பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 29, 2007

மடல்!!!!!



அன்புள்ள மகளுக்கு,

புன்னகைக்கும் பூவே நலமா....

உன் சின்ன சின்ன சிரிப்புகளோடும்

சிதறிக்கொண்டிருக்கும் நினைவுகளோடும்

தூரமாய் நான்....


நீ சாய்ந்துறங்கும் தோள்களும்

எதிர் தருணங்களில் நீ இதழ் பதித்த

கன்னத்தின் ஈர சுவடுகளும்

மார்பு சூட்டில் கண்ணுறங்கிய தருணங்களுமாய்

தொடர்கிறது என் நொடிப் பொழுதுகள்....


பால் சோறு உண்ணும் போது பங்கு

வைக்கும் செல்ல பூனைக்குட்டி சுகமா?


இல்லத்திற்கு யார் வரும் போதும் உறுமலோடு

உனை அழைக்கும் அன்பு நாய்க்குட்டி சுகமா?


பூ பறிக்கும் பெண்களிடையே சிரிக்கும் மலரை

தொடாமல் ரசிப்பாயே அந்த பூந்தொட்டி சுகமா?


ஜன்னலில் வந்தமர்ந்து உன்னோடு கதை பேசும்

குருவிக் கூட்டங்கள் சுகமா?


வேப்ப மரத்து அணில் சுகமா?


வெயில் விளையாடும் முற்றம் சுகமா?


தண்ணீர் தெளித்து கோலமிட்டு

அழகு பார்க்கும் வாசல் சுகமா?


உன் உறக்கத்தோடு வரும் கனவுகள் சுகமா?


அனைத்தும் சுகம் தானே!!!!


உனக்கு பிடித்த பாடல் வானொலியில்

நீயும் வாயசைத்து பாடுகிறாய் இங்கு...


நீர் குடிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது

"ஜி" என நீ வைத்த புனைப்பெயர்...


வீடு மாறி விட்டதாய் கேள்விப்பட்டேன்

எப்போது வரப்போகிறாய் நம் வீட்டிற்கு...


கூடு கட்டும் பறவை சேகரிக்கும்

சுள்ளிகள் போல சிறிது சிறிதாய் சேர்க்கிறேன்

உனக்கான என் வார்த்தைகளை...


எப்போதும் நாம் விளையாடும்

கண்ணாமூச்சி போல நீ ஒளிந்து கொள்கிறாய்

என் கவிதைகளின் பின்னால்...


உன்னை கண்டு பிடிக்கும் பொழுதுகளில்

காணாமல் போகிறது என் கவிதை...


என்னிடம் இருக்கும் வெற்று தாள்களுக்கு

கனவுகளால் நிரப்பும் கவிதைகளை தந்தவள் நீ...


இறுதியாய் ஒன்று..,

நான் அங்கு வரும் வரையோ

நீ இங்கு வரும் வரையோ

புன்னகையோடு காத்திரு

என்னை விட்டு உன் தாய் உயிர்த்திருப்பது

உன் புன்னகையில் மட்டுமே...


பிரிவுகள் சுகம் தான்

காத்திருத்தல் தவம் தான்

நான் இங்கு காத்திருப்பதற்காக

பிரிந்திருப்பவன்....

இப்படிக்கு,

கை கோர்த்து நடை பழக்கும் நினைவுகளோடு

கனவுகள் சுமக்கும்

மழை காதலன்..