பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 8, 2011

கனவுகளின் சொந்தக்காரன்


அன்பு தோழனே!!!
நலமா?
நள்ளிரவு பொழுதுகளில்
மெல்லிய இசையோடு என் உறக்கம்
தொலைத்த இரவுகளுக்கு காரணம்
உன் நினைவுகள் என்பதை
பகலில் உன்னிடம் சொல்ல
முடியுமா என்ன?

என் காதுகளில் மென்மையாய்
இசைக்கிறது சுசீலாவின்
"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்"
நினைவுகள் உன்னை சுற்ற தொடங்குகிறது...

பதின் வயதில் நான்
தொலைத்து விட்ட என்
மெல்லிய உணர்வுகளை...
இதயம் வருடும் கவிதைகளை, காதலை...
என்னிடமிருந்து எனக்காய்
மீட்டுத் தந்தவன் நீ...

உறவுகளின் பாசமும்
நட்பின் அரவனைப்புமாய்
வாழ்ந்த என்னில்
பரிதவிப்பின் சுகத்தையும்
காத்திருத்தலின் துடிப்புகளையும்
கற்றுக் கொடுத்தவன் நீ...

பேசி சிரித்த
சில நாட்களுக்குள்
உன்னை பிரியும் சில நொடிகளுகாய்
கண்ணீர் நிறையும் விழிகளை
எவ்வாறு உண்டாக்கினாய்?

எனக்குள் ஒளித்து வைத்த
ஒருத்தியை
எனக்கே தெரியாமல் வெளிக் கொணர்ந்து
என்னிடமே அறிமுகப் படுத்தினாய்...
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

மலர்களை,
பனித் துளியை,
மழையின் குளுமையை,
நதியின் சலசலப்பை,
விண்மீன் கூட்டங்களை ரசிப்பவள் தான்...
யாரிடமும் சொல்லியதில்லை...
உன்னிடம் மட்டும் என் இந்த மாற்றம்?

மடியில் உறங்குவது போல நடிக்கும்
என் கையில் வளையல்களை
எத்தனை முறை எண்ணிக் கொண்டிருப்பாய்
காதோர சுருள் முடிகளை ரசித்துக் கொண்டே...

நெற்றியில் படரும் வியர்வைத் துளிகளை
உன் மெல்லிய முத்தத்தால்
துடைக்கும் முயற்சியில் அதிகம்
வியர்க்கிறது எனக்கு....

முழு நிலா இரவுகளில்
நீ ஊட்டிவிடும் நிலாச் சோறு,
கைகோர்த்த மாலை நேர சிறு நடை,
கனவுகளில் சிணுங்கல்,
தலையணை சண்டை,
எண்ணி முடிக்காத நட்சத்திரம்
இவ்வாறு எனக்கான உணர்வுகளை
தேடும் உன்னை என்னவென்று சொல்ல...

அடை பட்டு கிடந்த
சிறு பறவை ஒன்றின் சிறை கதவுகளை
திறந்து கனவுகளின் வானத்தில்
பறக்க வைத்தவன் நீ..
என் கால்களிலும் கழுத்திலும்
விலகாத நிரந்தர தளைகள்
இன்னமும்...
தெரியும் தானே உனக்கும்?

உண்மையை சொல்வதெனில்....
நீ உணர்வுகளின் காதலன்
நானோ?
நிகழ காலத்தின் கைதியாய்....
இருவரும் பறந்து திரிவோம்
கனவுகளில் மட்டுமாவது....

சற்று திரும்பி படுக்கும் பொழுது
நினைவு வருகிறது நான் இருப்பது
என் நிஜத்தில்....
இன்னும் இசைக்கிறது
சுசீலாவின் குரல்...
"மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......"

இப்போதைக்கு என்னால்
முடிந்தது ஒன்று மட்டுமே...
கவனமாய் இரு..
ஏனெனில் என் கனவுகளின்
சொந்தக்காரன் நீ...