பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 11, 2011

திசைகளற்ற பறவையென


சரி என்று சொன்ன ஒற்றை நொடியில்
துவங்கும் புதிதாய் ஒரு பயணத்தில்
இழக்க நேரிடுகிறது
திரும்ப இயலா சில இடங்களையும்...
இரு உயிர்களின் கலத்தலை விட
கடினமானதாகிறது
இரு மனங்களின் புரிதல்களும்
தேடல்களும்...
வேறு வழிகள் இன்றி
சமரசங்களில் நீந்தி
கரை சேர்வோம் இருவரின்
கட்டப் பட்ட கைகளுடன்...
எனக்கான கவிதைகளும்
மெல்லிய இசைகளும்
இன்று வரை
உன்னை சேரவே இல்லை...
உடலின் வெப்பத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்
சில நேரம் மகிழ்வும்
பல நேரம் வெறுப்புமாய்...
இருந்தும் என்ன
அன்பை பகிரவும்
என்னை நேசிக்கவும் புதிதாய்
ஒரு உயிர் உன்னைப் போல...
வரவு செலவு
கணக்குகளில்
கழிந்து கொண்டே போகும்
காலங்கள்...
சுமைகளுடன் நான் திணறிய
கணமொன்றில் நீ
தாங்கிப் பிடிக்கிறாய்
கடமைகளின் கரங்களில்...
புதிதாய் உடைகளும்
அணிகலன்களும்
வித விதமான உணவுகளுமாய்
உறவுகளின் கூடுதலுமாய்
சுகமே என் சூழல்கள்...
திசைகளற்ற பறவையென
ஒவ்வொரு முறையும்
உன் கூட்டிற்கே வருகிறேன்
தாய்ப் பறவையென மாறிய பின்...
உன் நேசமும்
பாசமும் பொய்யென
போய் விடப் போவதில்லை...
இருந்தும்
என்னை ரசிக்கும்
எனக்கான கவிதைகளை
வார்க்கும் ஒருவனை
ரகசியமாய் வளர்க்கிறேன்
உனக்கு தெரியாமல்
எனக்குள்ளே...
என் தனிமைக் கனவுகளையும்
கையிலிருக்கும் மலர்களையும்
அவனுக்கென்றே
வைத்திருக்கிறேன் எப்பொழுதும்...

புரிதல் என்பது


ஜன்னலின் ஓரங்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகளில்
புதிதாய் ஒரு கடல்
அதனுள் நான்...
எதிர்பார்ப்பதும்
ஏமாறுவதும்
என் தொழில்
அதை ஏன் எச்சரிக்கிறாய் நீ..
உன்னிடம் எதிர்பார்க்காமல்
யாரிடம்?
புரியவில்லை எனக்கு
உன் வார்த்தை சூட்சமங்கள்...
சொல்லிப் போவதிலும்
சொல்லாமல் போவதிலும்
வேறுபாடுகளே இல்லை
சொல்வதை கேட்கிறேன்
என்பதை தவிர...
காத்திருத்தல் என்னில் ஒரு
மோசமான வியாதி
காத்திருக்கிறேன்
சரியான ஒரு தவறுக்கு...
நீயாகப் புரிந்துகொள் என்பாய்
புரிதல் என்பது
நானாக கற்பனை செய்வதல்ல
உன்னிடமிருந்து
தாமதமாக தெரிந்து கொள்ளும்
உண்மை மட்டுமே...
எல்லோரிடமும் சொல்ல முடியாததை
உன்னிடம் சொல்கிறேன்
என்னிடம் சொல்ல கூடாதென
சிலவற்றை நீ எப்பொழுது
வைத்திருக்கிறாய் உன்னுள்...
நதியின் கரையில்
கட்டுண்ட பரிசலென
எப்பொழுதும்
உன் வாழ்வின் ஒரு ஓரத்தில்
மட்டுமே கட்டப் பட்டிருக்கிறேன்...
கடல் ஒன்றின்
ஓரத்தில் ஒதுங்கிய
கிழிஞ்சலென மணலில்
புதையுண்டே கிடக்கும்
என் புதைபடா நேசமும்...
ஜன்னலோரத்தில்
தேங்கும் கடல் வடிகிறது
உன்னிடம் சொல்ல
இன்னும் ஒன்று
எனக்கென நான் சிரித்து
எத்தனை நாட்கள் ஆனது?