பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 4, 2012

THE FATHER - by Majid Majidi..

மஜீத் மஜிதி எனக்கு பிடித்தமான இயக்குனர்... எப்பொழுதும்  மனிதர்களின் உணர்வுகளை, உறவுகளின் இன்பத்தை, துன்பத்தை, சங்கடங்களை... இன்னும் இன்னும் எழுத்துகளில் வடிக்க இயலா தருணங்களை  தன்  திரை மொழியில் சொல்லியவர். கண்ணீரின்றி இவரது படங்களை நான் கடந்ததே இல்லை....


இவரின் திரையில் வாழும் மனிதர்கள் எல்லோருமே இயல்பானவர்கள். பெரும்பாலும் ஒரு குடும்பத்தைச் சுற்றி நகரும் இவரது திரைக்கதை அவர்களை நம்மோடு, அந்தக் குடும்பத்தில் நம்மையும் ஒரு உறுப்பினராகவே மாற்றி விடுகிறது. வெறும் பார்வையாளனாக நான் இவரின் எந்தப் படத்தையும் பார்த்ததே இல்லை...படம் தொடங்கிய  இரண்டு  மூன்று நிமிடங்களில் முழுதாய் வசீகரித்துவிடும் மந்திரம் இவரது ஒவ்வொரு படைப்பிலும்  வாய்க்கிறது. The Colour Of  Paradise, Chidren  Of  Heaven  வரிசையில் இன்று "The  Father". குழந்தைகளின் அற்புதமான உணர்வுகளை, அது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை, குழந்தைகள் மீதான அன்பை  தனது திரையில் காட்சிப் படுத்தியபடி நம்மையும் பயணிக்க வைக்கிறார்....

1966  இல் பெர்சியன் மொழியில் வந்த இந்தப்  திரைப் படத்தின் பெயர்  Fedar , ஆங்கிலத்தில்  "The  Father"..



இனி the  father...

தந்தை விபத்தில் இறந்து விட, குடும்ப சுமையேற்று நகரத்தில் வேலை செய்யும் சிறுவன், தன் இரு பெண்களின் எதிர்காலம் கருதி, குழந்தைகளுக்காக ஏங்கும்  ஒரு காவல் அதிகாரியை இரண்டாவதாக மணந்து கொள்ளும் அவனின் தாய், மற்ற குழந்தைகளைப் போலவே அவனிடமும் அன்பை எதிர்பார்த்தும், அன்பு செலுத்த தயாராகவும் உள்ள காவல் அதிகாரி, பணம் சம்பாதிக்க துடிக்கும் அவனது நண்பன் இவ்வளவு தான் படத்தின் கதாபாத்திரங்கள்.. ஆனால் இவர்களுடன்  ஒன்றரை மணி நேரம் நாம் செய்யும் பயணம் மறக்க இயலாததாகவே அமையும்.

நகரத்தில் தன் தங்கைகளுக்காகவும், அம்மாவுக்காகவும் உடைகள், ஆபரணங்கள் வாங்கி கொண்டு, சொந்த ஊருக்கு விடுமுறையில் வரும் மெஹருல்லா இக்கதையின் நாயகன். தன் தாய் இரண்டாவது திருமணம்  புரிந்து கொண்டு தங்கைகளுடன் ஒரு காவல் அதிகாரியுடன் வசிப்பதை கண்டு பிடிக்காமல், எப்படியாவது அந்த அதிகாரியிடமிருந்து  தன் தங்கைகளையும், அம்மாவையும் பிரித்து பழைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான். அவரோ அவன் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு, அவனையும் தன்னுடன் இணைத்து வாழ விரும்புகிறார். காவல் அதிகாரியை தன் தந்தையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிறுவன் ஒரு நாள் அவரின் துப்பாக்கியை திருடிக் கொண்டு, நண்பனுடன் முன்பு  வேலை செய்த இடத்திற்கு செல்கிறான். அதிகாரியோ அவனை  கண்டு பிடித்து மீண்டும் அழைத்து வருகிறார். வரும் வழியில் வாகனம் பழுது பட, இருவரும் பாலைவனத்தின் வழியே நடக்கத் தொடங்குகிறார்கள். மணல் புயலில் சிக்கி தத்தளிக்கிறார்கள். தண்ணீர் தேடி அலைகிறார்கள். முதுமையின் காரணமாக மயங்கி விடும் அவரை காப்பாற்றத் துடிக்கும் சிறுவனின் இறுதி கட்ட தவிப்பு, இடையில் அவர்களிடையே ஏற்படும் உறவும் பாசமும் என படம் திரையில் என்பதையும் தாண்டி மனதிற்குள் ஓடத் தோவங்கி விடுகிறது....

படத்திற்கு இசை என்பது தேவைப்படும் இடத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசை பெரும்பாலும் மிக மிக மென்மையாக, காட்சிகளின் உணர்வை மெருகேற்றும் வகையில் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவும் அப்படியே. நம் கண்  முன்  எளிய வாழ்வை  பதிவு செய்கிறது...

இனி காட்சிகள்...

அனைத்து காட்சிகளுமே பிடித்தமானவைகளாக இருந்து விடும் இது போன்ற படங்களில் பிடித்தவற்றை சொல்லுவது சற்றே சிரமமான விசயமாகவே உள்ளது இருப்பினும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்...

1. தன் தங்கைகளுக்கு, அம்மாவுக்கு என ஒவ்வொரு பொருளாக தேடி அலைந்து வாங்கும் தொடக்கக் காட்சி அற்புதம்.

2. தனது கிராமத்திற்கு வந்தவுடன் தன் பையில் வைத்திருக்கும் அப்பாவுடனான புகைப் படம் நீரில் அடித்துச் செல்லப் பட, அடுத்த காட்சியில் தன் தோழன் வாயிலாக தன் தாய் இன்னொருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்வதை கேட்கும் செய்திக் காட்சி... நீரில் புகைப் படம் அடித்துச் செல்லப் படும் போதே அடுத்து வரும் காட்சியை உணர்த்திவிடும் அற்புதம்... மஜீத் அற்புதம்...

3. வீட்டிற்குள் வராமல் வெளியில் நின்று கொண்டு பேசும் சிறுவனை பார்த்து அவனது தாய் தவிக்கும் தவிப்பு. அவரின் கண்களின் வழியே தெரியும் பாசம், சோகம், பரிதவிப்பு என உணர்வுகளை குவித்த ஒற்றைக் காட்சி...


4 பணத்திற்காகத் தானே திருமணம் புரிந்து கொண்டார்கள் என்னும் தவறாக எண்ணத்தில் அக்காவல் அதிகாரி மீதும், தன் தாயின் மீதும் தன்னிடமிருக்கும் பணத்தை விட்டெரியும் ஒரு சிறுவனின் கோபம், புரிந்து கொள்ள மறுக்கிறானே எனும் அந்த இரண்டு பெரியவர்களின் துயரம் என இரு பதிவுகளால்  உயிரூட்டப் பட்ட காட்சிகள்...

5. வாகனத்தை எதிர்பாரா தருணமொன்றில் எடுத்துச் செல்கையில் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, தன் மனதில் உள்ள கேள்விகளை, அவரிடமே கேட்கும் ஆதங்கம், பிறகு அவரிடமே சிக்கிக் கொள்ளும் பரிதாபம்.

6. இடையில் வரும் மணல் புயல், இறுதியில் தன்னால் இனி முடியாது எனும் போது விலங்கை கழற்றி விட்டு எங்காவது போய் தப்பித்துக் கொள் என்று சொல்லும் ஒரு தகப்பனின் முழுமை, அவரை அப்படியே விடாமல் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு பாலையை கடக்க முற்படும் சிறுவனின் அன்பு...

7. இறுதிக் காட்சியில் அவர் அக் குழந்தைகளோடும், மனைவியோடும் எடுத்த புகைப் படம் நீரில் மெல்ல நழுவி சிறுவனை நோக்கிப் பயணிக்கிறது. புகைப் படம் முதல் காட்சியில் சிறுவனிடமிருந்து  நழுவுகிறது, இறுதிக் காட்சியில் வேறு புகைப் படமாக அவனை சேர்க்கிறது....

8. சிறுவனின் நண்பனாக வரும் இன்னொரு சிறுவன், அட்டகாசமான நடிப்பு. அடுத்தவரின் மனநிலை புரிந்து கொள்ளுதல், பயம், நண்பனை காப்பற்ற வேண்டுமென்ற தவிப்பு என அனைத்து காட்சியிலும் பிரமாதப் படுத்துகிறான்...

9. ஊரை விட்டு வந்து இரு சிறுவர்களும் கடலில் விளையாடும் காட்சி மனதிருக்கு பெரும் ஆறுதலாய் இருக்கிறது...

10. படம் முழுக்க வரும் மெஹருல்லா, நடித்ததாகவே தெரியவில்லை, ஊருக்கு வரும் வரை முகத்தில் காணும் சந்தோசம், பிறகு எப்பொழுதும் படரும் அடர்ந்த சோகம், கோபம், எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம், தன் தாய் மற்றும் தங்கைகள் மீதான அன்பு, பாலை வனத்தில் அவரை காப்பற்ற போராடும் காட்சிகள் என வாழ்ந்திருக்கிறான்...

இப் படத்திற்கான விருதுகள்...

    1996, Crystal Simorgh Fajr Film Festival
    1996 Prize of the Jury San Sebastián International Film Festival
    1996 C.I.C.A.E. Award, Holden Award for the Best Script, Jury Special Prize Torino International Festival of Young Cinema
    1997, Golden Dolphin Festróia - Tróia International Film Festival


 நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப் படம்... ( இந்தப் படத்தை எனக்கு தந்த நண்பன் முரளிகுமாருக்கு நன்றி..)