பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 11, 2011

பரிதவிக்கும் கவிதை...


தோட்டத்தில் பதியமிட்ட மல்லிகைக் கொடியின்
முதல் மொட்டு மலர்ந்த நொடி
பாரம் தாளாமல் வளையும் இலையிலிருந்து
சொட்டும்
ஒரு துளி மழை நீர்
அதிகாலை புற்றிலிருந்து ஈசல்கள்
வெளிவரும் அற்புத கணம்
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
மெல்லிய உதட்டுச் சுழிப்பு
கதிரவனின் வெயிலில் கரையத்
துடிக்கும் பனித் துளி உருளைகள்
யாரும் கண்டுவிடாத நேரத்தில்
குட்டிக்கு பால்க் கொடுக்கும் தாய் ஆடு
நாய்க் குட்டியின் உறக்கம்
வண்ணத்துப் பூச்சியின் முதல் சிறகடிப்பு
தேனீக்களின் மலர்த் தேடல்
கிணற்றின் ஆழத்தில் ஒளிரும்
மீசை மீன்கள்
சாரைப் பாம்பொன்று
சட்டை மாற்றும் சூழல்
தொலை தூரத்தில் கூவி வரும்
நீராவி புகைவண்டி குரல்
வானமெங்கும் அலையும் மேகக் கூட்ட பறவைகள்
சிறுகல் பட்டு நெளியும் குளங்களின் வட்டங்கள்
மெல்ல மெல்ல தோகை விரிக்கும் மயில்களென
அனைத்தையும் ஒரு சேர கண்டுவிட துடித்து
அத்தனையும் இழந்துவிட்ட
பரிதவிப்பில் தனித்திருக்கிறது
உனக்கான கவிதையொன்று....

கரையும் வாழ்வு...


சில சில்லறை காசுகளுடன்
நைந்து போய்க் கிடக்கிறது நீ தந்த
இரண்டு ருபாய் நோட்டு...
இருவரும் பயணித்த பேருந்துகளின்
கட்டணச் சீட்டுகள் இன்னும்
மறக்க விடுவதில்லை கடந்து வந்த
தூரங்களையும் பாதையோர மரங்களையும்...
உன்னிடமிருந்து தெரியாமல்
எடுத்த கைக் குட்டையில்
இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது
உன் வியர்வையின் வாசனை...
ஒவ்வொரு தெருவிலும்
பதித்து வந்த காலடிச் சுவடுகள்
தளம் பூசப்பட்டு வெடித்துக் கிடக்கிறது
இந்த தனிமை நாட்களில்...
ஒரே ஒரு முறை உனக்கென
நான் வாங்கி வந்த மலர்ச் சரத்தின்
காய்ந்த மீதங்களை தேடுகிறேன் நினைவெங்கும்...
என்னை வெறுத்து ஒதுக்கி
நீ வாழும் வாழ்வில் ஒரு கணமேனும்
உன் புன்னகையில் ஒளிந்து கொண்டு
வெளிப்படுவேன் உனக்கும் தெரியாமல்...
எத்தனை சொந்தங்கள் இந் நாட்களில்
அந்நாளில் தந்தையென அறிமுகமானவன் நான்
அறிமுகம் தந்தவள் நீ
இருவரின் தோள்களை சாய்ந்து கொண்டு
அப்பா என்றழைத்தது நம் பிள்ளை...
காலங்கள் கடந்து விட்ட போதிலும்
முகம் கானா உன் நலம்
விசாரிக்கும் என் தாயின் கண்ணீரில்
கரைகிறது என் நாட்கள்...