பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 20, 2012

யாதுமறியேனடி தோழி…

குளிரறியேன்
சுடும் வெப்பமறியேன்
வாடைக் காற்றறியேன்
தென்றலறியேன்
யாதுமறியேனடி தோழி…

காடு மலையறியேன்
கடல் கொண்ட அலையறியேன்
சமவெளியறியேன்
பசும் புல்வெளியறியேன்
பாதாளமறியேன்
யாதுமறியேனடி தோழி…

சட்டெனக் கடக்கும்
வண்ணத்துப் பூச்சியறியேன்
தேன் குடிக்கும் வண்டறியேன்
மின்மினிப் பூச்சிகளுமறியேன்
காக்கை குயிலறியேன்
தோகை மயிலறியேன்
யாதுமறியேனடி தோழி…

மழையறியேன்
ஒடும் நதியறியேன்
உதிரும் பனியறியேன்
கொடும் பசியறியேன்
நெடுநாள் பிணியறியேன்
யாதுமறியேனடி தோழி…

மான் கூட்டமறியேன்
பிளிறறியேன்
ஓடும் மீன்களறியேன்
ஊரும் நத்தைகளுமறியேன்
யாதுமறியேனடி தோழி…

செம்பருத்திப் பூக்களறியேன்
தொட்டிச் செடிகளறியேன்
நெடிதுயர்ந்த மரங்களறியேன்
தவழும் மேகங்களறியேன்
வான் திரியும் பறவைகளறியேன்
யாதுமறியேனடி தோழி…

சுவையறியேன்
சுவாசமறியேன்
நில்லாமல் துடிக்கும் நாடியறியேன்
உடல் நிறைக்கும் குருதியறியேன்
காட்சியறியேன்
யாதுமறியேனடி தோழி…

கவிதைச் சொல்லறியேன்
மனமகிழ் இசையறியேன்
தாய்மொழியறியேன்
கடந்து போன உறவறியேன்
யாதுமறியேனடி தோழி…

உனையறிந்த ஒரு கணத்தில்
யாவும் நீயாகிட
அனைத்தும் நீயாக அறிந்தேனடி தோழி