பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 3, 2011

சாபக் கனவுகள்


உனக்குள் புதைந்து கிடக்கும்
கவிதைகளை விட நான் ஒன்றும்
பெரிதாய் எழுதி விடப் போவதில்லை
உன்னைப் பற்றி...

பிடித்திருக்கிறதா என்ற கேள்வியுடன் நான்
ஆம் என்ற பதிலுடன் நீ
இருவருமாய் காத்திருக்கிறோம்
ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி...

ஒருவேளை இந்த நேரத்திலும்
உன் விரல்கள் அனிச்சையாய்
தடவிக் கொண்டிருக்காலாம்
அலைபேசியில் என் எண்களை...

உன் மெல்லிய உதடுகளை
வருடும் போது என் விரல்கள்
உதிர்ந்து விட்ட ஒரு
மயிலிறகாய் மாறி விடுகிறது...

என் கவிதைக்கான முதல் தேடல்
காலையில் உன் நெற்றியில் நான் இடும்
குங்குமத்தின் சிறு வட்டத்தில்
தொடங்கி விடுகிறது...

நாம் இருவருமாய்
இணைந்து ஒரு மழை நாளில்
பார்த்த வானவில்லில்
பதினாறு வர்ணங்கள்...

நம்முடைய வாரிசை நீ
சுமப்பதை என் தோள்களில்
சாய்ந்து கொண்டு சொன்ன போது
நான் பார்த்தது இவ்வுலகின்
அழகான வெட்கம் ஒன்றை...

இன்னும்
இன்னுமாய்
ஏராளமான கனவுகள்
கொட்டிக்கிடக்கிறது என்னில்
உன்னை சேரும் பாதைகள்
அடைபட்டு கிடக்க
வாழ்வின் சாபங்களாகவும்....