பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 30, 2007

கோபத்தின் விரல்கள்

தூரத்து விண்மீன் கூட்டங்களை
எண்ணி முடிக்கும் தருணத்தில்
பூஜ்யத்தில் தொடங்கும்
உன் ஸ்பரிசங்கள்
மறக்க செய்கிறது யாவையும்...

பூக்களின் நறுமணத்தை
மூச்சாய் உள்ளிழுக்கும் வேளைகளில்
என்றோ நீ வீசிப்போன
பார்வை சிக்கி
வெளியேறாமல் தவிக்கிறது
உள் சென்ற காற்றுத் துளி....

அமைதியான ஒரு மழை நாளில்
ஆர்ப்பரித்து வரும்
உன் நினைவுகளின் மெளன மொழி
ஆவேசமாய் உடைத்தெரிகிறது
என் கனவு கலங்களை....

என் தோட்டம் நோக்கி வந்த
வண்ணத்து பூச்சியின்
வர்ணங்களை திருடிச் செல்கிறது
உன் கோபத்தின் விரல்கள்...

சில மணி நேர தடங்களுக்காய்
வாழ்க்கையை வெறுக்கத் துடிக்கும்
உனக்காய் நாள்தோறும்
இரவில் அழுகிறது
என் கவிதைக் குரல்...

கண்டதை எழுதுகிறாய்

ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமான
இடைவெளியில் செல்லும் ஒரு மரண ஊர்வலம்....

காட்டு குயிலோடு போட்டியிட்டு கூவி
தண்ணீர் தேடும் வீட்டுப் பறவை....

நாள் காட்டியில் விரைவாய் கிழிபடும்
காகிதங்கள் யாருடைய இறுதி நாளைத் தேடி....

இன்று மதியம் உணவு கிடைத்தது
இனி இரவுக்கு யாரைத் தேட...

எழு ஜென்மங்கள் உண்டாம் கொடுமை
எல்லாவற்றிலும் நான் மனிதன் ....

பொதி சுமக்கும் கழுதை போல
நினைவுகள் குட்டிசுவர் தேடி புறப்படுகிறது....

காரமான குழம்பு, ரசம் குடித்து
அதிலும் காரமென தயிர் தேடுகையில்
நிறைந்து விடுகிறது பசித்த வயிறு...

என்னடா இது கண்டதை எழுதுகிறாய்
என்ன செய்ய? சொல்லாமல் விட்டதை நீ புரிந்துகொள்...