பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 11, 2011

திசைகளற்ற பறவையென


சரி என்று சொன்ன ஒற்றை நொடியில்
துவங்கும் புதிதாய் ஒரு பயணத்தில்
இழக்க நேரிடுகிறது
திரும்ப இயலா சில இடங்களையும்...
இரு உயிர்களின் கலத்தலை விட
கடினமானதாகிறது
இரு மனங்களின் புரிதல்களும்
தேடல்களும்...
வேறு வழிகள் இன்றி
சமரசங்களில் நீந்தி
கரை சேர்வோம் இருவரின்
கட்டப் பட்ட கைகளுடன்...
எனக்கான கவிதைகளும்
மெல்லிய இசைகளும்
இன்று வரை
உன்னை சேரவே இல்லை...
உடலின் வெப்பத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்
சில நேரம் மகிழ்வும்
பல நேரம் வெறுப்புமாய்...
இருந்தும் என்ன
அன்பை பகிரவும்
என்னை நேசிக்கவும் புதிதாய்
ஒரு உயிர் உன்னைப் போல...
வரவு செலவு
கணக்குகளில்
கழிந்து கொண்டே போகும்
காலங்கள்...
சுமைகளுடன் நான் திணறிய
கணமொன்றில் நீ
தாங்கிப் பிடிக்கிறாய்
கடமைகளின் கரங்களில்...
புதிதாய் உடைகளும்
அணிகலன்களும்
வித விதமான உணவுகளுமாய்
உறவுகளின் கூடுதலுமாய்
சுகமே என் சூழல்கள்...
திசைகளற்ற பறவையென
ஒவ்வொரு முறையும்
உன் கூட்டிற்கே வருகிறேன்
தாய்ப் பறவையென மாறிய பின்...
உன் நேசமும்
பாசமும் பொய்யென
போய் விடப் போவதில்லை...
இருந்தும்
என்னை ரசிக்கும்
எனக்கான கவிதைகளை
வார்க்கும் ஒருவனை
ரகசியமாய் வளர்க்கிறேன்
உனக்கு தெரியாமல்
எனக்குள்ளே...
என் தனிமைக் கனவுகளையும்
கையிலிருக்கும் மலர்களையும்
அவனுக்கென்றே
வைத்திருக்கிறேன் எப்பொழுதும்...

No comments: