பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 26, 2012

PARTITION


இந்திய ராணுவத்திலிருந்து திரும்பிவிட்ட சீக்கிய இளைஞனுக்கும்,பிரிவினையின் போது நாட்டிலிருந்து வெளியேரும் வழியில் பாதிக்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்குமான காதலை,வாழ்க்கையை,இந்திய பாகிஸ்தான் பிரிவினையை, அதன் வலிகளை அதனால் அவர்கள் வாழ்வில் எற்படும் துயரங்களை அற்புதமாய் சொல்லும் ஒரு திரைக்கவிதை....


இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் அப்பாவி இஸ்லாமியர்களை கொல்லத் துரத்துபவர்களிடமிருந்து ஒரு வனப் பகுதிக்குள் புகும் நசீமை காப்பாற்றுகிறான் கியான்.
மாறுவேடம் தரித்து தன் இருப்பிடம் அழைத்துச் சென்று மறைத்து வைக்கிறான்.அவளை பாகிஸ்தானுக்கு தான் அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கிறான்.இதனிடயே கிராம மக்களுக்கு விசயம் தெரிந்து விடுகிறது.டெல்லி சென்று அவளை பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறான். கிராம மக்கள் சிலர் ஏற்றுக் கொள்ள, இயல்பு திரும்புகிறது.இருவருக்குமான உறவு நெருக்கமாகி திருமணத்தில் முடிகிறது.வருடங்கள் ஓடிவிட ஒரு குழந்தையோடு மகிழும் வேளையில், நசீமுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைக்கிறது. கணவனையும், குழந்தையையும் விட்டு தனியே செல்கிறாள்.வாரங்கள்,மாதங்களாக கியானின் கடிதங்கள் அவளது சகோதரர்களால் மறைக்கப்படுகிறது.இந்தியாவிலோ குழந்தையுடன் அவனது தவிப்பும் காத்திருப்பும் நீள்கிறது.நசீமுக்கு உண்மை தெரிய வீட்டினுல் சிறைவைக்கப் படுகிறாள்.பொறுமை கடக்கும் கியான் மகனுடன் டெல்லி சென்று அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல முயல்கிறான்.தன் மதம் துறந்து, பெயர் துறந்து இறுதியில் இரவில் திருட்டுத்தனமாக நுழைந்து இறுதி ரயில் நிலையக் காட்சி வரை நம்மையும் தொடர்கிறது பதற்றம்.
கியானும், நசீமும் நடிகர்களாக இல்லாமல் கதாபத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.மேலும் குறிப்பிடப்பட வேண்டிய கதாபாத்திரம், கியானின் படைத் தோழனாக வந்து இறந்து போகும் ஆண்ரு வின் காதலி மார்கரெட்.குழந்தையாக வரும் சிறுவன். அற்புதமான தேர்வு.

குறிப்பிடத் தக்க காட்சிகள் நிறையவே இருக்கிறது.குறிப்பாக கலவரத்தில் இறந்து கிடக்கும் தாயிடம் பாலருந்தும் குழந்தை, சிதறிக் கிடக்கும் கால் நடைகள், பாகிஸ்தானிலிருந்து வரும் கோர ரயில் இப்படி பதற வைக்கும் சிலவும்...
தந்தையும் சிறுவனும் நசீமை எதிர்பார்த்து மழையில் நனைந்த படி நின்றிருக்கும் காட்சி, ஒரு சீக்கியன் தன் நீண்ட கூந்தலை வெட்ட நடுங்கும் நாவிதனின் கைகள், இறுதி கட்ட ரயில் நிலைய காட்சி என நம்மையும் படத்தினுள் இணைத்து விடுகிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி கவிதையென மஞ்சள் நிறப் பூக்கள் இடையே இருவரின் மகிழ்ச்சியான வாழ்வும் கண்முன்னே அகல மறுக்கிறது.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விசயம் ஒளிப்பதிவு.கலவரத்தையும், அழகிய கிராமத்தையும், மஞ்சள் பூக்களையும் காட்டி விடுகிறது.



நடிப்பு:

கியான் - ஜிம்மி மிஸ்ட்ரி
நசீம் - கிறிஸ்டியன் க்ரூக்

இசை - பிரையன் டைலர்


ஒளிப்பதிவுடன் திரைக் கதை எழுதி இயக்கி இருப்பவர் - விக் சரின்

வெளியான வருடம் - 2007

ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களின் இடப் பெயர்வு, ஒற்றைக் கிறுக்கல் கோட்டின்
மூலம் நிகழ்ந்தது.இது தான் உலகில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த பெரும் வரலாற்று புலம் பெயர்தல். இந்த நிகழ்வில் ஏறக்குறைய பத்து லட்சம் மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன.

இப்ப்டத்தின் பெரும் பகுதி இருவரின் தனிப் பட்ட வாழ்வெனினும், இடையிடையே மிக இயல்பாகத் தோன்றும் மத சிக்கல்களும், லட்சக்கணக்கான உயிர்களின் அலறல் துடிப்பும் கலங்க வைக்கிறது.இந்திய எல்லையில் இந்துக்கள் ஆடிய கோரத்தாண்டவமும், அதற்கு பதிலடியாக அங்கிருந்து வரும் புகைவண்டி சடலங்களை சுமந்து வருவதும் “நள்ளிரவில் சுதந்திரம்” படித்ததை காட்சியாக்கியது போல் இருந்தது.

# திரைப்படம் பற்றிய முதல் பதிவு இது,எழுத காரணமாக இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்தவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.