பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 13, 2014

கவிதை...





தொடக்கமுமின்றி
முடிவுமின்றி சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது
அக்கவிதை.
அது ஒரு காதலையோ
அதன்பின் அதன் மரணத்தையோ
பாடுவதாக வைத்துக் கொள்வதில்
எனக்கும்
உங்களுக்கும்
எந்த வகையிலும்
பிரச்சனைகள் இருக்கப் போவதில்லை.
இன்னமும் கூட
அக்கவிதை
அப்படியே தான் இருந்து தொலைக்கிறது
தொடக்கமும்
முடிவுமின்றி...

மனதின் ருசி

கட்டற்று மிகைவளர்ந்த விழுதொன்றில்
உயிர் தொங்கி விளையாடும் அத்தனியுடல்
தனிமை உக்கிரங்களின் தகிப்பிலொரு கொள்ளி வைத்த
ஆதிக் கனவின் தீண்டலில்
கொடும் பாம்புகளில் பற்கள்,
அர்த்தமற்றுக் கிடக்கிறதென அவ்வுடல்
பெருத்து அழுகி துர்நாற்றமுடன்
நெளியும் புழுக்கள் இடம் மாற்றிக் கொள்ளும்
நிறைவேறா அம்மனதின் ருசிகளை,
மண்மூடலோ
தீக்கங்கோ சுட்டெரிக்க முயலும்
இவ்வளவு தான்
ஆசையென சொல்லிக் கொண்டிருப்பதில்
சட்டென வீழ்வதில்
வீழ்த்துவதில் அப்புழுக்கள் மிஞ்சின.