பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 19, 2012

காத்திருத்தல்


காத்திருத்தல்
எப்பொழுதும் காத்திருத்தலே
காத்திருத்தல் ஒரு நதி
வலியும் சுகமும் இருகரைகள்
வலியின் கரையில் சுடு மணல்
சுகத்தின் கரையில் மலர்த் தோட்டங்கள்,
ஒற்றைக் காலில் மரங்கள் பூத்தபடி  காத்திருக்கிறது
மலைகள்
கடல்
இரவுதோறும் விண்மீன்கள்
என எல்லாமே,
இதோ இங்கே யாரோ ஒருவன்
தொடர்ந்தபடியே இருக்கும்
நேசத்தின் நிராகரிப்புக்காக காத்திருக்கிறான்
சில நேரங்களில் மெளனத்தை
பல நேரங்களில் இயலாமையை,
ஒரு பாடலுக்காகவோ
இசைக்காகவோ காத்திருக்கும் ஒருவனை
பார்த்திருக்கிறேன்
ஒரு பூபாளத்தையோ முகாரியையோ
பல்லவிகளற்ற சரணத்தையோ
சுமந்தபடியே அலைகளோடு திரிகிறான்…
ஒருவன் கவிதைக்காகக் காத்திருக்கிறான்
ஒருவன் மழலைக்காக
சட்டென பொழியும் மழைக்காக...

ஒரு சிலுவையும் காத்திருக்கிறது
சிலுவையாய் மாறிப் போன பாவம் போக்க
அதற்கோ ஒற்றை உயிர் தேவை
அது புனிதனோ
பாவியோ,
யாரவது ஒருவர் காட்டிக் கொடுக்கும் போது
புனிதன் பாவியாகிறான்
பாவி புனிதனாகிறான்…
யார் புனிதன் என்பதையும்
யார் பாவி என்பதையும்
மற்றவர்களே முடிவு செய்கிறார்கள்,
...
..
எதைப்பற்றியும் கவலைப்படாமல்
காத்திருக்கிறது காலம்
எல்லோரையும் விழுங்க,
நமது முறைக்கு காத்திருப்போம்,
வேறென்ன சொல்ல
காத்திருத்தல் அழகானது என்றே
முடிப்பதைத் தவிர ...