்தவித அறிவிப்புப் பலகைகளும் இல்லை. ஆனால் உடைந்து கிடக்கும் பலநூற்றாண்டுகளைக் கடந்த மண்பானையின் சிதிலங்கள் அங்கு சிதறிக் கிடக்கின்றன. யாரும் கவனிப்பாரில்லை. சிறிது நேரம் அவ்விடத்தில் உலவி விட்டு திரும்புகையில் அருகிலிருக்கும் வீட்டின் முன் பெரும்குவியலாக் கிடந்தது இதே போன்ற பானை சிதிலங்கள். அப்படியானால் எத்தனை பானைகள் இங்கு இருந்திருக்கும் என்று மனம் கணக்கிடத்தொடங்கியது.
அடுத்தாக அதற்கு எதிர்புறத்தில் கற்களால் ஆன வீடு போன்ற அமைப்பு இருந்தது. மேல் கல் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அப்பகுதி இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு புறத்திற்கும் ஒரே ஒரு கல்பலகை. அவ்வளவு பெரியதாக எப்படி உருவாக்கினார்கள் என்பதே அதிசயமாக இருந்தது. அதில் பாதி மண்ணில் புதையுண்டும் மீதி வெளியிலும் இருந்தது. ஒரு புறம் மட்டும் ஒரு ஆள் நுழையும் அளவில் துளையிடப்பட்டிருந்தது. கல்லில் இது எப்படி சாத்தியம் என திகைத்துப் போனேன். 
 
சரியான அளவில் இரு அறைகளுக்கும் தனித்தனியே தனித் தனியாக. அதற்கு அருகில் இரு பெரிய பாறை கற்பலகைகள் நடப்பட்டிருந்தன. சிவா ஆச்சர்யம் தாளாமல் தன்னை விட உயரமாக இருந்த அக்கல்லை அணைத்துக் கொண்டார். அவர் ஏறக்குறைய சிலநூற்றாண்டுகள் முன்னோக்கிச் சென்று பிறகு நினைவு பெற்றிருக்கக்கூடும். அதற்கும் அருகில் ஒரு விவசாயம் செய்யப்படாத நிலத்தில் கற்கள் பெரிதும் சிறிதுமாய் கொண்டு ஒழுங்கான வட்டவடிவில் ஒரு அமைப்பு இருந்தது. அங்கு சென்று பார்த்த போதே தெரிந்தது அதுவும் பலநூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது என்று.
 

          
 

அங்கிருந்து கிளம்புகையில், உடைந்த பானைத் துண்டுகளில் சிலவற்றை சேகரித்துக் கொண்டோம். பளீரென இருந்த இரு வெங்க கற்களும். திரும்பி வந்ததும் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தான். நூறு ஆண்டுகள் கடந்தாலே நினைவுச் சின்னமாகக் கொண்டாடும் அயல்நாடுகள் இருக்கையில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வை அறிவிக்கும் அற்புதங்கள் பற்றி சிறிது தூரத்தில் வசிக்கும் நம்மக்களுக்கு தெரிவதே இல்லை. அதுவும் அந்த கற்பலகைகளால் ஆன வீடு போன்ற அமைப்பு யாராலும் கண்டு கொள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கிறது. அதன் முக்கியத்துவம் குறித்து அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தேவையெல்லாம் நம்முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள், தங்க, வெள்ளிக் காசுகள், பட்டு போன்றவை மட்டுமே. மற்றவையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அது தான் தமிழகமெங்கும் அனாதையாய் இன்று நிற்கும் பல சுதை கோயில்கள், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றின் நிலை. 



         இன்று காலை இதைதட்டச்சு செய்ய்து கொண்டிருக்கும் வேளையில் என் நினைவிலிருப்பதெல்லாம், தங்கமும், வைர, வைடூரியங்களும், மணிகளையும் எடுப்பதற்காக தோண்டி பின் வெற்று மண் பரப்பாக கிடக்கும் இடத்தின் புழுதிமண் வாசம் மட்டுமே. சிதிலமடைந்த மண்பானைத் துண்டுகளின் ஒழுக்கமற்ற உருவங்கள் மட்டுமே. ஒரு மனித நாகரீகத்தை தன்னுள் புதைத்து இப்போது நீரின்றி வறண்டு கிடக்கும் நொய்யலின் வழித்தடம் மட்டுமே. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு எது தேவையோ அதற்காக மட்டுமே அவர்கள் வருகிறார்கள். கொடுமணல் கிராமத்தில் இப்பொழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேருக்கு அவ்விடத்தின் நூற்றாண்டுகால தொன்மை, தொழில்நகரமாக விளங்கிய கொடுமணலின்
அருமை தெரியுமென்று தெரியவில்லை. அதற்கு அம்மக்கள் எந்தவகையிலும் பொறுப்புமில்லை. தொன்மை தெரிந்தும் கைவிட்ட அரசைத் தவிர.

-------------------------------------------------------------------------------------------------------------
 **** பிறகு கொடுமணல் பற்றிய இணையத் தேடலில் கிடைத்த சில தகவல்கள் உங்களுக்காக. 

--------------------------------------------------------------------------------------------------------------





      கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்நொய்யல் ஆற்றின்  வட கரையில்ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம்சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான  கரூரைமேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில்  இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட, சமீபத்திய முறையிலான அகழ்வாராய்ச்சி ஒன்றை நடத்தியது. அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கு மிகச் சிறந்த செல்வச் செழிப்பான தொல்பொருட்கள் தற்போது கிடைத்துள்ளன.

ஆராய்ச்சியின்போது, நான்கு அகழிகளில் வைக்கப்பட்டிருந்த தொல் பொருட்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். அப்பொருட்கள், சிக்கலான தொழில் துறை அமைப்பை வெளிப் படுத்தியுள்ளன. தொழில் பொருட்களான, இரும்பு மற்றும் எஃகு, நெசவு, கல், காமதகம், விலை உயர்ந்த குண்டு மணிகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான வளையல்கள், மாணிக்கம் போன்ற கற்கள், இரத்தின கல் வகைகள்ஓனிக்ஸ்ஐவரி, காணீலியன் மற்றும் கருப்பு-பூனைக் கண் போன்ற விலை மதிப்பிலாத பல பொருட்கள் கிடைத்துள்ளன.

இப்பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் வைக்கப்பட்டிருந்தவை ஆகும். அப்பானைகள், மங்கல் சிவப்பிலான நிறத்தைக் கொண்டவை ஆகும். பருத்தி இழைகள் மற்றும் மெல்லிய தங்கத்தினாலான இழைகளால் நெய்யப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கின்றன. அவற்றில் 30 பானைகள் தமிழ் எழுத்துருவான பிராமி வரி வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட மனிதர்களுடைய பெயர்கள் ஆகும். அவை சப மகதாய் பம்மதன்’, ‘சாத்தன்’, ‘விசாகி’, ‘சிலிகன்’, ‘உரணன்மற்றும் திசன்ஆகியவை.

இதில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், பெரிய பானை ஒன்றில் தெளிவாகத் தெரியும் வகையில், ‘சம்பன் சுமணன்என்று பொறிக்கப்பட்டுள்ளது. பெயர் எழுதியிருக்கும் வரி வடிவமானது, தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்-பிராமிஎழுத்துரு வடிவமாகும். (பிராமி எழுத்துருவைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு: பிராமி_எழுத்துமுறை)

இவ்வகழ்வாராய்ச்சியின் இயக்குனரான கே.இராஜன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஆவார். அவர் தரும் தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது.
இதில் ஒரு சிறப்பம்சம் என்வென்றால் கொடுமணல், முழுமையான தொழில் நகரமாக இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில், குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லாத, மிகச்சிறிய அளவே விவசாயம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இது மாதிரியான தொழில்துறை வளம் மிகுந்த பகுதிகளில் இவ்வளவு ஆவணங்கள் இதற்கு முன்பு கிடைத்ததில்லைஎன்கிறார். மேலும் கூறும்போது, “இதற்கு முன்பு பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட தமிழ் சங்கப் பகுதிகளாக விளங்கிய கொற் கை, பூம்புகார், கரூர், உறையூர், அழகன்குளம் மற்றும் பொருந்தல் போன்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் தமிழ்-பிராமி எழுத்துருக்களைக் கொண்ட பானைகள் காணப்படவில்லைஎன்றார்.

சம்பன்-சுமணன்என எழுதப்பட்டிருக்கும் பெரிய பானை, கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அப்பானை, நான்கு அகழிகளின் நடுவில் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில பானைகளில், ‘சம்பன்என்றோ அல்லது, ‘சுமணன்என்று மட்டும் எழுதப்படிருந்தது.

சம்பன்என்பது தந்தையின் பெயராகவும், ‘சுமணன்என்பது மகனைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்கிறது ஆய்வு செய்த குழு.எனவே, இத்தொழிற்பகுதி சம்பனுடைய குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்திருக்கலாம்.

டாக்டர்.இராஜன் மற்றும் அவரது குழுவினர் மேலும் தோண்டியபோது, பழங்காலத்தில் புனித பொருட்களை வைக்கும் கல்லால் செய்யப்பட்ட பெட்டியும், கல்லறை போன்ற அமைப்பினையும் கண்டுபிடித்துள்ளனர். இப்பெட்டிகள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டவை. கற்களால் ஆன மூடிகளைக் கொண்டுள்ளன.மேலும் கிடைத்த சில பெட்டிகளில், உடைந்த எழும்புத் துண்டுகள் இருந்தன. இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தும் பொருட்களாக, நான்கு ஜாடிகள், மோதிரம் மற்றும் சிதைந்த காணீலியன் மணிகள் கிடைத்தன.
புனித பொருட்களை வைக்கும் பெட்டியில் வரையப்பட்டிருக்கும் அம்புக்குறிக்கான அர்த்தம் தெரியவில்லை.மேலும், அப்பெட்டிகளில் கற்று புகும் அளவிற்கு சிறு துளைகள் இடப்பட்டிருந்தன.

தொழிற்பகுதியில் தண்ணீர் உபயோகத்திற்கான வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அவை, இரத்தினக்கற்கள், சிறுமணிகள், நீலக்கல், காமேதகம் ஆகியவற்றை தயார் செய்ய பயன்படுத்தியிருக்க வேண்டும்.
நீலக்கல், சிவன்மலை மற்றும் பெருமாள் மலையில் இருந்தும், கடல் நீர் வண்ணக் கல்லானது, படியூரில் இருந்தும், இரும்புத்தாது வெண்ணி மலையிலிருந்தும் வரவழைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகள், கொடுமணலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவை.

மேலும் சில கற்கள், மகாராஸ்டிராவில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டவை ஆகும். கொடுமணலில் அழகிய மணிகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின.

தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இதுவரை, 48 அகழிகள் மற்றும் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் 1985 , 1986 , 1989 , 1990 ஆகிய ஆண்டுகளில் படிப்படியாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 1998 மற்றும் 1999 இல் மேலும் 15 அகழிகளைக் கண்டுபிடித்தது.

இராஜன் பேசும்போது, “கொடுமணலில் நடத்தப்பட்ட ஆய்வு, தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வாகும். இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான அகழிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதேயில்லை. வெவ்வேறு வகையான கல்லறைகள், வெவ்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததை பிரதிபலிக்கின்றன. மேலும், ‘திசான்’, ‘விசாகிபோன்ற பிராகிருத மொழிச் சொற்கள் தமிழ்-பிராமி எழுத்துருக்களில் பொறிக்கப்பட்டிருப்பது அக்காலத் தமிழர்கள் வடஇந்தியர்களுடன் கலாசார மற்றும் தொழில்ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தமையை நமக்கு அறிவுறுத்துகிறதுஎன்றார்.

கொடுமணலில் நடத்தப்பட்ட மேற்கண்ட ஆய்வு தமிழுக்கும், தமிழர்களுக்கும் மேலும் சிறப்பு சேர்ப்பதாய் உள்ளதுதானே?இதுபோன்ற ஆய்வுகள் தமிழக அரசால் பெரிய அளவில் முன்னின்று நடத்தப்பட்டால் சங்க கால தமிழ் மக்களின் வளமான வாழ்க்கை உலகமறிய வெளிச்சத்துக்கு வரும் என்பதே அலை செய்திகளின் கருத்தாகும்.