பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 28, 2011

முதல் சிலிர்ப்பு


கண்கள் சிரிக்க
சிந்தை மயங்கி கிடந்த
நடுக்கம் பெற்ற மனதில்
பயமும் மகிழ்வுமாய்
அந்த நொடிகள்....

விரல்கள் தீண்டினாய்
மென்மையாய் தூண்டிவிட்ட
தீபமாய் மாறி
எரியத் துவங்கினேன் ...

உனக்குள் நானும்
உணரும் நீயுமாய்
கலந்திட்ட காதலின்
முதல் சிலிர்ப்பு அது...

யாருக்கும் கேட்காமல்
நீ கொடுத்த முத்தத்தின்
மெல்லிய ஓசைகளை
உணரும் என் காது மடல்கள் ...

ஒற்றை விரலால் என்
முகத்தில் நீ எழுதிய
கவிதைகளின் பொருள்
இன்னும் தேடி அலைகிறேன் நான்...

கழுத்தின் உதடு வருடல்கள்
முதுகில் வரைந்த ஓவியங்கள்
சிவந்து போன கன்னங்களுடன்
மயங்கும் விழிகளில்
நீங்கா கனவுகள்...

ஈரக் கூந்தல்
விரல் நுழைத்து
உச்சி முகரும் அந்த நொடியில்
உணர்வுகள் தடுமாறும்...

உடலெங்கும் நனைத்தது
வியர்வையா
உன் முத்தங்களா
ஐயம் கொண்டு இதழ் வெடிக்கும்...

உடைகள் பாரமென
பாரங்கள் சுகமென
பயமொன்று உள் நுழைய
வெளியேறுகிறது மீதமான
தயக்கமொன்று...

வெட்கத்தால் முகம் சிவக்கும்
என்னை முழுதுமாய்
சிவக்க வைக்கும்
கலை ஒன்றை எப்படி
அறிந்தாய் ...

அனுமதி கோரும்
பார்வையில்
அந்த அரைநொடி கணமொன்றில்
புன்னகையால் சம்மதம்
தருகிறேன் நான் ...

தங்கஆபரணங்கள் நீக்கி
உயிரை அணிகிறாய்
குழைந்த தேகத்தில் அவிழ்கின்றன
இன்ப முடிச்சுகள் ஒவ்வொன்றாய்
ஒரு மெல்லிசையின் தேடலென...

கொடுத்தலுக்கும்
பெருதலுக்குமான போராட்டங்கள்
பந்தயக் குதிரைகளென
வேகமான மணித் துளிகள்
அனலடிக்கும் குருதியின்
அடங்காத தொடக்கமாய்..

இன்பமும் வேதனையும்
கலந்த இடமொன்றில்
இருளும் ஒளியும்
சங்கமித்த காலம்
கண் மூடிய ஏகாந்தம்...

உடல் சிலிர்த்து
நீயடங்கும் வேளையில்
இறுகி கொள்ளும்
கைகளை பிரித்து விட
நிமிடங்கள் போதுமானதாக இல்லை...

வெப்பப் பெருமூச்சில்
உனை அணைத்து
விரலால் தலை கோதி
நெற்றியில் நான்
தந்த முத்தத்தின் ஈரம்
என் உதடுகளில் இன்னும்
எஞ்சியிருக்கிறது உனக்கென ...

சொல்லாத நிஜங்கள்


ஏதோ ஒரு சுமையை
மனதில் ஏற்றி விட்டதாய்
குழம்பித் தவிக்கும்
பொழுதுகளில் நான்...
என்ன செய்யப் போகிறாய்
என்னை நீ
இப்படியே தவிக்க விடுவதால்
முரண்பட்டு திரிகிறது
எனது நாட்கள்...
பேச வேண்டும் என
பேசும் சொற்களில்
நிறைய உணமைகளை
மறைத்து விடுகிறாய் போலும்...
மரகொத்தி ஒன்றின்
இடைவிடா முயற்சியென
துளைகளாகிக் கொண்டிருக்கிறது
வினாக்களின் விசாரணை...
குரல்வளை இருக்கும்
கயிருகளென திணறிக்
கொண்டிருக்கிறேன் என்
தனிமைப் பொழுதுகளில்...
விடுபட நினைத்து
உயிர் கழற்றும் வேளையில்
கனவுகளோடு வருகிறாய்
கரங்களை பிடித்துக் கொள்ள...
முடிவிலா ஏக்கங்கள்
திசை தேடும் பயணங்களென
உன்னை தேடும் என்
உயிர் காற்றில் நிரம்பி
தவிக்கிறது நமக்கான
ஒரு வாழ்வு...

கலர் மீன்களும் கடிகார முட்களும்...


அணிலோ
கிளி ஒன்றோ
வருமென காத்திருக்கிறது
இடி தாக்கிய
ஒற்றைப் பனை மரம்...

காகங்களே இல்லா
உலகொன்றில் நதியென
நானும்
அகத்தியனின் கமண்டலமாக
நீயும்..

திருவிழா கால
குழந்தைகளாடும்
குடை ராட்டினத்தில்
புலியை துரத்துகிறது
மானொன்று...

கண்ணாடிக் கூண்டுக்குள்
அலைந்து கொண்டே
இருக்கின்றன
கலர் மீன்களும்
கடிகார முட்களும்...

என் மரணம் பற்றி
எனக்கு தெரியும்
காதல் முடிந்து கனவுகள் முடங்கி
எங்கே எப்பொழுது
இது மட்டுமே ரகசியம்...

என்னால் வரிசையாக
அடுக்கப்பட்ட விண்மீன்கள்
எரிகற்களாய் மாறிப் போய்
கிழே விழுகிறது
சிரிக்கிறது நிலவு...

அதிகம் சிரிப்பவனும்
அதிகம் சிரிக்கவைப்பவனும்
தன்னுள்
அடங்காத துயரத்தை
வைத்திருக்கிறானோ என்னவோ...

உன் வீட்டுக் குப்பைத்
தொட்டியில் கிழித்துப்
போட்ட கடிதங்கள்
அனைத்தும் எனக்காக
நீ எழுதியவை...

பேசத் துடித்து
தனித்திருக்கும் உனக்கு
உன்னுடன் மட்டும்
பேசும் மொழியொன்றில்
கவிதைகளை அனுப்புகிறேன்
இவை பேசும்...

அதிகாலை கவிதைகள்
விடியலோடு கரைந்து போகிறது
எனினும் காலவெளிகளில்
கலந்து இருக்கும்
ஒரு கருவைப் போல...