பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 13, 2011

மழையும் நீயும்...


மழை நாட்களில் எல்லாம்
அதிகமாகிறது
உன் நினைவுகள்...
இன்று பெய்த மழையைப் போல தான்
நீயும்
முதல் துளியை உணரும்
பரவசம் போல்
சாரலாய் தழுவும்
உன் நேசம்...
சிறிது நேரத்தில் சட சடத்து
நனைத்த மழையென
முழுதும் மூழ்கி விடுகிறேன்
உன் காதலின்
பெருவெளியில்...
காற்று சுழன்றடிக்கும் பொழுதெல்லாம்
வாரி இறைக்கும் சாடல்களில்
உணர்கிறேன் உன்
சில வினாடி கோபங்களையும்...
நனைந்து விட்ட பூமியென
எங்கும் நிறைந்து
விடுகிறாய் என் நினைவெங்கும்...
பூ செடிகளில் தங்கிய
நீரென மழை
முடிந்த பின்பும்
என் மீது விழுந்து கொண்டே
இருக்கிறது
உன் பிரிவின் பின்னரும்
நம் மகிழ்வின் ஈரம்...
நீ எப்பொழுதும்
மழையாகி விடுவதும்
உன்னை எதிர் பார்த்துக்
காத்திருப்பதுமாய்
காலம்
என்னையும்
வாழவைத்து விடுகிறது...

நான் தொலைத்த ஊரில்


செம்மண் புழுதிக் காட்டில்
பொங்கி வருகிறது வெயிலின் வாசம்
மழை நனைத்த இரவு முடிந்து
காலையில் பசுமை போர்த்தும்
புல் மேய இழுத்துப் போகும்
என் வீட்டு ஆட்டுக் குட்டி
வெறும் கால்களால்
வரப்புப் பாதையில் நடை
எருமைக்கென வெயிலில்
சிறு துணியை தலையில் கட்டிக் கொண்டு
புல் அறுக்கும் பாட்டி
ஈரம் காய்வதற்குள் விதைக்கப் படும்
சோள விதைகள்
எஞ்சினை சுழற்றி விடும்
அண்ணனின் லாவகம்
பக்கத்து ஓடையில்
காத்திருக்கும் நாரைகள்
மதிய நேர வேப்பமரக் காற்று
சலங்கை கட்டிய மாட்டுவண்டிப் பயணம்
மரத்தடி கருப்பராயன்
பத்து மணி பழைய சோறு
கம்புச் சோறும் மிளகாய் வத்தலும்
கற்றாழை
கள்ளிப் பழம்
பனங்கிழங்கு
அக்கா குருவி
மாலைநேர மிதிவண்டி
இரவு நேர அரிக்கேன் விளக்கு
அண்ணமார் கதை கூத்து
எத்தனை எத்தனை இழந்திருக்கிறேன்
குளிரூட்டப் பட்ட அறையில்
அலுவலக கணினியில்
வாழ்வைத் தொலைத்த படி..

சிறு துளிகள்


அம்மா
அப்பா
மனைவி
அனைவரும் வேலைக்கு!
குழந்தைகள்
பள்ளிக்கு!!
என்ன செய்து கொண்டிருக்கும்
தனிமையில் வீடு...

நேற்று மாலை
நீ பறிக்கத் தவறிய
மல்லிகைப் பூக்களுடன்
பேச வருகிறது
இரவிலும் வண்ணத்துப் பூச்சிகள்...

பூச்சாண்டிகள் இல்லாமல்
தானாகவே சாப்பிடும்
குழந்தைகள்
சீரியல் பார்க்கும்
அம்மாவுக்கு பயந்தபடி...

பேருந்து கிளம்பி விட்டது
மக்கள் கூட்டம்
சில்லறைகளின் சப்தம்
முதியோருக்கான இருக்கையில்
நீயும் நானும்
சிறிதும் கூச்சமின்றி...

மலர்களைப் பற்றி
யோசித்துக் கொண்டிருக்கும்
பொழுதெல்லாம் நினைவில் வருகிறது
எப்போதோ வெடித்து அப்பாவியின்
உயிர் குடித்த துப்பாக்கி தோட்டா...

பொய்களைப் பரப்பி விட்டு
நிஜங்களில் ஒளிந்து கொள்வேன்
வெளிவருவதற்குள்
அடுத்த பொய்களை
தயாரித்து விடுவேன்...