பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 9, 2012

அன்புள்ள அம்மாவுக்கு....


உன் எல்லா உரிமைகளையும்
மூன்று முடிச்சுக்காகவும்
பெற்றெடுத்த எனக்காகவும்
துறந்து நிற்பவளிடம் எப்படிச் சொல்ல?
அறுபதை நெருங்கி விட்ட பிறகும்
ஆடு மேய்க்க வேண்டுமென்கிறாய்
களை பறிக்கவும்
நெல் நடவும்
பருத்தி எடுக்கவும்
இன்னமும் கூட வயல் நோக்கி
காலணிகள் இன்றி தனியே நடக்கிறது உன் கால்கள்...
அதிகாலை உன் தேநீர் வாசத்தில் மட்டுமே
நான் கண்விழித்திருக்கிறேன்
நீ விற்குப் புகையில் சுடுநீர் வைக்க
குளித்து விட்டு கிளம்பி இருக்கிறேன்
......
...
..
இன்று
உன்னை விட்டு சிறு தொலைவில் இருக்கும் போதும்
காய்ச்சலில் கிடந்த எனக்கு வைத்துக் கொடுத்த
மிளகு ரசம் இன்னும் கூட நாவுக்கடியில் ருசிக்கிறது...
நீ நம்பும் தெய்வங்களை விட
நீ தான் பெரிய தெய்வம் என தெரியுமா உனக்கு,
கல்லூரிக்கு செல்லும் நாளில்
நீ கொடுத்த ஐந்து ரூபாயில்
ஒரு ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறேன்
உன் வியர்வையின் அடர்த்தி அதிகமென,
இன்று நான் கொடுக்கும் ஆயிரங்களும்
அத்தகைய மதிப்பில்லாதவை காரணம்
என் குளிர் அறையில் வியர்ப்பதே இல்லை...
எனக்குத் தெரியும் நீ அலைந்த வெயிலில் பெற்றது
எனக்கான இந்த சுகவாழ்வென...
ஒவ்வொரு முறை கிளம்பும் போதும்
சொல்லுவாய்....
"பத்தரமா போய்ட்டுவா சாமி..."
உன் முன்னால் அழக் கூடாதென
சற்று தள்ளி வந்து அழுவேன் தனிமையில்...
இன்று உலக மகளிர் தினமாம்
உனக்கு வாழ்த்துச் சொன்னால்
உன்னிடமிருந்து யதார்த்தமாய் வரும்
"அப்படினா?"
இக் கேள்விக்கு எப்படி விடை சொல்ல...