பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 22, 2011

நீ இல்லாத பண்டிகை நாட்கள்


என்ன தான் பண்டிகைக்கு
நீ புதிது புதிதாய் கொலுசு
மாற்றிக் கொண்டாலும்,
எனக்கு ஒரே இசையைத் தான்
தந்து செல்கிறது உன் நடை...

இருவரும் தனித் தனியே
வாழ்த்துச் சொல்லுகிறோம் எல்லோருக்கும்...
நீ எனக்கும் , நான் உனக்கும் சொல்வதாய்
நினைத்துக் கொண்டு...

இனிப்புகள் புத்தாடைகள் என
நிறைகிறது வீடு,
எங்கே இருப்பாய் என
தெருவெங்கும் அலைகிறது மனசு...

நாத்திகனாய் இருப்பதில்
இப்படியும் ஒரு சலுகை...
கொண்டாட்டங்களே இன்றி கழிகிறது
பண்டிகை தினங்கள்...

வானவேடிக்கை நிறையும் இரவில்,
வெடித்துச் சிதறிக் கிடக்கிறது,
நீ கொளுத்தி விட்டுப் போன மனசு...

வந்து வந்து போகிறது
ஏதாவது ஒரு பண்டிகை
வருடம் முழுதும்,
இன்னும் நீ மட்டும் தான் வரவில்லை
நான் கொண்டாடி மகிழ...

உன் உறவுகளோடு
நீ கொளுத்தப் போகும் மத்தாப்புகளில்
வண்ணங்களை சிதறி சிதறி
வெறுமையாய் மிஞ்சுவது
நானாகவும் இருக்கலாம்...

என் கவிதை தாள்களை
சிவகாசிக்கு அனுப்பி இருக்கிறேன்,
உன் வீட்டு வெடிகளில் வெடித்து
வாசலில் நிறைய...

உன் புன்னகையை விட
சிறந்ததொரு பூவானத்தை
எவரும் ரசித்திருக்க முடியாது...

எதுவுமே வேண்டுமென
அடம்பிடித்ததில்லை நீ...
என்னை விலகி செல்ல
வேண்டுமென்பதை தவிர...

கூடை நிறைய பூக்களைச்
சுமந்தபடி வரும் பாட்டிக்கு
நீ இல்லா இந்த பண்டிகை
ஏமாற்றம் தான்..

உன் ஈரக் கூந்தல் வாசத்துடனும்,
போலி அதட்டல்களுடனும்
விடியவே அடம் பிடிக்கிறது
எனது பண்டிகை நாட்கள்...

எத்தனையோ இனிப்புகள்
வீட்டில் அடைபட்டுக் கிடக்க,
நீ இல்லாமல் போனதால்
எறும்புகள் பட்டினி கிடக்கின்றன...

நீ ஊருக்குள் இல்லை என்பதை
அமைதியாக இருக்கும்
தெருக்களே சொல்லி விடுகிறது...

ஒவ்வொரு முறையும்
உன் வரவிற்கென காத்திருந்து
ஏமாந்து விடுகிறோம்
நானும் பண்டிகையும்...

உனக்குப் பிடித்த எல்லா பலகாரங்களும்
வாங்கிய பின் தோன்றுகிறது,
எனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை
நீயும் செய்திருப்பாயென...

புத்தாடைகள் சரசரக்க
நீ வலம் வந்த வீடு
தனித்திருக்கிறது
இறக்கை முளைத்த நினைவுகளோடு...

எங்கள் ஊரில்
பட்டாசு வெடிக்க தடை செய்யப் பட்ட இடங்கள்
வௌவால் தோப்பும்,
நீ வசிக்கும் தெருவும்...

எல்லா வழிகளையும்
அடைத்துக் கொண்ட பின்னரும்,
ஏதேனும் ஒரு வகையில் கடந்து விடுகிறது
நீ இல்லா பண்டிகை நாட்கள் வெறுமையாய்...

இரவெல்லாம் கண்விழித்து
நீ போட்ட அரிசி மாவுக் கோலத்தில்,
அழகாய் இருந்தது முன்பு வந்த
இதே போன்றதொரு பண்டிகை தினம்...

தீபங்களால்
நீ அலங்கரித்த வீடு
மின்சாரத்தை வீணடித்துக்
கொண்டிருக்கிறது இன்று...

நீ என்னுடன் இல்லையென
சொல்லிக் காயப்படுத்தும்
இந்த நாட்கள்
வராமலேயே இருக்கலாம்...