பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 9, 2011

பிதற்றல்கள்


தனிமையின் தீராத பக்கக்களின்
பற்றி எரியும் கூண்டுகளின் சுவர்களில்
ஒரு தேவையில்லா விசாரணை
ஒரு முறை முழுமையாய்
அழுதுவிட வினாடிகள் அற்று
வெளிபாடா வேதனைகள் அறுபட
ஒளிகிறது கனவு கொண்ட மனது
கழிவு நீர்க் குட்டையில்
நீண்ட நாள் தேங்கிய நீரின்
அசுத்தத்தில் பொறிபடும் புதிய மீன்களென
நீந்திக் களைக்கிறது தேடிய பாடலொன்று
அரூபமாய் பின் தொடரும் உன்னை
விலக்கிவிடவும் சேர்த்துக் கொள்ளவும்
வலிமையின்றி துவளும் கரங்களில்
மூன்று நாட்களுக்கு முன் பறித்த
மலரொன்றின் இடைவிடா மரணக் கேவல்
விடுதலைக்குப் பின்னரும்
சிறை வேண்டி தவமிருக்கும்
குற்றவாளியென உன்னிடம் புலம்பி
சரணடையும் புரளி பிதற்றல்கள்
யாருமே இல்லை என்றான உலகில்
இனி யாருடனும் பேசவேண்டி இருக்காது
எனக்கான ஒரு புது மொழியில்
என் கனவுகளை தேடுவேன்
கிடைத்தால் கிடைக்கட்டும்
இல்லையென்றாலும் கவலை இல்லை
உச்சிக் கிளைப் பறவையென
நீ உண்டுவிட்ட மீதக் கனிகளை விட்டுச் செல்
என் பசி பொழுதுகள் காத்திருக்கிறது
ஒரு எச்சிலின் ருசிக்கென
எல்லாவற்றையும் வாசித்து விட்டு
என்னிடமே விளக்கம் கேட்காதே
நிச்சயம் என்னிடமும் இல்லாத
ஒன்றை நானும் தந்துவிட முடியாது