பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Apr 27, 2012

நான், சாத்தான், ஒரு தேவதை...

 


சில நாட்கள் நான் தேவதையைத்
தேடி அலைந்தபடி இருந்தேன்
சபிக்கப் பட்ட சாத்தானின் உதவியுடன்

மரத்தின் இலை உதிர்கிறது
தரை நோக்கி விழும் இலையில்
இதுவரை உலகம் காணா ஓவியமும் நடனமும்

காலி சிகரெட் பெட்டிக்குள் அடைபடுகிறது
அந்தரங்கக் கனவுகள் புகையும் துகளென
 என்னையும் உன்னையும் சுமந்தபடி

சாத்தான் சொன்னது இனி நீ தான் அரசன்
நான் உன் அடிமை
விழ்த்திவிடும் முதல் போதை வஸ்து

தரை படிந்து சருகாகி
மக்கி உரமாகலாம் இல்லையெனில்
என் நோட்டு புத்தகத்தில் ஒட்டப்படலாம்

அடைபட்ட காகித அட்டை எரிகிறது
என் கனவுகளை தனதாக்கிக் கொண்டு
புகைகிறது காணும் மனதும் கண்ணும்

அதோ உன் தேவதையென சாத்தான் சுட்டியது
அது தேவதையாகவும் இருக்கலாம்
உருமாற்றம் பெற்ற சாத்தானாகவும் இருக்கலாம்

இலையின் கனக்கிறது தன்னில் ஒரு மரம் கொண்டு
மரத்திற்கு ஒரு இலை தான்
இலைக்கு இன்னுமொரு மரம் சாத்தியமில்லை

மெல்ல மெல்ல சூடாகி அறை முழுதும் தகிக்க
வெந்து போன கனவுகளின் கருகும்
நாற்றமோ வாசனையோ சகிக்கவில்லை

சாத்தான் சிரிக்கிறது
கனவைத் தள்ளிவிட்டு எழுகிறேன்
சுற்றிலும் இரைந்து கிடக்கிறது சாம்பல் துகள்கள்

இந் நேரத்தில் நான் சாத்தானகி இருந்தேன்
ஒரு மரம் என்னுள் விதையாகியிருந்தது
சுவாசமெல்லாம் ஒரு தரம் கெட்ட புகை நாற்றம்

ஒரு தேவதை
ஒரு இலை
ஒரு சிகரெட்
ஒரு பெரும் கனவு
வேறு வழி இல்லை இதற்கும்
கவிதையென்றே பெயர் வை...

ரதி நிர்வேதம்

சில நாட்களுக்கு முன் ரதி நிர்வேதம் திரைப் படத்தை மலையாளத்தில் பார்த்தேன்.. நம் தமிழ் ரசிகர்களை சூடேற்றும்  பொருட்டு தெருவெங்கும் ஓட்டப் பட்ட சுவரொட்டிகள், தினசரிகளில் வந்த விளம்பரங்கள் எல்லாம் எதோ ஒரு பிட்டு பட ரேஞ்சுக்கு அதனைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கி இருந்தது...ஆனால் உண்மையில் அதன் கதை அமைப்பு என்ன? திரைக்கதை எப்படி? அறிந்திருப்பார்களா திருவாளர்கள்..



ஒரு பதின் வயது பையனுக்கு, ஒரு இளம் வயது பெண்ணின் மீது ( இருபத்தி ஐந்து ) வரும் நேசம், அதை தொடர்ந்து வரும் உடல் கவர்ச்சி ஆகிய சிக்கலான விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி விளம்பரங்களில் சித்தரித்தது போல பிட்டு படமாக இருக்கும் என்று நம்பிப் போனவர்கள் நிச்சயம் எச்சிலை துப்பிக் கொண்டு வர வேண்டியது தான்...

உண்மையில் கதையின் கரு தற்கால வாழ்வியலுக்கு முக்கியமான ஒன்றாகவே படுகிறது. பள்ளியில் படிக்கும் போதே சரோஜா தேவி, டி.வி.டி கள் மற்றும் தற்போதைய மொபைல் பட பதிவு கலாச்சாரம் என மாணவர்களின் பிரச்சனை, அவர்களின் அடி மனதில் இருக்கும் அந்த வெளிபடுத்த இயலா காமம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்...

கதை தான் என்ன... கதையின் நாயகன், பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருப்பவன். பக்கத்துக்கு வீட்டு பெண்ணிடம் கொள்ளும் நேசம் மற்றும் அதையும் தாண்டிய உடல் மீதான ஈர்ப்பு அதனால் இருவருக்குள்ளும், குடும்பத்திலும் வரும் சிக்கல்கள்... இறுதிக் காட்சியில் இருவரும் கட்டுபாட்டை இழந்து விட உடல் சேர்க்கை.. நாயகியை பாம்பு வடிவத்தில் வந்து கொன்று விடுகிறார் இயக்குனர். இவன் அழுத படி கல்லூரிக்கு செல்ல... முடிகிறது படம்...

எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் படங்களில் காணும் குத்தாட்டங்களும், மார்பு குலுக்கல்களும், கழுத்து மேய்தல்களும், மழை நாட்டியங்களும் தந்து விடாத ஆபாசத்தை ரதி நிர்வேதம் தந்து விடவில்லை... நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் அனைவரும் தங்கள் கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் குறிப்பாக சுவேதா மேனன்..( இவர்  நடித்து நான் பார்க்கும் இரண்டாவது படம் இது, முதலில் சால்ட் அண்ட் பேப்பர்).

எதுவுமே பார்த்தவர் எடுத்துக் கொள்ளும் விதம் தான். எஸ்.ராமகிருஷ்ணன் THE PERFUME படத்தைப் பற்றி இரண்டு மூன்று முறை தன் எழுத்துகளில் சொல்லி இருக்கிறார், அதுவரை எனக்கு அந்த படம் தந்த பிம்பம் வேறு, படித்ததின் பின்ன வந்த தெளிவு வேறு. மீண்டும் பார்த்தேன் தெளிவாக இருந்தது. அது போல தான் ரதி நிர்வேதம் வெறும்  ஆபாசப் படமல்ல, தற்கால பதின் வயது மாணவர்களின் ஒரு உளவியல் வெளிப்பாடு. அதற்கு பலியாகும் ஒரு பெண்ணின் கதை.


மனதின் ஆசைகளை மூடி வைக்கும் போது ஏற்படும் அழுத்தம் எப்படியும் வெடித்தே தீரும்..