பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 20, 2012

சில உண்மைகள்...


நான் பெண் என்பதே புரிவதில்லை உனக்கு
என் மீதான சமூக கட்டுகள் மட்டும் புரிந்துவிடுமா என்ன?
உன் மீதான காதலைக் கூட உறவுகளிடம் சொல்லி
ஆசி பெறவோ அழுது புலம்பவோ முடியா நிலை...
மனதோடு காதலைப் புதைத்துக் கொண்டு
புன்னகையோடு வலம் வரும் அதே சாபம்
எனக்கும் பரிசளிக்கப் பட்டிருக்கிறது...
இன்னுமொரு மும்தாஜென நானோ
ஷாஜகானென நீயோ வாழ முடியாது
இருக்கும் தாஜ்மஹாலும் காதலின்
காட்சிப் பொருளாய் மாறிக் கிடக்கிறது...
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்யவோ
காதோரமாய் உன் குரல் கேட்கவோ
மழை நனைக்கும் இரவொன்றில்
நிலவை துணைக்கழைத்து நடை பயிலவோ
ஏன் ஒரே ஒரு வேளை உனக்காக
உணவு சமைத்துப் பரிமாறவோ கூட இயலாது...
என்னைப் பார்த்து கேலியாய் சிரிக்கிறாய்
எனக்கும் இது கொடுமையாகத் தான் இருக்கிறது
உன்னைச் சந்தித்த நாளை ஒன்றினை
நான் சபித்துக் கொண்டிருக்கிறேன்...
எனக்கே புரிவதில்லை நான் யாரென்று
உன்னைக் கூட தண்டிக்கத் தோன்றுகிறது
என் அழகான வாழ்வில் நீ புயல்
நீ போன பின்னதான என் வாழ்வில்
வெறும் மணற் குவியல் சித்திரங்கள் மீதம்...
இனி எப்படிப் புரிந்து கொள்வாய்
என்பதில் தான் இருக்கிறது உன் வாழ்வு
என்னைப் பற்றி யோசிப்பாய்?
உன்னால் யோசிக்க மட்டுமே முடியும்
நேசித்தலும் யோசித்தலுமே உனக்கானவை
எதற்கும் கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வா
அங்கு உன்னைச் சுற்றி அலையும்
சில நிதர்சன உண்மைகள்...
எத்தனையோ புதைந்த நேசங்களை
மண்மூடிப் புதைத்துக் கொண்டுதானிருக்கிறோம்
சடலங்கலெனப் பெயரிட்டு சிறிதும் தயக்கமின்றி...
இதில் நீயும் நானும் மட்டும் விதி விலக்கா என்ன?

கதவு...


கதவுகளை இறுகச்சாத்திவிட்டாய்
நான் உள்ளே வருவதெப்படி?

உடைத்து வந்தாலோ
உடைந்த கதவுகள் பற்றியே
சீற்றம் வருகிறது

உன் கதவுகளுக்குரிய சாவி
இப்போது என்னிடமில்லை
சாவியில்லாமல் பூட்டுடைக்க
எனக்கும் இஷ்டமில்லை
சாவிகள் கிடைத்தாலும்
உன் விருப்பின்றி
ஒருக்காலும் திறவேன் நான்

திறக்கும் என
நிலவின் இராத்திரிகளிலும்
நிலவை விடியல் தின்றபின்னும்
உன் கதவருகில்
காத்திருந்த நான்
தற்போது
எழும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்

என் வெறுமை இப்போது
பரந்த வெளிகளால்
நிரப்படுகிறது
சிறு புள்ளியாகி
மறைந்துகொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமிடையிலான
மூடிய கதவு
விதிகள் உடைபடும் சப்தம்
காலின் கீழ்

நீ கதவு திற!

பொறுக்கிச் சேகரித்த
பழைய சாவிகளெல்லாம்
அந்த வாசலில்
வைத்திருக்கிறேன் நான்

காற்றாகிவிட்ட மனதிற்கு
கதவுகள் இனி எதற்கு?
மிக அழகு
வெளி நிலவு!
கதவற்ற பிரபஞ்சம்!
திறந்த பூமி!

நான் போய்க்கொண்டிருக்கிறேன்

-கவிதா. நோர்வே
http://www.vaarppu.com/view/2592/

விலைமாது


ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தால்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!

நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

-தமிழ்தாசன்
http://www.vaarppu.com/view/2587/