பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 27, 2012

அவன் அப்படித் தான்...


அவன் அப்படித் தான் இருந்தான்
எப்போதும் புன்னகைத்த படி
புதிர் ஒன்றுக்குக்கு விடை தேடிய படி
இல்லையெனில்
புதிர் ஒன்றை உருவாக்கியபடி
கிளிகளோடு பேசிக் கொண்டும்
செடிகளிடம் பூக்களுக்காக
வேண்டியபடியும்
நிலவோடு உறங்கவும்
வெயிலோடு விளையாடவும்
அவன் அறிந்திருந்தான்
அவன் மௌனமொழியால்
தாயிடம் பேசி தன்னை
உணர்த்தும் வல்லமையும்
அவனுக்கு இருந்தது
கிணற்றில் கர்ணம் போடுவான்
மிதிவண்டியில் குரங்கு பெடல்
ஒட்டுவான்
கரி துண்டில் சூரியனை வரைவான்...
இன்றோ
அவன் நிறைய கற்றுக் கொண்டான்
அச்சிட்ட காகிதங்களில்
அறிவைப் பெருக்கினான்
சில அல்ஜீப்ராக்களும்
பிதாகரஸ் சமன்பாடுகளும்
வரலாறும் பூகோளமும்
பிறகொரு நாளில்
கவிதை வாசித்துப் பழகினான்
எல்லாவற்றையும் தாண்டி
உதடுகளை தாண்டி
புன்னகைக்காமல் இருக்கவும்
இப்பொழுதெல்லாம்
தன உணர்வுகளைப்
புரிய வைக்க நிறைய
போராட வேண்டியிருப்பதை
உணர்ந்திருந்தான்...
அவன் உருவாக்கி இருந்தான்
அவன் தொலைந்திருந்தான்
அவன் தன்னைத் தானே
தொலைத்திருந்தான்....

நான், நம்பிக்கை...


நான் அங்கு இருந்தேன்
இருந்ததாக நம்பினேன்
இருந்ததாக நம்பப்பட்டேன்
என் இருப்பை நீ உணர்ந்திருக்கிறாய்
இன்றும் நான் இருப்பதாக நம்புகிறேன்
இருப்பதாக நீ சொல்லும் வரை
அங்கு நான் இருக்கக் கூடும்
ஏனெனில்
என் இடத்தில் வேறு யாரும் இருக்க முடியாது
நான் இன்னும் கூட இருக்கிறேன் எனும்
கனவில் தான் இருக்கிறேன்...

பிரதிகள்...


எதுவுமே புதிதில்லை
நீ
நான்
நம் கனவுகள்
சில கவிதைகள்
எல்லாமே...
யாரோ ஒருவர் நமக்கும் முன்னரே
கனவுகளையும்
கவிதைகளையும்
எழுதியிருக்கக் கூடும்
வெறும் பிரதிகளே நம்முடையவை
இது வரை எவருமே
எழுதி விடாத
கூறி விடாத ஒன்றை
நீயும் நானும்
சொல்லாமலே இருப்போம்
அதில் தான்
மிஞ்சியிருக்கிறது
உண்மையான கனவும் கவிதையும்...

கனவு...


ஆகப் பெரும் கனவைச் சுமந்தபடி அலைகிறேன்
அதுவோ தன்னில் சில சூரியன்களை நடுகிறது
நட்சத்திரங்களை வாரியிறைக்கிறது
ஒரு பேரலை ஒதுக்கிய சங்கென மணல் வெளியில்
மாறிக் கிடக்கிறது நானெனும் சுயம்
மெல்ல மெல்ல விரிகிறது அதன் பிரபஞ்சவெளி
எண்ணிலடங்கா நிலவுகள் தன் பாதையில்
என்னைச் சுற்ற மயங்கிச் சரிகிறேன்
பல கோள்களும் அதன் பாதைகளுமாய் நீளும் கனவில்
எதோ ஒன்றில் மழையடிக்கிறது
எதொ ஒன்றில் வேர் பிடித்து பூ பூக்கிறது
கனவுக்குள் ஒருவன் என்னைப் போலவே
தனிமையில் எதையோ தேடி அலைகிறான்
முன் பின்னறியா அவனுக்கும் இருக்கிறது
எனக்கிருக்கும் அதே முகத்தின் சாயல்
சுற்றிலும் சில் வண்டுகள் பறக்க
அவன் எதையோ பிடிக்க முயல்கிறான்
களைத்துப் போகிறான்
அக்கனவினால் நான் அழிக்கப் படலாம்
அழிவது மிக ரகசியமாய் எனக்கே தெரியாமல்
நடந்து விடக் கூடும்
ஏன் அது உங்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்
மெதுவாய் கண்கள் வலிக்கிறது
பாரமொன்றை சுமப்பது போல்
கனக்கிறது மனதும் தலையும்
திடுமென விழிக்கையில் தொலைவில் அலைகிறது
அப்பெருங் கனவு
அதன் கரையில் நான்
கவிதைகளால் வசியம் செய்து அக்கனவை அடைக்கிறேன்
என் முன் சிறு துகளெனக் கிடக்கிறது அக்கனவு
அதனிடம் சொல்கிறேன்
நானொரு மாபெரும் கனவு
என்னில் ஆயிரம் பிரபஞ்சங்கள்
அதில் நானே படைக்கிறேன் நானே அழிக்கிறேன்
கனவுகளும் அதில் அடக்கம்
மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கினோம்
என் கனவுகளை நானும்
என்னை என் கனவுகளுமாய்...