பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 25, 2012

நீ நான் ஒரு நேசம்...


யாருமற்று தனிமையில் இருப்பதில்
உன் நினைவு வருகிறது தடைகளின்றி
என்றோ நீ வந்து போன சில மணி நேர
அருகாமையின் வாசம் நினைவுகளின் வழியே
அறையெங்கும் பரவி சுவாசமெங்கும் நிறைகிறது
உன் வாழ்விற்கான என் கனவு
என்னில் மிகப் பெரிய கனவாகவே தொடர்கிறது..

உன் நேசத்தின் ஈர்ப்பில் உன்னில்
மயங்கிக் கிடந்த பொழுதுகள்
நீ பேசும் அனைத்தும் கவிதையென மாறி
உன்னுடனே என் சுயம் தொலைத்து
நீ நானாகவும் நான் நீயாகவும்
மாறிக் கிடந்த அற்புத நாட்கள்
நீ அழகில்லை தான்
நான் விரும்பியது போல
மின்னும் வெண்மை பற்களும் இல்லை தான்
இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
உன்னிடம் என்னை எப்படித்
தொலைத்தேன் என்று...

என் மீதான உன் அக்கறைகள்
அறிந்தவை மிக அழகானவை
நேரில் சந்திக்கும் கணமொன்றை
கனவுகளில் எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் பல
அதே கனவு இன்னும் நிழலென
விடைபெறாமல் இருக்கிறது
அந்த முன்னிரவின் இறுதியில்
வந்தாய் சில நிஜங்களோடு
பயமும் தயக்கமும் முன் தள்ள
ஆவலும் ஆசையுமாய்
பதற்ற நொடிகள் துடித்துக் கடந்தன
மெல்லிய உருவமென நுழைகிறாய்
காற்றென மாறி...

அதன் பிறகான காலம்
காதலுக்கானது
உன் மீது நானும் என் மீது நீயும்
கொண்ட அதீத நேசத்திற்கானது
உன் முதல் தீண்டலில் தேகம்
சிறகுகளை கட்டிக் கொள்கிறது
தடுக்க நினைக்கும் அறிவை எப்படியோ
மழுங்கடிக்கிறது உன் அரவணைப்பின் அருகாமை
விரல்கள்
கண்கள்
கன்னங்கள்
இதழ்கள் என தொடரும் உன் தீண்டலில்
மறந்து மயங்கி தேங்குகிறது உலகம்...

தளர்கிறது கட்டுகள் ஒவ்வொன்றாய்
எதையும் மறுக்க இயலவில்லை
இன்றும் விளங்காத புதிர் அது
என்னை உன் வசம் செய்தாய்
தேர்ந்த வசியக்காரனின் அரவனைப்பு
அறையெங்கும் நிறைகிறது நம் காதலின் சுகந்தம்
அடைபட்ட சன்னல் கதவுகளில் முட்டி மோதி
மீண்டும் நம்மையே சுழலும் அதில்
கிறங்கிக் கிடந்த அவ்விரவு ஒரு
ஒளிர்கிறது என்னுள் தீபமென...

அழகான உறவில் அடிக்கடி வந்த
சிறு சிறு அன்புப் பூசல்கள்
விவாதங்கள்
மறக்கப்பட்ட பிடிவாதங்கள்
சாமர்த்தியங்களால் சமாளிக்கப்பட்டன
பிறகு இன்றைய பிரிவை
கொண்டு வந்த நிமிடம் நினைவிருக்கிறதா?
என் முதல் காதல் உன்னிடமில்லை
உன் கவிதைகளிடம்
எது அன்பை சுமந்து திரிந்ததோ
அதுவே உன் மீதான சங்கடங்களையும்
சுமந்து நிற்கிறது...

அறிவேன் உன் மனதின் துயரங்களை
வேறு வழிகள் இல்லை என்னில்
அதற்கு காரணமானவனும் நீ தான்
வார்த்தைகளில் வெறுப்பை கொட்டவும்
உன்னை புறக்கணிப்பதாய் நடிப்பதுமாய்
தொடங்கி பின்பு அதுவே பழகி விடுகிறது போலும்
என் யதார்த்த வாழ்வின் கட்டுகளை
உறவுகளின் விதிகளை
புற உலகின் நிபந்தனைகளை மீறி
என்னால் செய்யமுடிந்ததில்லை எதுவும்...

உனக்கென வாங்கிய பரிசுப் பொருள்
உன்னை அடையாமல் என்னிடமே
உன் நினைவுகளை சுமந்தபடி
என்னை விட என்னை உணர்ந்தவன் நீ
எந்த செயல்களுக்கும் காரணத்தை
சொல்லிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை
நான் நேசித்தது உண்மை
நம் வாழ்வும் உண்மை தான்
இதோ வெகு நாட்களுக்குப் பிறகான
இந்த தனிமை உன்னை மட்டுமே
நினைவு கொண்டிருக்கக் காரணம்
உன் எதிர் பார்ப்பில்லா நேசமும்
அக்கறை அரவணைப்புகளுமே...

மீண்டும் எதாவது ஒரு நாளில்
ஒரு புள்ளியில் உன்னை
சந்திக்க விரும்பவில்லை நான்
நீ என்னுள் எப்பொழுதும்
காதலாகவே நிறைகிறாய்
கனவாகவே மலர்கிறாய்
உன் நினைவுகள் இதோ இவ்வறை
நிறைக்கும் மெல்லிய சுகந்தம்
என்னுளும் நிறைந்திருக்கிறது அதில்
என்றும் உனக்கான என் உலகம் அறியாக் காதல்
சுமந்து கொண்டுதானிருக்கிறது
அன்பின் நினைவுகளையும்
பிரிவின் வலிகளையும்...

உன்னைப் போல் வார்த்தைகளை
அலங்காரமாக்கத் தெரியாதவள் நான்
அதனால் என்ன?
நம் இருவருக்குமான உன் கவிதைகள்
இவ்வுலகில் பறவையென
சிறகடித்துக் கொண்டுதானிருக்கும்
நம் இருவரின் காதலை
நமக்கு தெரிந்த
மொழியில் எழுதியபடி....