பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 31, 2012

நானும் ஒரு சிறுவனே...


இன்று காலை ஒரு மின் ரயில் ஒன்று கடப்பதற்காக பூட்டப் பட்ட ரயில்வே கேட் முன் நின்றிருந்தேன். ரயில் பாதி கடக்கும் போதே ஒரு சிறுமி தன் கையினை நீட்டி "டா டா" காட்டிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். நானும் பதிலுக்கு என் கைகளை அசைக்கத் தொடங்கினேன். எங்கே செல்கிறாள், நான் யார், அச் சிறுமி யார் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அச் சிறு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி...

சுற்றிலும் இருந்த நாகரிக கூட்டம் என்னை வித்தியாசமாய் பார்த்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட எதுவுமே இல்லை. நான் பதிலுக்கு கையசைத்ததும் தன்னுடன் இருந்த மற்ற சிறுவர், சிறுமியரிடம் சொல்ல, ரயில் என்னை கடந்து சிறிது தூரம் செல்கையில் என்னை நோக்கி ஐந்து, ஆறு கைகள் அசைந்து கொண்டிருந்தன... நல்ல வேளை மற்றவர்களைப் போல் எனக்குள் இருக்கும் சிறுவனை நான் கொன்று விடவில்லை... :-)

உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் குட்டீஸ்....

காதலெனும் மது

காதலின் குடுவையில்
சேமிக்கப் படுகிறோம்
இருவருமாய்...

ஆயுள் முழுதும் போதை
வேண்டுபவன்
காதலைக் குடிக்கிறான்...

சிறிது சிறிதாய்
காதலை குடித்தவன்
வாழ்வில் நிதானமாகிறான்...

அவசரமாய் குடிப்பவன்
தடுமாறி விழுகையில்
பொய்யென புலம்புகிறான்...

சிலர் மயங்கிக் கிடக்க
பலரை தெளிய வைக்கிறது
காதலெனும் மது...

குடித்தவனும் சொன்னதில்லை
குடிக்காதவனும் சொன்னதில்லை
காதல் போதுமென...

ஒரு தேநீர் சந்திப்பில்...

ஒரு தேநீர் பருகிய
மாலை நேரம் நினைவிருக்கிறதா?
மெல்லிசை பரவிய
தருணத்தின்
ஆவி பறந்த கோப்பைகள்
நினைவிலிருக்கிறது
பிரிந்து விடலாமா
முதல் வார்த்தையை
நீ ஒலித்தாய்
இயலாதென்பதை
நான் ஒளித்தேன்
தோற்றப் பிழையோ
காட்சிப் பிழையோ
ஏதுமின்றி முடிந்து போனது
அந்நாள்
நினைவில் பிழைகள் ஏதுமின்றி
எப்பொழுதும் இருவருமாய்
செல்வதும்
திரும்புவதுமே வழக்கம்
நீ மட்டும் முதலில்
திரும்பிய நாள் அன்று
நான் மட்டும் தனித்து
தவித்துக் கிடந்த நாள் அன்று
இதே போன்றொரு
காலை வேளை
தேநீர் சந்திப்பில் தான்
சொன்னாய்
என் கவிதைகளை நேசிப்பதாக
இன்றும் அப்படித் தான்
எப்பொழுதுமே
உன் கவிதைகளை
நேசிக்கிறேன் என்பதாய்
சொல்லிச் செல்கிறாய்
இடையில் வந்தவனும்
பிரிந்தவனுமாய் நிற்கிறேன்
சுற்றிலும் பரவிக் கிடக்கிறது
நீ வாசித்த
கவிதைகளின் வாசமும்
உன் சுவாசமும்...

May 30, 2012

கடைசி வார்த்தை....

நம்மைப் பிரித்தபடி ஒழுகும்

மழைத் திரைக்கு அப்பால்

என் கடைசி வார்த்தைக்காக

காத்து நிற்கிறாய் நீ

.

நீர்மூடிய மூக்குக் கண்ணாடியைத்

துடைக்கும் சாக்கில் குனிந்தபடி

நானும் தேடிக் கொண்டிருப்பது

அந்தக் கடைசி வார்த்தையைத்தான்

நாக்கு நுனிவரை வந்த சில வார்த்தைகளுமே

அர்த்தமற்றுக் கரைய

அப்படியே உள்ளிழுத்து எச்சிலோடு விழுங்குகிறேன்

வாழ்வில் முதன்முறை

மொழியின் போதாமையை

முழுதும் உணர்கிறேன்

.

கடைசியில் எந்த வார்த்தையும் கிடைக்காமல்

கண்ணாடியைப் போட்டுக்கொள்கிறேன்.

மங்கலாகத் தெரியும் ஈரக் கண்ணாடியையும்

உன் புருவங்களில் சொட்டும் மழையையும்

காரணம் காட்டி

நீ அழவில்லையென்று

எனக்கு நானே சமாதானம் சொல்கிறேன்.

“வலுத்துவிட்ட மழைக்கு

ஓரமாய் நிற்கலாமே”

என்றது நிச்சயமாய்

என் கடைசி வார்த்தை அல்ல..

தெரிந்தும் நீ

சட்டென்று வாகனத்தில் ஏறிப்

போய்விட்டாய்..

நிரந்தரமாய்.

.

இதோ

என்னைச் சூழ்ந்து சுவரெழுப்பி

உலகிலிருந்து தனியாக்கிய

மழை அறைக்குள்

நான் கண்டுகொண்டேன்

அந்தக் கடைசி வார்த்தையை..

.

“என்னை மன்னித்துவிடு”.

- Director charles

May 29, 2012

உன்னோடு ஒருநாள் - ஒன்று

இன்று ஞாயிற்றுக் கிழமை, இருவருக்குமே விடுமுறை தினம். மணி ஏழு. நேற்றிரவு பார்த்த திகில் படமொன்றால் கட்டியனைத்த படி தூங்கிப் போயிருந்த நீ, எனக்கு முன் விழித்திருந்தாய். மெல்ல காதோரமாய் வந்து இன்னிக்கு மாட்டிகிட்ட டா என்கிறாய். எனக்குள் கொஞ்சம் பயமும் கொஞ்சம் சந்தோசமுமாய் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து விடலாமா வேண்டாமா என்றபடி உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். போர்வை விலக்கி தலையணையாய் என்னை மாற்றிக் குறுக்கே படுத்துக் கொள்கிறாய். நான் எழுந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நீ இப்படி செய்வது உன் வழக்கம்.

எழுந்து குளியலறைக்குள் சென்று வருகிறேன், அதற்குள் சூடான தேநீர் வைத்திருக்கிறாய். ஞாபகம் வச்சுக்கோடா இன்னிக்கு நான் தான் என்கிறாய் சிரித்தபடி, வேறு வழியின்றி நானும் புன்னகைக்க, நேரம் கடக்கத் தொடங்குகிறது. அடச் சே இன்னிக்கு எந்த புதிய படமும் வெளிவர வில்லை. போன வாரம் போல் உன்னிடம் தப்பிகக் இயலாது. வகையாய் மாட்டிக் கொண்டேன்.சரி சரி என் படி காலை சமையலுக்குள் நுழைகிறேன். எப்பொழுதும் விடுமுறை தினமென்றால் நளபாகம் எனக்கானது. உனக்குப் பிடித்த சிலவற்றை எனக்கு சமைக்கத் தெரியும் என்பதால் நீயும் சமாளித்துக் கொள்கிறாய் அடிக்கடி குறிப்புகள் கொடுப்பதோடு சரி.

காலை உணவு முடிந்தது, அடுத்ததாய் காத்திருக்கும் ஒரு வார துணிகளைப் பொறுக்கி எடுத்த படி மொட்டைமாடிக்கு செல்கிறோம். பக்கத்து வீட்டு அக்கா உன்னைப் பார்த்து புன்னகைக்க என்னை தள்ளியபடி முதலில் ஓடுகிறாய். இந்த வாரம் துவைப்பது நீ, அலசுவது நான். அடுத்த ஒரு மணி நேரம் கழிகிறது. வீட்டுக்குள் வந்ததும் கணினியை ஆன் செய்ய விழைகையில், குறுக்கே வந்து தடா என்கிறாய். வேறு வழிகளில்லை. உன்னுடைய ஸ்கூட்டியில் காய்கறி வாங்க அடுத்த பயணம். அடுத்து மதிய சமையல். உணவு, மதிய நேர தூக்கம் என நேரம் கடந்து விட மாலையாகிறது.

வாங்க சார் என எழுப்பி அழைத்துச் செல்கிறாய். இனி தப்பிக்க வழிகளே இல்லை. உன் நெடு நாள் ஆசை. ம்ம் நடக்கட்டுமென அமைதியாய் அமர மெல்ல டிரிம்மரை எடுத்து என் ஆறு நாள் தடியை செதுக்கத் துவங்குகிறாய். எல்லாம் முடிகையில் மீசையை சரி செய்வேன் என அடம் பிடித்து, நான் உன் கையை பிடிக்க, நீ திமிறி அழுத்த பாதி மீசை காணமல் போயிருக்கிறது. போடி என அடிக்க துரத்த, ஓடிச் சென்று ஒளிகிறாய். சிரித்தபடி முழு மீசையை எடுத்து விட்டு வருகிறேன், என்னையே எனக்கு புதிதாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது வரை ஒரு நாள் கூட மீசை இல்லாமல் இருந்ததில்லை நான். நாளை அலுவலகத்தில் வரும் கேள்விகளை சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு மீண்டும் தேநீர், சிறிது தொலைக்காட்சி என கழிய, இரவு உணவுக்குப் பின்னதான வேளையில் படுக்கையில் நான்.அருகே வந்து அமர்ந்து கொண்டு மன்னிசுடு டா என்கிறாய். இப்படி உன்னைப் பார்க்க எனக்கே பிடிக்கல, இனிமே இந்த மாதிரி விளையாட மாட்டேன் என்ற படி அருகில் சாய்ந்தாய். உன்னை இழுத்து அணைத்தபடி, விடுடா புஜ்ஜிமா, என் ஆபிஸ்ல பக்கத்து சீட் பொண்ணு ஒன்னு என்னை மீசை இல்லாம பார்த்தா நல்லா இருக்கும்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்துச்சு, காலைல அந்த பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்றேன் சிரிப்பை மறைத்தபடி . அருகிலிருந்த தலையணையை கையிலெடுத்தாய். மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி சில நொடிகளில் இலவம் பஞ்சையும் சேர்த்துக் கொண்டு சுழலத் தொடங்கியது. இருவருக்குமான தலையணை யுத்தம் தொடங்கியது பிறகு முடிந்தது.

காலையில் பக்கத்து வீட்டுக்கார அக்கா கேட்கும் போது உன் உதட்டின் காயத்துக்கு காரணத்தை சொல்லிவிடு என்றபடி கிளம்பினேன், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் ஆறு நாள் இருப்பதை சபித்தபடி...

"உன்னோடு கழிக்கும்
ஒவ்வொரு நாளையும்
திருவிழாவாக்கி விடுகிறாய்
உன் காதலால்..."

அம்மாவுக்காக

இன்றும் கூட மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவு வேளைகளில் லாந்தர் விளக்கை ஏற்றி வைக்கிறாள் அம்மா, தனது நாற்பது வருட காலத்தை மின்சாரமின்றிக் கடந்தவள், நான் படிக்கும் நாட்களில் ஏறக்குறைய என் கல்லூரி காலம் முடியும் வரை என் வீட்டில் மின் இணைப்பு இல்லை. சிவப்பு வண்ணமடித்த விளக்கை மாலை ஆறு மணிக்கு ஏற்றி வைத்து படிக்கச் சொல்லுவாள். அப்பா எப்பொழுதோ காலி செய்த குவாட்டர் பாட்டிலில் துண்டுத் துணியால் திரி செய்து அதை விளக்காக்கி அதன் வெளிச்சத்தில் சமைக்கத் துவங்கும் அம்மா, அன்று காட்டு வேலையின் இடை நேரத்தில் பறித்த கீரைகளை மண்சட்டியில் வேகவைத்து சோற்றோடு பிசைந்து எனக்கு கொடுத்த அந்த நாட்களை எப்படி மறக்க...

முதலில் எழுத்து வேலைகளை முடித்து விட்டு நான் படிக்கத் தொடங்கும் போது பதினோரு மணி ஆகிவிடும். அதன் பிறகும் அம்மா படுக்கையில் அமைதியாக விழித்திருப்பாள். நான் உறங்கப் போகும் நேரத்தை கணக்கிட்ட படி. காலை ஆறு மணிக்கு என் தந்தை என்னை எழுப்பும் போது சரியாக நான் உறங்க சென்ற நேரத்தை சொல்லி "பாவம் விட்ட்ருங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்" என்று சொல்லியதை அரைகுறை தூக்கத்தில் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தெரியாது அம்மாவுக்கு எப்படி இது தெரியும் என்று, ஏனென்றால் என் வீட்டில் அப்பொழுது சுவர் கடிகாரம் கூட இல்லை. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் புகைவண்டி ஓசை, தொழிற்சாலை மணியோசை என அவளின் நேரம் கணக்கிடும் முறை நானறியா ஒன்று.

தினமும் எட்டு ரூபாய்க்கு கூலி வேலை செய்து தினமும் அரிசி வாங்கி, டீ தூள் சர்க்கரை வாங்கி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்தவள் அம்மா.இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது, கடைக்கு செல்வதெனில் என்னை மட்டுமே அனுப்புவாள், காரணம் அதில் மீதமாக பெரும்பாலும் ஐந்து அல்லது பத்து பைசா கிடைக்கும். எதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்ள எனக்கு அனுமதியும் கிடைக்கும். எல்லோரும் மிதிவண்டி ஒட்டிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு கிடைத்த டயர் வண்டியோடு சுற்றிக் கொண்டிருப்பேன். வாடகை சைக்கிள் மணிக்கு ஒரு ரூபாய். ஞாயிறு விடுமுறை நாளில் நிச்சயம் எனக்கு அந்த வாய்ப்பு உண்டு. எனக்கு அரை மணி நேரம், அக்காவுக்கு அரை மணி நேரம் என காலத்தையே பகிர்ந்த தருணம் அது.

அன்றிலிருந்து இன்றுவரை என்ன படிக்கிறேன் என கேட்டதே இல்லை. சிறுவர்மலர், பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என கிடைக்கும் எல்லாவற்றையும் ஓசியில் படித்து விடுவேன். குட்டி கபீசும், இரும்புக் கை மாயாவியும் இன்னும் நினைவில் இருக்க எதை வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று அம்மா எனக்கு கொடுத்த அதிக சுதந்திரம் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த வேளை, லாரி ஒர்க்சாப்பில் எனக்கு வேலை. ஒரு மாதம் முடிகையில் ஓரளவு மதிப்பெண்களுடன் தேறி இருந்தேன். பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தது. அனைத்தும் இலவசம் என்றும், ஆண்டுக்கு புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 4000 ரூபாய் கட்ட சொன்ன போது யாருமே அன்றைய இரவில் தூங்கவில்லை.

இடையில் அக்கா படிப்பை நிறுத்தி விட்டு நூல் மில்லில் வேலைக்கு சேர்ந்ததும், அப்பாவின் வருமானம் கணிசமாக குறைந்ததும், அம்மா தன்னால் முடிந்தவரை குடும்ப பாரம் சுமந்ததுமாய் ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. லாரி ஒர்க்சாப்பில் வாழ்க்கை நிரந்தரப் படும் என்று நினைத்த வேளையில், பக்கத்து வீட்டு ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இருவர் எனக்கான பணத்தை அதிகாலை அம்மாவிடம் கொடுக்க, அம்மா அழுது நான் பார்த்த முதல் நாள். அது வரை எதைப் பற்றியும் கவலைப் படாத, எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனுசி அவள் என்றே நினைத்திருந்தேன்.

படித்து முடித்து இன்று சம்பாதிக்கும் பொழுது தெரிகிறது அன்றைய ஒரு ருபாய் எத்தனை மதிப்புடையது என்று. அம்மாவிடம் கொடுக்கும் பணத்திற்கு எந்தக் கணக்கையும் இதுவரை கேட்டதில்லை நான், அது போல் என்னிடமும் அம்மா எவ்வளவு சம்பளம் என்று கேட்டதே இல்லை. ஒருமுறை உறவினரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னதைக் கேட்டேன் "அவன் வயசில் அவனுக்கு எதுவும் வாங்கி தர முடியல, இப்போ அவனா எதை வாங்கினாலும் நான் கேட்க மாட்டேன்". அம்மா இது வரை என்னை ஒரு பணம் சம்பாதிக்கும் ஒருவனாக பார்த்ததே இல்லை. உனக்கு சரியானதை செய் என்பார், எனக்கு பிடிக்காத இடத்லிருந்து திடீரென வேலையை விட்டுப் போகும் போதும் என்னிடம் எதுவும் கேட்காமல் சிரித்தபடி சோறு போட்ட அம்மா என்றுமே தேவதை தான்.

இன்றும் ஏன் லாந்தர் விளக்கு எரிகிறது எனக் கேட்டேன் ஒரு நாள். அது என்னமோ தெரியல "எனக்கு அந்த வெளிச்சம் இருந்துட்டே இருக்கணும் போல இருக்கு குமாரு" என்று சொல்லும் போது அவள் கண்களில் எதோ ஒரு வலி இருந்தது. அது எனக்கானதாகவும் இருக்கலாம். இன்னமும் இரவு வேளைகளில் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது லாந்தர் விளக்கு அம்மாவுக்காக....

May 19, 2012

சிவந்த வானமும் சில நட்சத்திரங்களும்...

இயல்பாகத் தான் இருக்கிறது வெளி
சலனங்கள் ஏதுமில்லை
நீல வானமும் வெண் மேகங்களுமாய்
சிவந்த வானத்திற்கும்
சில நட்சத்திரங்களுக்கும்
சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்
என்னை நோக்கி ஒரு விண்மீன் உதிர்வதாய்
பகல் கனவில் மூழ்கிக் காத்திருக்கிறேன்
இதமான மாலைக் காற்று
வெயிலின் உக்கிரத்தை மறக்கடிக்கக் கூடும்
வெண்ணிலா வரும் நேரத்தை
கணக்கிடத் தெரியவில்லை எனக்கு
வெறும் போது  வரட்டுமென காத்திருக்கிறேன்
இருண்ட வானத்தில் பறக்கும்
வானூர்திகள் மின்மினிப் பூச்சிகளை
நினைவுபடுத்திப் போகிறது
மின்மினிகளைப் பார்த்துத் தான்
எத்தனை நாட்களாயிற்று
உள்மனதில் குரல் ஒலிக்கிறது
நெற்கதிர்கள் சுமந்த வயலில்
அதிகம் மின்னியதைப் பார்த்திருக்கிறேன்
பிறகு வயல்களுக்குப் பிறகு கரும்பென மாறி
இன்று கட்டிடங்களாகி கொண்டிருக்கிறது
வானத்தையும் நிலவையும்
கொண்டிருந்த பூமி
இக் கனவும் மின்மினிகளின் நினைவும்
இப்பொழுது முடிந்துவிடும் என்றோ
முடியாதென்றோ அறுதியிட முடியவில்லை
எப்படி இருந்த போதிலும்
சிவந்த வானத்திற்காகவும்
சில நட்சத்திரங்களுக்காகவும்
இன்னும் சிறிது நேரம்
காத்திருக்கத் தான் வேண்டும்....

May 15, 2012

அம்மாவின் படம்

செல்லரித்துப் போய்
பாசி படர்ந்த
சட்டத்துள்
அம்மாவின் கல்யாணப்படம்..

சிரித்த நிலையில்
கருப்பு வெள்ளையிலும்
அழகாக இருக்கிறது
ஆபரணங்களால் ஜொலிக்கும்
அம்மாவின் முகம்...

"அம்மா மாதிரி
சீதனம் போட்டு வந்தவள்
ஊருக்குள் ஒருத்தியுமில்ல"
கணக்கர் வீட்டுக் கிழவி
அம்மாவின் கதை
சொல்கிற போதெல்லாம்
பரணில் தூக்கியெறிந்த படம்
எடுத்துப் பார்க்கத் தூண்டும்...

விடைத்த நாசிக்கு
அழகு கூட்டியிருந்த
ஒற்றை மூக் குத்தியும்
சொந்தமற்றுப் போன பின்பும்
எப்படி
நிலைத்தே இருந்தது
அந்தச் சிரிப்பு மட்டும்...

- மீரா கதிரவன்.

முரண்

கண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்
நீந்த விடப்பட்ட மீன்கள்
கடலையே உருவகப்படுத்திக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கின்றன

உயிர்க்காட்சி சாலையில் அலைந்துதிரிந்து
கொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்
மண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்
தோல்திரைகளை சிறிது மூடித்திறந்தன

திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி
சட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்
சுவரொட்டியிலிருந்த வண்ணவண்ணப்பூக்களில்
தேனெடுக்க முட்டி மோதின

கூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த
அந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற
சாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.

திரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே
அமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்
சலிக்காமல் குயில்கள் பாடிக்கொண்டிருக்கின்றன.

வலிந்து வாசிக்க முயலவில்லையெனினும்
வீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட
என் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.

ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
மெல்லிய மலரின் விரிதல்களையும்
சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.

- சின்னப்பயல்

சுவடுகள்...

விட்டுச் சென்ற
விருந்தாளியின் புன்னகை
பரிமாறிக் கொண்டிருக்கிறது
அவர்களைப் பற்றிய செய்திகளை...

தூக்குக் கயிற்றின் மீது
ஊர்ந்து நகர்கிறது ஒரு எறும்பு
அதில் பலியாகப் போகிறவனின்
பரிதவிப்பு உணராமல்....

எதிரே குதித்து விளையாடிய
அணில் சொன்னது
உன் கவிதையில்
ஒரு மரத்தை நட்டு வை
அதில் நான் வந்து
விளையாடும் வேளை
நீ உணரலாம்
என் அன்யோன்யம்...

நான் அனுப்பி வைத்த
பொய்கள் எல்லாம்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
என்னிடமே
இன்னும் சில பொய்களை
அழைத்துக் கொண்டு....

கண்களில் ஆரம்பிக்கும் ஏணி
வானம் வரை நீள்கிறது
இனி என் வீடு வந்து போகும்
நிலவும்
நட்சத்திரங்களும்....

-ராஜா சந்திர சேகர்...

பாய்களின் சத்தம்...

கொத்தித் தின்னும்
நம்பிக்கையின் சிதைவால்
நரகமாகும் பொழுதுகளில்
நகர்கிறது வாழ்க்கை

கையகல மண மேடைக்குள்
முடங்க வேண்டும்
பெண் பிரபஞ்சம்
என்பதான
திராவக வீச்சில்  கருகும்
தாம்பத்யத் தோழமையோடு 
விடியல்கள்...

பிரம்மாஸ்த்திரம்
குருஷேத்திர யுத்தம் என
இணைகோடு
இல்லம்...

தீக் குளிப்புக்கு அப்புறம் வரும்
சகஜ சிரிப்பில்
நெகிழ மறுக்கிறது
அஞ்சரை அடி உயரச்
சதையும் ரத்தமும்
நரம்பும் மனசும்
சுருங்கிவிடுகிறது
அவளின் சகலமும்....

ஆனாலும் கேட்கிறது
அக்கம்பக்கத்தில்
பாய்கள்
விரிக்கப்படும் சப்தம்

இங்கே பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின் மன்னிப்பில்....


- ஆண்டாள் பிரியதர்ஷினி

ஒலிக்காத ஓசைகள்...

அதிகபட்சத் தனிமையில்
ஒலித்துக் கொண்டிருந்த மணியின் நாவினைக்
கட்டிப்போட்டு விட்டு
உனக்கான
இசையை ரசிக்கத்துடிக்கிறாய்
உன் வசதிக்கேற்ப கர்னாடிக் கஜல் என மாற்றி மாற்றி
இசையை ரசிக்க முடிகிறது உன்னால்
பாவம் மணியின் நாவு
ஒரு வார்த்தையேனும் பேசி விடத்துடிக்கிறது
அதன் குரலை நீ கேட்டு ரசிக்க
வேண்டுமாய்
தனக்கான லயத்தில் ஒலித்து விடவும்
முனைகிறது
சன்னல்களையும்
கதவுகளையும் அடைத்தாகி விட்டது
திரைச்சீலைகளையும் இழுத்து விட்டாயிற்று
துளி வெளிச்சமும் வராதபடிக்கு
இருள் போர்த்தப்பட்ட பிறகு
தேடத்துவங்குகிறாய்
சிறு ஒளிக்கீற்றையேனும்
இப்போது கொஞ்சம் மனமிரங்கி
மணியின் நாவை விடுவிக்கிறாய்
வெகு நாட்களாய்க் கட்டப்பட்டிருந்ததில்
பிடி தளர
நாவு கழன்று தரையில் கிடக்கிறது..

May 9, 2012

இன்னொரு உலகம்

நீண்டுயர்ந்த சுவர் முன் நிற்கிறேன்
அது பிரம்மாண்டம்
அது புதிர்
அது வியப்பை எனக்குள் விதைக்கிறது..

சிலர் ஏணியை வைத்து மேலேற முயற்சிக்க
முடியாத சிலரோ சுவரின் காது பதித்து
சப்தமொன்றை ஆராய்கிறார்கள்...

காகிதத்தை எடுத்துக் கொண்டு
தனிமையில் அமர்கிறேன்...
எப்படி இருக்கும் சுவர் மறைத்த மறுபுறம்?

புல்வெளியாக, பாலையாக
கடலாக, பெரு நீர்விழ்ச்சியாக

ஒரு வேளை பகலும் இரவும் இருக்குமா
பகல் மட்டுமே இருக்குமோ
இல்லை இரவு நீளுமோ

போய் பார்த்து விட ஆசை தான்
எனக்கு முன் யார் போயிருக்கிறார்கள்
போய்த் திரும்பியவர்கள் இருகிறார்களா?

அறிந்தவற்றை மட்டுமே சிந்திக்க
அறியா வெளி நிரப்பி அமையுமோ

சூரியனும்
நிலவே இல்லாததுமான
ஒரு சிவப்பு ஆகாயம் விரியலாம்
மொழி இல்லா சைகைகளும்...
அல்லது
உயிர் வாடையற்ற ஒரு
புதை குழி என்னை இழுத்து மூடலாம்...

இக் காகிதத்தை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
மறுபுறம் செல்லும் முயற்சியில் வென்றால்
அனைவருக்கும் வாசித்துக் காட்டலாம்
அல்லது
என்னையே நான் யாரென்றும் கேட்கும்
மனப் பிறழ்வை அடையலாம்
கொஞ்சம் காத்திரு
திரும்பி நான் வந்தாலும் வரலாம்

எல்லோருக்கும்
இன்னொரு உலகம்
இருக்கிறது.
எல்லோருக்குள்ளும்
இன்னொரு உலகம்
இருக்கிறது...



May 8, 2012

தேவதையின் வாசம்

தேவதையின் வாசம் அறையெங்கும்
சற்று முன்பு தான் வந்திருக்கலாம்
நான் இல்லாத நேரம்
சற்றே தயங்கி இருக்கலாம்
வெள்ளைக் கொக்கின் சிறகில்
ஒரு மெத்தை செய்து வைத்திருந்தேன்
அதை ரசித்திருக்கலாம்
அறையெங்கும் இரைந்து கிடக்கும்
புத்தகங்களையும்
ஒதுக்கி வைக்கப் பட்ட காலி மதுப் புட்டிகளையும்
கருகி தீந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளும்
தேவதையை சரிவர வரவேற்றிருக்காது தான்
நடுவில் தொங்கும் துணி கயிற்றில்
சாயம் போன உள்ளாடைகள்
மடிக்கப் படாத போர்வை
சுருட்டப் படாத கோரைப் பாய்
தேவதைக்கு இது புதியதாய் இருந்திருக்கலாம்
நாசி துவாரங்களில் துர்நாற்றம்
கால்களில் பிசுபிசுப்பென
ஓரமாய் வீசப் பட்ட லுங்கிகளை
வெறுத்துப் பார்த்திருக்கலாம்
வேறு வழிகள் இல்லை
கேட்டு விடலாம் யார் வேண்டுமென?
தயங்கியபடி சொன்னது
என் பெயரை
என் முகவரியை
நானில்லை அது என்று சொல்லி
கீழிறங்கும் தேவதையை
வேடிக்கை பார்க்கிறேன்
எனைச் சுற்றிலும் மணம் கமழ
பூக்களில் சிலவற்றை உதிர்த்துச் சென்றிருக்கிறது
நிறைகிறேன் நான்...

.....
...
..
நேயர் விருப்பப் பாடலொன்று
வானொலியில் ஒலிக்கிறது
"என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளை எங்கிருந்தாய்"....

காதல் களத்தில்

ஒரு விளையாட்டின் இறுதிக் கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்
களம் முழுதும் சுழன்றடித்து
சூழ்நிலையை உனதாக்கிக் கொள்கிறாய்
உன் மீதான குற்றச்சாட்டுகளில்
என் ஆர்வமின்மை உன்னை அச்சம் கொள்ள செய்கிறது
எனக்கு எப்படியேனும் விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்
ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாய்
அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறாய்
நேற்று வரை சுய விலக்கம் கொண்டிருந்த நீ - இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்
என் தோள்களோ சுமந்த பாரத்தில்
காய்ப்புக் காய்த்துக் கிடக்கின்றன
எனினும்
எனை ஏற்றுக் கொள்ளேன் என்ற
உன் அழுத்திய விளி கேட்டு
என் கர்ப்ப பாத்திரம் திறந்து
உன்னை இட்டு மூடிக் கொள்கிறேன்.

அதிஜீவனம்

சிறியதென்றாலும்
அதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது
ஆனால் சுற்றிலும் அடைத்துக்கொணடபடி
பூக்களையிட்டுக் காட்டியபடி
பிரார்த்தித்த படி

என்றாலும்
இக் குன்றுப் புல்லிற்கு
வேனலினூடே
அதிகம் ஜீவிக்க இயலுமோ?

கொன்றை மரமே கொன்றை மரமே
வெயிலை உருக்கி
ஸ்வர்ணமாக்கி
காதில் அணியும் கலையை
அதற்குச் சொல்லிக் கொடுக்கிறாயா?

ஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே
வேனலை எடுத்து
குளிர்த் தொப்பியாக்கி
தலையில் வைத்துக் கொண்டு விளையாடி
அதை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயா?

இல்லையெனில்
சிறிதன்றோ என்றெண்ணி
வேனலதை
பசுமைக்குத் திறந்து வீசிவிடும்..
‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)
வேனில் காலத்தைப் பற்றியது..
 

போலிக் கிரீடங்கள்...

எத்தனை இரவுகள் உனக்கான காத்திருப்பில் கழிந்தது என் அன்பே..
எத்தனை பருவங்களின் சுழற்சி
மாறி மாறி வந்து போயிற்று தெரியுமா?
உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
இதோ இந்த நதியின் நீர் வற்றிப் போயிற்று
இதிலிருந்த கடைசி மீனையும்
கொக்கு கொத்திப் போயிற்று
ஒரு விடியலில்
காணாமல் போன சூரியனால்
இருட்டு கவ்விக்கொண்டது
இதய அறையெங்கும்
அழைக்கும் குரல் கேட்காவண்ணம்
உன் செவிகள் திறனிழந்து விட்டன
எதையும் நோக்கவியலா
அந்தகம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது
உன் கிரீடங்களை இறக்கவோ,கழற்றவோ
நீ ஒரு போதும் தயாரானதில்லை
கர்ணனின் கவசகுண்டலம் போல
ஒருவகைக் கம்பீரத்தை
கவனமாய் சுமக்கிறாய்
ஆனால் என் அன்பே...
அதன் கனம் என்னால் தாளவியலாததாக இருக்கிறது....

சொர்க்கத்தின் கதவுகள்


திறப்பதற்கான சாத்தியங்கள் ஏதுமற்று..
வானில் இறுக்கமாக
மிக மிக இறுக்கமாக
மூடப்பட்டு விட்டன
சொர்க்கத்தின் கதவுகள்
ஏகாதசியோ,சிவன் ராத்திரியோ
கிழமைகளுக்குத் தெரிவதில்லை
நாம் அவைகளுக்கு வைத்த பெயர்கள்
எப்போதும் போலே விடிகின்றன
எப்போதும் போலே மடிகின்றன
இதற்கிடையே தான் நமக்குள்ளான
பலப்பரீட்சைகள்..