பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 30, 2012

கடைசி வார்த்தை....

நம்மைப் பிரித்தபடி ஒழுகும்

மழைத் திரைக்கு அப்பால்

என் கடைசி வார்த்தைக்காக

காத்து நிற்கிறாய் நீ

.

நீர்மூடிய மூக்குக் கண்ணாடியைத்

துடைக்கும் சாக்கில் குனிந்தபடி

நானும் தேடிக் கொண்டிருப்பது

அந்தக் கடைசி வார்த்தையைத்தான்

நாக்கு நுனிவரை வந்த சில வார்த்தைகளுமே

அர்த்தமற்றுக் கரைய

அப்படியே உள்ளிழுத்து எச்சிலோடு விழுங்குகிறேன்

வாழ்வில் முதன்முறை

மொழியின் போதாமையை

முழுதும் உணர்கிறேன்

.

கடைசியில் எந்த வார்த்தையும் கிடைக்காமல்

கண்ணாடியைப் போட்டுக்கொள்கிறேன்.

மங்கலாகத் தெரியும் ஈரக் கண்ணாடியையும்

உன் புருவங்களில் சொட்டும் மழையையும்

காரணம் காட்டி

நீ அழவில்லையென்று

எனக்கு நானே சமாதானம் சொல்கிறேன்.

“வலுத்துவிட்ட மழைக்கு

ஓரமாய் நிற்கலாமே”

என்றது நிச்சயமாய்

என் கடைசி வார்த்தை அல்ல..

தெரிந்தும் நீ

சட்டென்று வாகனத்தில் ஏறிப்

போய்விட்டாய்..

நிரந்தரமாய்.

.

இதோ

என்னைச் சூழ்ந்து சுவரெழுப்பி

உலகிலிருந்து தனியாக்கிய

மழை அறைக்குள்

நான் கண்டுகொண்டேன்

அந்தக் கடைசி வார்த்தையை..

.

“என்னை மன்னித்துவிடு”.

- Director charles