பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 29, 2012

கண்ணீர் வேடிக்கை ....


பல வேளைகளில்
பல காரணங்களால்
தனித்து விடப்படுகிறது நேசம்
சுற்றிலும் கூரிய கத்திகளும்
நீண்ட அரிவாள்களும்
காத்திருக்கிறது எப்பொழுதும்...

சிறிதும் பெரிதுமாய்
சில லேசான காயங்களுடன்
விக்கித்து நேசத்தின் அருகில்
கிடக்கிறது பளபளக்கும்
நட்பின் கத்தி சில ரத்தத்
துளிகளின் கரையோடு...

நேசத்தின் உடலை
கூர் பார்க்க விரும்புவது
கூடவே உறவாடும்
நட்பும் உறவுமே
எதிரிகளிடம் எச்சரிக்கையாய்
இருந்து விடுகிறோம்...

காலம் காலமாய்
தொடரும் நிகழ்வுகளில்
அப்படி என்ன தான் இருக்கிறது
நம்பிக்கை கொள்ளும்
உறவுகளின் கண்ணீரை
வேடிக்கை பார்ப்பதில்...

இறுதியில் கேட்கப்படும்
மன்னிப்புகளுக்கு தலையாட்டி
வாழும் வரை சுமக்க
நேரிடுகிறது நட்பும் உறவும்
உண்டாக்கிய வடுக்களை...

ஆறா ரணமென....


புன்னகையைக் கூட
எல்லோரிடமும் பகிர
கண்ணீரை வெகு சிலரிடம்
அந்த இரவு உன் கண்ணீரை
சுமந்திருந்தது

ஆறுதலாய் தலை கோதி
மடியிலடவே துடிக்கிறது மனது
அலைபேசி மௌனமே
கையறு நிலையென
வாய்க்கிறது எனக்கு

எப்பொழுதும் உன் கண்ணீர்
உனக்காக இருந்ததில்லை
ஏதாவது ஒரு வலியை
நட்பும் உறவும் தந்துவிட
வெடித்தழுகிறாய் இரவில்

உலகின் மிக கடினமான
சூழலை உருவாக்கி விடுகிறது
நேசிக்கும் உயிரின் கண்ணீர் துளிகளும்
அதை தடுக்க இயலா கணங்களும்

உனக்கு ஆறுதல் சொல்லி
தேற்றி விட்டு கதறி
அழுகிறேன் உன் கண் நிறைத்த
நீர்த் துளிகளின் காரணமாய்
தனிமை இரவுகளில்

கண்ணீர் துளிகளுடன்
எனைத் தேடும் உன் நேசத்திற்கென
காலம் முழுதுமாய்
காத்துக் கொண்டுதானிருக்கிறது
உன் மீதான என் நேசம்

அந்த ஒரு இரவு
என் நினைவில் அகல வேண்டிய
அந்த கொடிய இரவு
அகலாமல் தானிருக்கிறது
ஆறா ரணமென....

Jan 27, 2012

பூரணமாதல்...


ஒற்றை நேசத்தில் மயங்கிக் கிடக்கிறது உயிர்
அதன் பிரதிகளை தினமும் சேகரிக்கிறேன்
ஒன்று கூட மற்றொன்றின் சாயலின்றி
நினைவுகளில் காதலின் வர்ணம்
குழைத்து வானவில்லென நிறைகிறது மனது
சில வேளைகளில் நாள் முழுதுமாய்
ரசிக்க நேரிடுகிறது அதன் நிறப் பிரிகைகளை
என்னில் துவங்கும் காதல் நதிகள்
உன்னைத் தேடி சங்கமிக்கிறது
நமக்கான கனவுகளைச் சுமந்தபடி
ஒரு படகும் அதில் வரலாம்
பெருங்காடு சூழும் நெருப்பென
எனை எரிக்கிறது உன் காதல்
நினைவு தவற விழுகிறேன் உனக்குள்ளேயே
எரித்த காதலே அணைக்கும் விந்தை
உன்னிடம் மட்டுமே நிகழக்கூடும்
காற்று எந்தச் சுவடையும் விடுவதில்லை
சில நேரம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறது
உன் காதலும் எதையும் எடுத்ததாகவும் இல்லை
எனக்கென எதையும் விடுத்ததாகவும் இல்லை
காதல் ஒரு பரிபூரணம்
நீ காதலானாய்
நான் அதில் பூரணமானேன்...

Jan 26, 2012

PARTITION


இந்திய ராணுவத்திலிருந்து திரும்பிவிட்ட சீக்கிய இளைஞனுக்கும்,பிரிவினையின் போது நாட்டிலிருந்து வெளியேரும் வழியில் பாதிக்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்குமான காதலை,வாழ்க்கையை,இந்திய பாகிஸ்தான் பிரிவினையை, அதன் வலிகளை அதனால் அவர்கள் வாழ்வில் எற்படும் துயரங்களை அற்புதமாய் சொல்லும் ஒரு திரைக்கவிதை....


இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் அப்பாவி இஸ்லாமியர்களை கொல்லத் துரத்துபவர்களிடமிருந்து ஒரு வனப் பகுதிக்குள் புகும் நசீமை காப்பாற்றுகிறான் கியான்.
மாறுவேடம் தரித்து தன் இருப்பிடம் அழைத்துச் சென்று மறைத்து வைக்கிறான்.அவளை பாகிஸ்தானுக்கு தான் அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கிறான்.இதனிடயே கிராம மக்களுக்கு விசயம் தெரிந்து விடுகிறது.டெல்லி சென்று அவளை பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறான். கிராம மக்கள் சிலர் ஏற்றுக் கொள்ள, இயல்பு திரும்புகிறது.இருவருக்குமான உறவு நெருக்கமாகி திருமணத்தில் முடிகிறது.வருடங்கள் ஓடிவிட ஒரு குழந்தையோடு மகிழும் வேளையில், நசீமுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைக்கிறது. கணவனையும், குழந்தையையும் விட்டு தனியே செல்கிறாள்.வாரங்கள்,மாதங்களாக கியானின் கடிதங்கள் அவளது சகோதரர்களால் மறைக்கப்படுகிறது.இந்தியாவிலோ குழந்தையுடன் அவனது தவிப்பும் காத்திருப்பும் நீள்கிறது.நசீமுக்கு உண்மை தெரிய வீட்டினுல் சிறைவைக்கப் படுகிறாள்.பொறுமை கடக்கும் கியான் மகனுடன் டெல்லி சென்று அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல முயல்கிறான்.தன் மதம் துறந்து, பெயர் துறந்து இறுதியில் இரவில் திருட்டுத்தனமாக நுழைந்து இறுதி ரயில் நிலையக் காட்சி வரை நம்மையும் தொடர்கிறது பதற்றம்.
கியானும், நசீமும் நடிகர்களாக இல்லாமல் கதாபத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.மேலும் குறிப்பிடப்பட வேண்டிய கதாபாத்திரம், கியானின் படைத் தோழனாக வந்து இறந்து போகும் ஆண்ரு வின் காதலி மார்கரெட்.குழந்தையாக வரும் சிறுவன். அற்புதமான தேர்வு.

குறிப்பிடத் தக்க காட்சிகள் நிறையவே இருக்கிறது.குறிப்பாக கலவரத்தில் இறந்து கிடக்கும் தாயிடம் பாலருந்தும் குழந்தை, சிதறிக் கிடக்கும் கால் நடைகள், பாகிஸ்தானிலிருந்து வரும் கோர ரயில் இப்படி பதற வைக்கும் சிலவும்...
தந்தையும் சிறுவனும் நசீமை எதிர்பார்த்து மழையில் நனைந்த படி நின்றிருக்கும் காட்சி, ஒரு சீக்கியன் தன் நீண்ட கூந்தலை வெட்ட நடுங்கும் நாவிதனின் கைகள், இறுதி கட்ட ரயில் நிலைய காட்சி என நம்மையும் படத்தினுள் இணைத்து விடுகிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி கவிதையென மஞ்சள் நிறப் பூக்கள் இடையே இருவரின் மகிழ்ச்சியான வாழ்வும் கண்முன்னே அகல மறுக்கிறது.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விசயம் ஒளிப்பதிவு.கலவரத்தையும், அழகிய கிராமத்தையும், மஞ்சள் பூக்களையும் காட்டி விடுகிறது.



நடிப்பு:

கியான் - ஜிம்மி மிஸ்ட்ரி
நசீம் - கிறிஸ்டியன் க்ரூக்

இசை - பிரையன் டைலர்


ஒளிப்பதிவுடன் திரைக் கதை எழுதி இயக்கி இருப்பவர் - விக் சரின்

வெளியான வருடம் - 2007

ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களின் இடப் பெயர்வு, ஒற்றைக் கிறுக்கல் கோட்டின்
மூலம் நிகழ்ந்தது.இது தான் உலகில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த பெரும் வரலாற்று புலம் பெயர்தல். இந்த நிகழ்வில் ஏறக்குறைய பத்து லட்சம் மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன.

இப்ப்டத்தின் பெரும் பகுதி இருவரின் தனிப் பட்ட வாழ்வெனினும், இடையிடையே மிக இயல்பாகத் தோன்றும் மத சிக்கல்களும், லட்சக்கணக்கான உயிர்களின் அலறல் துடிப்பும் கலங்க வைக்கிறது.இந்திய எல்லையில் இந்துக்கள் ஆடிய கோரத்தாண்டவமும், அதற்கு பதிலடியாக அங்கிருந்து வரும் புகைவண்டி சடலங்களை சுமந்து வருவதும் “நள்ளிரவில் சுதந்திரம்” படித்ததை காட்சியாக்கியது போல் இருந்தது.

# திரைப்படம் பற்றிய முதல் பதிவு இது,எழுத காரணமாக இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்தவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

Jan 25, 2012

நீ நான் ஒரு நேசம்...


யாருமற்று தனிமையில் இருப்பதில்
உன் நினைவு வருகிறது தடைகளின்றி
என்றோ நீ வந்து போன சில மணி நேர
அருகாமையின் வாசம் நினைவுகளின் வழியே
அறையெங்கும் பரவி சுவாசமெங்கும் நிறைகிறது
உன் வாழ்விற்கான என் கனவு
என்னில் மிகப் பெரிய கனவாகவே தொடர்கிறது..

உன் நேசத்தின் ஈர்ப்பில் உன்னில்
மயங்கிக் கிடந்த பொழுதுகள்
நீ பேசும் அனைத்தும் கவிதையென மாறி
உன்னுடனே என் சுயம் தொலைத்து
நீ நானாகவும் நான் நீயாகவும்
மாறிக் கிடந்த அற்புத நாட்கள்
நீ அழகில்லை தான்
நான் விரும்பியது போல
மின்னும் வெண்மை பற்களும் இல்லை தான்
இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
உன்னிடம் என்னை எப்படித்
தொலைத்தேன் என்று...

என் மீதான உன் அக்கறைகள்
அறிந்தவை மிக அழகானவை
நேரில் சந்திக்கும் கணமொன்றை
கனவுகளில் எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் பல
அதே கனவு இன்னும் நிழலென
விடைபெறாமல் இருக்கிறது
அந்த முன்னிரவின் இறுதியில்
வந்தாய் சில நிஜங்களோடு
பயமும் தயக்கமும் முன் தள்ள
ஆவலும் ஆசையுமாய்
பதற்ற நொடிகள் துடித்துக் கடந்தன
மெல்லிய உருவமென நுழைகிறாய்
காற்றென மாறி...

அதன் பிறகான காலம்
காதலுக்கானது
உன் மீது நானும் என் மீது நீயும்
கொண்ட அதீத நேசத்திற்கானது
உன் முதல் தீண்டலில் தேகம்
சிறகுகளை கட்டிக் கொள்கிறது
தடுக்க நினைக்கும் அறிவை எப்படியோ
மழுங்கடிக்கிறது உன் அரவணைப்பின் அருகாமை
விரல்கள்
கண்கள்
கன்னங்கள்
இதழ்கள் என தொடரும் உன் தீண்டலில்
மறந்து மயங்கி தேங்குகிறது உலகம்...

தளர்கிறது கட்டுகள் ஒவ்வொன்றாய்
எதையும் மறுக்க இயலவில்லை
இன்றும் விளங்காத புதிர் அது
என்னை உன் வசம் செய்தாய்
தேர்ந்த வசியக்காரனின் அரவனைப்பு
அறையெங்கும் நிறைகிறது நம் காதலின் சுகந்தம்
அடைபட்ட சன்னல் கதவுகளில் முட்டி மோதி
மீண்டும் நம்மையே சுழலும் அதில்
கிறங்கிக் கிடந்த அவ்விரவு ஒரு
ஒளிர்கிறது என்னுள் தீபமென...

அழகான உறவில் அடிக்கடி வந்த
சிறு சிறு அன்புப் பூசல்கள்
விவாதங்கள்
மறக்கப்பட்ட பிடிவாதங்கள்
சாமர்த்தியங்களால் சமாளிக்கப்பட்டன
பிறகு இன்றைய பிரிவை
கொண்டு வந்த நிமிடம் நினைவிருக்கிறதா?
என் முதல் காதல் உன்னிடமில்லை
உன் கவிதைகளிடம்
எது அன்பை சுமந்து திரிந்ததோ
அதுவே உன் மீதான சங்கடங்களையும்
சுமந்து நிற்கிறது...

அறிவேன் உன் மனதின் துயரங்களை
வேறு வழிகள் இல்லை என்னில்
அதற்கு காரணமானவனும் நீ தான்
வார்த்தைகளில் வெறுப்பை கொட்டவும்
உன்னை புறக்கணிப்பதாய் நடிப்பதுமாய்
தொடங்கி பின்பு அதுவே பழகி விடுகிறது போலும்
என் யதார்த்த வாழ்வின் கட்டுகளை
உறவுகளின் விதிகளை
புற உலகின் நிபந்தனைகளை மீறி
என்னால் செய்யமுடிந்ததில்லை எதுவும்...

உனக்கென வாங்கிய பரிசுப் பொருள்
உன்னை அடையாமல் என்னிடமே
உன் நினைவுகளை சுமந்தபடி
என்னை விட என்னை உணர்ந்தவன் நீ
எந்த செயல்களுக்கும் காரணத்தை
சொல்லிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை
நான் நேசித்தது உண்மை
நம் வாழ்வும் உண்மை தான்
இதோ வெகு நாட்களுக்குப் பிறகான
இந்த தனிமை உன்னை மட்டுமே
நினைவு கொண்டிருக்கக் காரணம்
உன் எதிர் பார்ப்பில்லா நேசமும்
அக்கறை அரவணைப்புகளுமே...

மீண்டும் எதாவது ஒரு நாளில்
ஒரு புள்ளியில் உன்னை
சந்திக்க விரும்பவில்லை நான்
நீ என்னுள் எப்பொழுதும்
காதலாகவே நிறைகிறாய்
கனவாகவே மலர்கிறாய்
உன் நினைவுகள் இதோ இவ்வறை
நிறைக்கும் மெல்லிய சுகந்தம்
என்னுளும் நிறைந்திருக்கிறது அதில்
என்றும் உனக்கான என் உலகம் அறியாக் காதல்
சுமந்து கொண்டுதானிருக்கிறது
அன்பின் நினைவுகளையும்
பிரிவின் வலிகளையும்...

உன்னைப் போல் வார்த்தைகளை
அலங்காரமாக்கத் தெரியாதவள் நான்
அதனால் என்ன?
நம் இருவருக்குமான உன் கவிதைகள்
இவ்வுலகில் பறவையென
சிறகடித்துக் கொண்டுதானிருக்கும்
நம் இருவரின் காதலை
நமக்கு தெரிந்த
மொழியில் எழுதியபடி....

Jan 24, 2012

தேவதையின் பொழுதுகள்...


எப்பொழுதும் ஏதாவது ஒரு
கதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
தன் பொம்மையிடம்
உயிரற்ற பொருள்களையெல்லாம்
உயிர் கொடுத்து நடமாடச் செய்யும்
வித்தை கற்றவள் அவள் மட்டுமே

ஒரு விடுமுறை நாளில்
தன் சிறிய தோழியின்
உடை அலசி
குளிக்க வெந்நீர் வைக்கிறாள்
கதிரவின் வெப்பத்தில்
குளிருக்கு கம்பளி போர்த்துகிறாள்
அரவணைப்பில் மயங்க வைக்கிறாள்
உடல் நிலை சரியில்லையென
மருத்துவமனை கூட்டிச் செல்கிறாள்

தன் பசி மறந்து
வேளை தவறாமல் உணவூட்டுகிறாள்
நிலவை காட்டுகிறாள்
பூக்களை பறித்துச் சூட்டுகிறாள்
அவள் அன்னையாகிறாள்
தோழியாகிறாள்
கல்விக் கூடம் அழைத்துச் செல்கிறாள்
மாலை வேளைகளில்
விளையாட்டுப் பொருளாகி
வேடிக்கை காட்டுகிறாள்

இரவில் கதை சொல்கிறாள்
அதில் பறவைகளை
விலங்குகளை
ஒரு ராஜ குமாரியை
தனது பாட்டியை எல்லோரையும்
கதாப்பாத்திரமாக்குகிறாள்
பிறகு தூங்க வைக்க
தாலாட்டுகிறாள்
பிறகு தான் தேவைப் படுகிறது
அவளுக்கான அரவணைப்பும்
தாலாட்டும்....

Jan 21, 2012

நேசித்தலாகும் கோபங்கள்...


நாம் இருவருமாய் வந்த பாதையில்
அங்கங்கே சிதறிக் கிடக்கிறது
உன் மீதான என் கோபங்களும்
என் மீதான உன் கோபங்களும்
சில ரணங்களும் சில மாயச் சுவடுகளும்...

புரியப்படா கோபங்கள் தவிர்த்து
மின் மினிகளென மின்னி மறையும் சில
மின்னலைப் போல் வெட்டியும் சில
சமாதான வார்த்தைகளில் சரணடையும் சில
நீளும் நாட்களும் வாரங்களுமாய்
பதற வைக்கும் சில
கோபங்கள் நேசத்தின் பிரதி...

உன் அன்பையும் அரவணைப்பையும் போலவே தான்
உன் அக்கறை கோபங்களும்
காதலைப் போலவே அடர்த்தியாகவும்
ஒரு நதியின் எதிர்பாரா வெள்ளமெனவும் பாய்கிறது
என் மீதான உன் ஆவேசங்களும்
வீசி எறியப் படும் சொற்களில்
சில நேரங்களில் தீப் பிழம்புகளும்
பார்வைகளில் அக்கினிப் பிரவாகமும்...

கோபங்களைப் புரிந்து கொள்ளாமல்
நேசத்தையும் புரிந்து கொள்ள இயலாது
யாரும் அறியாமல் பூட்டி வைத்த நேசம் போலன்றி
எப்படியும் வெளிவருகிறது கோபம்
என் மீது நேரடியாகவோ
பிறர் மீது மறைமுகமாகவோ
செயல்களின் வெளிப்படாகவோ...

சிவக்கும் கன்னங்களும்
துடிக்கும் உதடுகளுமாய்
கோபங்கள் உன்னை மேலும் அழகூட்ட
தவித்து விழுகிறது உன் சொற்கள்
சில நேரங்களில் தேர்ந்த மருத்துவனின்
கத்தியின் லவாகத்துடன் மென்மையாய்
என்னில் இறங்கி அறுத்தெறிகிறது
என் பிடிவாத புற்றுகளை...

நேசித்தலைப் போல் நிரந்தரமின்றி
உனக்குள் அடைபட்டுக் கிடக்கிறது கோபம்
என் தவறுகளில் வெளிப்பட,
பல நேர கோபங்களில் மெளனமே சொற்கள்
சில நேரம் சொற்களே கோபங்கள்
எப்படியிருந்தும் உன் நேசத்தில்
குறைவதில்லை நீ
கோபம் முடியும் கணங்களில்
அதிகமாய் நிறையும் உன் காதலில்
நிரப்புகிறாய் என் வாழ்வின் நிமிடங்களை...

முழுதாய் உன் நேசத்தை புரிய வைக்கிறது
உன் அக்கறை கோபங்கள்
சில பேசவும் பார்க்கவும் முடியாத
நாளின் பொழுதுகள் கோபங்களென மாறி
சுட்டெறிக்கிறது இருவரையும்
குரல் கேட்டுக் குறையாக் கோபங்கள்
கண் கலங்க கரைவதும் உண்டு
மற்றொருவர் மீதான கோபமும் எரிச்சலும்
வேறு வழியின்றிப் பாயும் போது
துடித்தழுகிறது நேசத்தின் ஒரு பாதி...

கோபங்கள் எனக்கான ஒரு கல்விக் கூடம்
என் நிலை உணர வைக்கும்
உன் சூழலைப் புரியவைக்கும்
ஒரு சிறிய அரவணைப்புக்கு ஏங்கி
தோள் சாய்ந்து கண்ணீருடன்
தன்னையும் கரைத்துக் கொள்ளும்
உன் கோபங்களையும் தள்ளி நின்று
நேசிக்க மட்டுமே முடிகிறது என்னால்....

நம் பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
இருவரின் கோபங்களும்
கை கோர்த்து வருகிறது
புதிதாய் ஒரு கோபத்தை சேர்த்துக் கொண்டு
காத்திருக்கிறேன் உன் அதீத நேசத்தை
மீண்டுமொருமுறை அடைந்து விட
உன் நேசமின்றி வாழ்வது சாத்தியமில்லை
எனும் பொழுது சாத்தியமற்றுப் போகிறது
உன் கோபங்களின்றி என் வாழ்தலும்..

Jan 20, 2012

எழுதப் படாக் கனவு....


எழுதிவிடாக் கவிதையொன்று
தவித்து வெளியெங்கும் அலைகிறது
எனைச் சுற்றும் தனிமைப் பொழுதுகளில்
ஒரு பெரு மழையென பொழிய
ஒயாது அலைகளின் சீற்றமென
பசித்த வேங்கையொன்றின் விழியென
தவமிருக்கிறது என்னை குறியாக்கி...

உன் வீட்டு சமையலறை குழாயில்
சொட்டிக் கொண்டிருந்த நீரில் அதன்
மெளனம் சிதறிக் கொண்டிருந்தது
பனிக் காலத்து அதிகாலைக் கோலங்களில்
நீ சிறைப் பூட்டியிருந்ததும் தெரியும் தான்
அடர் வனத்தின் தனி களிரென அங்குமிங்கும்
அலைகிறது தன் இணை சொற்களைத் தேடி...

திசை மாறிவிட்ட கலமென நீர் விரிவில்
தனித்து சுழல்கிறது இன்னுமொரு சொல்
நடுங்கும் உன் உதடுகளில் வெடிக்கக் காத்திருக்கிறது
அதன் அடுத்தடுத்த மீதங்கள்
வெட்டப் படும் ஒரு மரத்தின் நுனியில்
ஒரு சிறு அரும்பெனவும் காத்திருக்கலாம்
கனியையும் அதனுள் விதையையும்
இன்னுமொரு மரத்திற்கான கனவையும்
வேதனையோடு சுமந்து கொண்டு...

ஒரு மலையோ பாறையோ தடுத்து விடும்
நீர்க் குவியலென காத்திருக்கிறது இன்னுமொரு
செயற்கை கடல் தன் வலிமையை மறைத்து
இப்படி மட்டுமே இருந்து விட வாய்ப்புகளில்லை
ஒரு காகிதப் பெட்டியில் அடைபடும்
புகையாகவோ வாசனைப் பொருளாகவோ
குப்பைத் தொட்டியில் தவறி விழுந்த
சில்லரை நாணயமெனவோ காத்திருக்கலாம்...

அகால மரணத்தின் அந்த ஒற்றை நொடியாகவும்
குழந்தையின் முதல் புன்னகையெனவும்
உன் தோட்டத்தில் ரீங்கரிக்கும் ஒரு
தேனீயின் தேடலிலும் ஒளிந்திருக்கலாம்
சில வேளைகளில் கார்மேகத்தில் மறைந்து
விண்மீன்களில் ஒளிரக் கூடும்
நான் தேடும் ஒற்றைச் சொல்லோ
அல்லது என்னைத் தேடும் பல சொற்களோ...

எழுதிவைத்த ஒன்றிரண்டும் ஏளனம் செய்ய
தேடும் சொற்கள் மறைந்து கொள்கிறது
எழுதப் பட்ட வரிகளின் பின்னால் சுவடென
சகிக்க முடியா யதார்த்தங்களிலும்
கோட்பாடுகளிலும் புதைக்க முடியாமல்
இதயம் கிழிபட வீழ்ந்து கிடக்கிறேன்
எழுதப் படா கவிதையின் மயானமொன்றில்
சிதறிக் கிடக்கும் மீத சொற்களின் கனவுகளோடு...

Jan 2, 2012

ஒரு சாலையும் வளைவும்...


காலையில் கதிரவனின்
செம்மைக் கதிர்களால் சூடேறிச் சிலிர்க்கிறது
நகரத்துச் சாலை
இரு கோவில்களும்
எண்ணற்ற கடைகளுமாய்
நிரம்பிய இதில் தான்
என் பார்வை முழுதும்
பயணித்துக் கொண்டே...

நல்ல வளைவு இவ்விடம்
எதிரே வரும் வாகனங்கள்
தெரிய வாய்ப்புகளே அற்ற வளைவு
சப்தங்கள் ஒலிக்கப் படவேண்டிய ஒன்று
எந்த வாகனமும் முந்திச் செல்லக்
கூடாத வளைவு
இங்கே சாலையைத் தவிர
சாலை விதிகளை
எல்லாமே விதிகளை மீறும்...

காலையில் காய்கறிகாரர்களின் அவசரம்
பால் வண்டிகளின் வேகம்
பள்ளி கல்லூரி பேருந்துகளின் விரைவு
தண்ணீர் வண்டிகள்
மீன் வண்டிகள்
எல்லாம் கடந்த பின்
பெரு முதலாளிகளின்
விலையுயர்ந்த கார்கள்...

அனைத்தும் கடந்தும்
ரப்பர் உருளைகள் தேய்த்தும்
தேயாமல் அப்படியே தான்
மௌனமாய் படுத்துக் கிடந்தது
கரிய உடல் பாம்பென
சில கால் நடை மனிதர்களும்
மாடுகளும் கூட மெதுவாய்க் கடந்து
அப்புறமும் இப்புறமுமாய்
போயிருந்தார்கள்...

கொதிக்கும் மதிய வெயிலில் வெப்பத்தோடும்
வெள்ளை கோடுகளால் பிரிக்கப்பட்ட போதும்
கூட்டங்களுக்கு துளைகள் போட்ட போதும்
ஓரமாய் சாக்கடை கழிவுகள்
குவியலாய் மாறி நாற்றமெழுப்பிய போதும்
அமைதியாகத் தான்
படுத்துக் கிடந்தது இச் சாலை....

இன்று மாலை தான்
எதிர் பாரா விதமாய்
லாரி ஒன்றை முந்த எண்ணி
விரட்டிய வாலிபனின் குருதியில்
சிவப்பை சிறிது பூசிக் கொண்டது
விரைந்து சென்று அவசர ஊர்தியை
அழைக்கிறேன்
சிதறிய சடலம் சேர்க்க...

வியாபார நகரமல்லவா?
சில நிமிடங்களில்
எல்லாமே சரியாகி போனது
மீண்டும் அதே வேகம்
அதே போல் வாகனங்கள்
சுமக்கத் துவங்கியது சாலை
இன்னும் அதன் ஒரத்தில்
இடுக்கில் என ஒட்டிக் கொண்டிருக்கிறது
உயிர் விட்ட என் போல
ஒருவனின் ரத்தத் துளிகளின் எச்சம்....

இதே சாலை தான்
இப்பொழுது நிலவின் ஒளியில்
பனியின் குளிரில்
குளிர்ந்து கிடக்கும்
இதே சாலை தான்
இதே வளைவு தான்...

சொற்களைச் சுமக்கும் மேகங்கள்...


இறைந்து கிடக்கும்
சொற்களிலிருந்து விதையென
எடுத்துக் கொள்ளகிறேன்
என் கவிதைக்கான முதல்
சொல்லொன்றை...

எனக்குள் விதைக்கப் பட்ட
விதையிலிருந்து துளிர்க்கிறது
சிறிய வேருடனும்
இரு மெல்லிய இதழ்களுடனுமான
ஒரு உயிர்...

வேர்கள் பதிய
உடலொன்று உருவெடுக்கிறது
மேல் நோக்கிய
வளர்ச்சியும்
கீழ் நோக்கிய தேடலுமாய்...

செடியாகிறது
மரமாகிறது
உறிஞ்சும் நீரை
மேகத்துள் விதைக்கிறது
கிளைகளின் அசைவில்
மென் காற்றை உருவாக்கி
மேகத்தை நகர்த்த...

பல விதைகள்
பல மரங்கள்
பல மேகங்கள்
இப்பொழுது ஒரு காடும்
வான் நிறைய நீர்
சுமக்கும் மேகங்களுமாய்
ஒற்றை சொல் ...

மெல்ல மெல்ல நகர்ந்து
உன் வீடு நோக்கி வருகிறது
மேகங்களென
சொற்களைச் சுமக்கும்
என் கவிதை...

சூழ் கொண்டு
பொழிகிறது மழை
உன்னைச் சுற்றி
தவறிய சொற்கள்
காற்றென மாறி
கண்ணாடி சட்டமிடப்பட்ட
சன்னலின் வழியே
ரசிக்கும் உந்தன்
முகத்திலும் தூவலாம்
என் நினைவுகளை...