பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 1, 2012

பீதோவன் - ஒரு புதையல்...

இசை என்றாலே என்னைப் பொறுத்தவரை ராகதேவன் இளையராஜா மட்டும் தான்... எனது இரவுப் பொழுதுகளை மிக மிக ரம்மியமாக்கிய பாடல்கள் பெரும்பாலும் இசைராஜாவின் திரைப் பாடல்களே... இன்றும் கூட அலைபேசி நினைவகத்தில் பெரும்பான்மை அவரின் இசையே நிரப்பி வைத்திருக்கிறேன்... இசை என்றால் இளைய ராஜாவை மட்டுமே அறிந்தவன் நான்.. மிக சில ரகுமான் பாடல்களும் பிடித்தமானவையே... இதில் என்ன வினோதம் என்றால் எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது... வெறும் ரசனை மட்டுமே... சுருதி, லயம், தாளம் இன்ன பிற சங்கதிகள் பற்றி எந்த விஷய ஞானமும் துளி கூட இருந்ததில்லை.... வெறுமனே ரசிப்பதும், அதன் போக்கிலேயே மகிழ்வதும், சோகமாவதும், சிரிப்பதும், ஆடுவதுமாய் என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவை ராஜாவின் பாடல்கள்...

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் இருள் இனிது... ஒளி இனிது வாசித்துக் கொண்டிருந்தேன்... இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்களை பற்றி வெளியான உலக திரைப் படங்களைப் பற்றி மிக அருமையாக எழுதி இருந்தார்... அதில் தான் "பீத்தோவனின் காதல்" இருந்தது... அதுவரை பீத்தோவனின் இசை என்று விண்டோசில் இருக்கும் இரண்டு மூன்று இசை கோர்வைகளை கூட என்னால் சரியாக கேட்கவில்லை என்பது மறுக்க முடியா உண்மை...அது போக பீதோவன் ஒரு காது கேளாதவர், அவருக்கு வெளி உலகம் அறியா காதல் இருந்தது என்பது வரை மட்டுமே தெரியும்...

பீதோவனைப் பற்றிய திரைப் படம் IMMORTAL BELOVED பற்றி சொல்லும் முன் அவரது தனிப் பட்ட வாழ்க்கைப் பற்றியும் சொல்லி இருந்தார் எஸ்.ரா. கூடவே இடை செருகலாக மொசார்ட் பற்றிய AMADEUS திரைப் படம் பற்றியும் ... அந்த நூலில் பீதோவன் வாழ்வைப் பற்றிய சிறு குறிப்பையும், திரைப்படம் குறித்த தனது பார்வையையும் அழகாக சொல்லி விடுகிறார் எஸ்.ரா. ஆனால் எனக்குள் எஸ்.ரா அறிமுகப் படுத்தியது பீதோவன், மொசார்ட் என்னும் இரு இசை மேதைகளின் இசையை... இணையத்தில் பதிவிறக்கம் செய்து முதலில் பீதோவனை கேட்ட்கத் தொடங்கினேன்.. அது வரை இசைக்கு பாடலின் வரிகள், அதன் பொருள் மிக முக்கியம் என்று சொல்லி வந்தவன் நான்... வெறும் இசை பொருளற்றுப் போய்விடுகிறது, இசையையும் பொருளையும் மிக அற்புதமாக கோர்த்ததே இளைய ராஜாவின் மிகப்பெரும் சவால் என்று நம்பிக் கொண்டிருந்தேன்...



அனால் என் முடிவுகளை பொடிப் பொடியாக்கி, மௌனமாய் என்னை மாற்றி வைத்தான் பீதோவன். மெல்ல மெல்ல இசை உருமாறி உயிருக்குள் ஊடுருவதும் அதை தள்ளி நின்று நானே வேடிக்கை பார்ப்பதுமான விந்தை... இன்றும் பீதோவன் கொண்டாடப்படுவதன் காரணத்தை மிக மிக காலம் கடந்து அறிந்து கொண்டிருக்கிறேன்...மூன்லைட், சிம்போனி 9.. போன்ற மிகச் சிறந்த இசைக் கோர்வைகளை காது கேளா ஒருவரால் எப்படி இவ்வளவு ரம்மியமாக உருவாக்க முடிந்தது என்று புலம்ப வைத்திருக்கிறான் பீதோவன்... எத்தனையோ அவமானங்களையும், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், வலிகளையும் தாங்கி கொண்டே தனது இசை பயணத்தை தொடர்ந்திருக்கிறார் மாபெரும் இசை மேதையான பீதோவன்...அதுவே அவரது இசையில் வெளிப் படுகிறது... உணர்வுகளை பாடிய, இசைத்த ஒருவனின் வெற்றியே பீதோவன் என்னும் தனி மனிதனின் வெற்றி...

அப்புறம் மொசார்ட்... பீத்தோவனின் தந்தை ஒரு இசை பாடகர்.. தனது மகன் மொசர்ட்டைப் போல் பெரிய இசைக் கலைஞனாக வர வேண்டும் என்ற ஆசையில் தான் இசை கற்றுக் கொடுத்திருக்கிறார்... மொசார்ட் மற்றுமொரு சகாப்தம்.. பீதோவனுக்கு முந்தையவர் எனினும் அவரது இசை சொல்ல முடியா மகிழவையும் அதே சமயத்தில் நம்மில் எதோ இழந்த ஒன்றை நினைவு படுத்தவும் செய்கிறது... அந்த மகிழ்வில் இனம் புரியா சோகத்தையும் படரச் செய்கிறது...

இசையை மட்டுமே தான் வாழ்நாளென கொண்டிருந்த இரு இசைமேதைகளை அறிமுகப் படுத்தியது இருள் இனிது... ஒளி இனிது...நன்றி எஸ்.ரா வுக்கு...

எஸ்.ராவின் வரிகளில் சொல்வதெனில்... "இவ்வுலகை சந்தோசப் படுத்த நினைத்த எல்லோரின் பின்னாலும் மறைந்திருக்கிறது சொல்ல இயலா துயரங்கள்..."




உண்மை தான் நாமும் இசையிடம் மயங்கி நிற்பது நாம் எதோ ஒரு வகையில் காயம் பட்ட மனதை மயிலிரகென வருடுவதால் தான்... இசை நம்மை மகிழ்விக்கிறது,துயரங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுவிக்கிறது... மறக்க முடியாத சில உறவுகளின் நேசத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள வைத்து, அவர்களே நம் வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது....