பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2011

கூடல் பொழுதொன்றில்...


எப்பொழுதும் உன் வருகைக்காய்
விழித்திருக்கிறது என் இரவு
தேய்ந்து போன நிலவொன்றின்
ஏக்கங்களை சுமந்த படி...
சிவந்து போன தடயங்களோடு
இன்னும் மீதமாக இருக்கிறது
மென்மையான உதடுகளின்
சில நொடிகள் வன்முறை...
நிலவுக்கான அல்லியாகவும்
பசித்த புலியாகவும் முரண்பட்ட நிலையில்
நானிருந்தேன் உன் நெருங்கிய
முத்தத்தின் பிடியில்...
நீ இன்னும் எதற்கு காத்திருக்கிறாய்
இதுவரை அறிந்திராத ருசிக்குத்
துடிக்கும் உன் உதடுகளில் தெரிகிறது
பகல் முழுதும் மறையும் வேட்கை...
உறக்கம் இல்லா இரவுகளின் நீட்சியில்
உனக்கென நானும் வைத்திருக்கிறேன்
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில்
சம்மதிக்கும் பார்வையொன்றை...

ஆடைகள் பத்திரம்

முக நூலில் வெளிவந்த என்னை கவர்ந்த கவிதை....

நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் இருந்திருக்கிறோம்?

உலகின்பால் பிறத்தலிலும்
உடலின்பால் இறத்தலிலும்
சுத்தத்தின்பால் குளித்தலிலும்
சுகத்தின்பால் கூடலிலும்
நாம் நிர்வாணம் தரித்திரிக்கிறோம்.

சரி,
நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் உணர்ந்திக்கிறோம்?

மனைவியின் தோழி ஒருத்தி
'முகம் பார்த்து பேசுங்கள்'
என்ற பொழுது என்
மேலாடைகள் களையப்பட்டன...

கர்ப்பினியை கண்டுகொள்ளாத
பேருந்து பயணங்களில் என்
கீழாடைகள் கிழிக்கப்பட்டன

சிறுவன் பரிமாற
சிரித்துண்ட சிற்றுண்டி நிமிடங்களில்

அடிபட்டுகிடந்தவனைவிட
அலுவலக கடிகாரம்
பெரிதாய்த் தெரிந்த நொடிகளில்

கருப்பான குழந்தையென
கொஞ்சாத தருணங்களில்

இப்படி அன்றாட வாழ்வின்
கொடூர நேரங்களில்
நானே திரௌபதியாய்
என் தவறுகளே துச்சாததனாய்
மேலாடைகள் களையப்பட்டும்
கீழாடைகள் கிழிக்கப்பட்டும்
உள்ளாடைகள் கூட
ஒவ்வொன்றாய் உருவப்பட்டும்,
அங்காடிதெருவில் அலைகின்ற
நிர்வாண நாய்போல
நிற்பதுவாய் என் நெஞ்சம்
நிற்காமல் சொல்கிறது

உங்களுக்கு எப்படியென
எனக்குத் தெரியவில்லை...
அன்பாய்ச் சொல்லுகிறேன்
'ஆடைகள் பத்திரம்'....!
-த.ஜெகன்

நத்தைக் கனவு


ஒரு நீண்ட படிக்கட்டின்
ஒரு முனையில் நானும்
மறு முனையில் என் நினைவுகளுமாய்
கண் முன் விரியும் வெளியை வெறித்தபடி...
நேற்றைய பூங்காவின் மகிழ்வு
இன்று காணமல் போயிருந்தது
இடைவெளியை நிரப்பும்
கவிதைகளை சமைத்துக் கொண்டு நானும்
அதற்கான சொற்களில் உன் ஞாபகங்களும்...
கடந்து போகும் நகர்ப் பேருந்தின்
கரும் புகையை சுவாசிக்க
திணறும் மூச்சுக் குழலென
திகைத்து கடக்கிறது காலம்...
நிஜங்களை ஏற்க மறுத்து
நிழல்களோடு சண்டை பிடிக்கிறது
வாழ்க்கையை திருடும் கனவுகள்...
அனைத்தும் வேகமாய் மாறிவிட்ட உலகில்
இன்னும் நத்தைக் கனவுகளோடு
காத்திருக்கிறது உனக்கான
இரவுகளில் உதிராத சில விண்மீன்கள்...
பறவைகளின் மொழியை
இன்னொரு பறவை மட்டுமே அறியும்
சிறு நெல் மணிக்கென
காகிதங்களைப் கவ்வும் கிளிகள்
ஒரு வேளை நேசிக்கப் படலாம்
விரும்பும் சீட்டினை எடுத்தால்...
தந்திகள் அறுபட்ட வீணையென
ஒதுக்குப் புறமாய் அலங்காரப் பொருளாய்
உன் வீட்டில் நீ வைத்திருக்கலாம்
நம் நேசத்தையும் சட்டமிடப்பட்ட
புகைப் படங்களிலும்
யாரும் எடுத்து விடாத
புத்தகத்தின் இடுக்குகளிலும்...