பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 19, 2012

சிவந்த வானமும் சில நட்சத்திரங்களும்...

இயல்பாகத் தான் இருக்கிறது வெளி
சலனங்கள் ஏதுமில்லை
நீல வானமும் வெண் மேகங்களுமாய்
சிவந்த வானத்திற்கும்
சில நட்சத்திரங்களுக்கும்
சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்
என்னை நோக்கி ஒரு விண்மீன் உதிர்வதாய்
பகல் கனவில் மூழ்கிக் காத்திருக்கிறேன்
இதமான மாலைக் காற்று
வெயிலின் உக்கிரத்தை மறக்கடிக்கக் கூடும்
வெண்ணிலா வரும் நேரத்தை
கணக்கிடத் தெரியவில்லை எனக்கு
வெறும் போது  வரட்டுமென காத்திருக்கிறேன்
இருண்ட வானத்தில் பறக்கும்
வானூர்திகள் மின்மினிப் பூச்சிகளை
நினைவுபடுத்திப் போகிறது
மின்மினிகளைப் பார்த்துத் தான்
எத்தனை நாட்களாயிற்று
உள்மனதில் குரல் ஒலிக்கிறது
நெற்கதிர்கள் சுமந்த வயலில்
அதிகம் மின்னியதைப் பார்த்திருக்கிறேன்
பிறகு வயல்களுக்குப் பிறகு கரும்பென மாறி
இன்று கட்டிடங்களாகி கொண்டிருக்கிறது
வானத்தையும் நிலவையும்
கொண்டிருந்த பூமி
இக் கனவும் மின்மினிகளின் நினைவும்
இப்பொழுது முடிந்துவிடும் என்றோ
முடியாதென்றோ அறுதியிட முடியவில்லை
எப்படி இருந்த போதிலும்
சிவந்த வானத்திற்காகவும்
சில நட்சத்திரங்களுக்காகவும்
இன்னும் சிறிது நேரம்
காத்திருக்கத் தான் வேண்டும்....