பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 31, 2012

சொல்லாத நேசம்...


இன்னும் எதேனும் ஒரு கவிதையின்
வரிகளில் மறைந்து தானிருக்கிறாய் நீ
அலைகளென தொடர்ந்து வருகிறது
சொல்ல இயலா உன் நேசமும் தேடலும்
நேற்று வந்த புழுதிக் காற்றும்
வீசி எறியப் பட்ட நசுங்கிப் போன
தண்ணீர் குவளையும் சுமந்திருந்தது
அதனதன் கனவுகளில் உன்னை
வெட்கங்களால் நிறைந்த சிறுமியின்
பார்வையில் ஒளிர்ந்தவள் நீ தான்
கைகுட்டையெனும் சிறு துணியில்
அடிக்கடி துடைத்து விட முயல்கிறேன்
முகத்தில் படரும் உன் சாயலை
அரூப வெளியென என்னை சூழ்ந்து
எட்ட நின்று ரசித்த படி அலைகிறது
என்றோ முடிந்து விட்ட நிகழ்வின் நீட்சி
கொதிக்கும் காய்ச்சலோடு புரள்கிறது
ஒதுக்கி வைத்த கனவின் மீதங்கள்
விரிந்த இறகுகளோடு என்னைக் கடக்கும்
ஒரு மாமிச பட்சியொன்றை கடவுளென
கொண்டாடி மகிழ்கிறது நம்பிக்கையிலா மனது
ஏதோ ஒரு வியப்பின் குறியீட்டில்
தவிக்கிறது வாழும் கணங்களின் உயிர்ப்பு
சட சடவென மாறி விடும் அனைத்தையும்
தாண்டி மாறாதென சொல்லி
நேசித்துக் கொண்டிருக்கிறேன் உன்னை
மலர்ந்து வாடி உதிரப் போகும்
ஒரு தாமரையின் இதழ்களின் உள்ளாக
ஒளித்து வைக்கப் பட்டிருக்கலாம்
எனக்கென நீ சேமித்த அந்நேசம்...