பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 9, 2011

சுவடுகள்


உன் குரல் கேட்க தவித்தும்
உன் அழைப்பை
அமைதியாய் வேடிக்கை
பார்க்கும் என்னில்
கண்ணீரின் சுவடுகள்
இந்த நிமிடங்கள்
உனக்கு நரகமாகி இருக்கும்
ஆனாலும் போலியாய்
புன்னகைக்கும் நிலையில் நீ
துடிக்கும் மனதில்
ஆயிரம் கேள்விகள்
யதார்த்த வாழ்வின்
முன் விடைகளின்றி நீளும்...
உணவும் நீரும்
வெறுத்த நிமிடங்கள்
உடைந்து போன
கடிகார முட்களாய்
இயலாமையில் தவிக்கும்
ஒவ்வொரு கணமும்
நிர்வாணமாய்
காட்சிப் பொருளாகிறேன்
புரியும் தானே உனக்கும்...
உறவுகளும்
பந்தங்களும் உண்மையெனில்
எனக்கும் உனக்குமான
அன்புதேவைகள் எதற்கு?
சுயநலமற்ற அன்பே
தேவையெனில்
எனக்குள் ஏன் இந்த
ஆவேச பிடிவாதம்
எனக்குள் இருக்கும்
மிருகத்தை
உணர்கிறேன் இந்த நொடிகளில்...
முத்தமிடவோ
தோள் சேர்த்து நடக்கவோ
யாரையும் அனுமதிக்காத
என் உணர்வுகளுக்கு
நீ யாரென்று தெரியும் தானே
உறக்கம் தொலைத்த
இரவுகளை நான்
உருவாக்கிக் கொள்வதின்
அர்த்தங்கள் தெரியவில்லை...
நான் யாரை வெறுக்கிறேன்
உன்னையா
என்னையா
நம் நேசத்தையா
குழம்பிப் போன
குட்டையில் மீன்கள்
பிடிக்கலாம்
மனதில்...
நேசித்த ஒரு உறவை
வெறுப்பதை விட
வெறுப்பதாய் நடிப்பது
அதிக வேதனையாய்
சில நேரம் கனவுகளை
விட்டு விலகாமல்
இருப்பது கூட மகிழ்வே....
எங்கெங்கோ திக்கி திணறும்
என் எண்ணங்களை
பொறுக்கி எடுத்து
உரு சேர்க்கிறேன்
உயிர் கொடுப்பதும்
கொடுக்காமல் விடுவதும்
உன் விருப்பம்....