பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 14, 2011

சொல்லாமல்....


உன் வீட்டு முகம் பார்க்கும்
கண்ணாடி முன்பு
நின்று கொண்டு சொல்!
உன்னுள் இருக்கும்
என் பிம்பம் அருகில் தெரியலாம்
ஆன்மாவின் பிரதிபலிப்பாய்!!

சில நொடிகள் மட்டுமே
பார்த்த முகத்தை
ஒவ்வொரு நொடியும் நினைத்துக்
கொண்டிருக்கும் நினைவுகளுக்கு
என்ன பெயர் வைப்பது!!

உன் மௌனங்களைக் கூட
மொழி பெயர்த்து கவிதை என்றேன்!
இனி என் மௌனங்களை
உன்னிடம் தருகிறேன்
கவிதை சொன்னாலும்
காலில் இட்டு மிதித்தாலும் சரியென!!

இலட்சியங்களோடு
வாழும் உனக்கு
இலக்குகளே இல்லாத
என் பயணங்கள்
வேடிக்கையாய் தோன்றுவதில்
வியப்பேதுமில்லை!!

சிறிய பறவை எனினும்
வானின் நீளங்களை
அளந்து திரிந்தவன்!
என் சிறகுகளை நானே
வெட்டிக் கொள்ளும் துயரம் இது!!

வார்த்தைகளின்
பின்னால் மட்டுமே
ஒளிந்து கொண்டவன் இன்று
வாழ்க்கை பிடிக்காமல்
ஒளியும் நாட்களில்!!

அன்பென்று கூறி
தங்கத்தில் பூசினாலும் சிறைகள்
தண்டனை தான்
இனி சிறைகளும் இல்லை
காவலும் இல்லை உனக்கு!!

உன்னை கவிதையாக்க
முயன்று தோற்றுப் போயிருக்கிறேன்
உனக்குத் தெரியும்
என் கவிதைகளுக்கு
தெரியுமா என்ன!!

எனக்குத் தெரிந்ததெல்லாம்
வெறும் வார்த்தைகளே
யதார்த்த வாழ்வென்று
நீ சொன்ன சமன்பாடுகள் அல்ல!!

வெறும் காற்று தான்
தென்றலாகவும்
புயலாகவும்
நீயே சொல்
நான் எதுவென்று?

எப்பொழுதுமே பிரிவில் தான்
புரிகிறது
பிரிக்க முடியாத
உறவுகளின் வலி!

எப்பொழுதும் சொல்லாமல்
புரிந்துகொள் என்பாய்
ஆம்...
என் அமைதியையும்
இனி நீயும்!!

No comments: