பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 24, 2012

வர்ணங்கள் அற்ற வானம்...

வர்ணங்கள் அற்ற வானில்
சிறகுகளின்றிப் பறப்பதில்
என்ன இருந்து விடப் போகிறது?

ஏதாவது ஒரு துயரம் தொலைக்க
உன்னிடம் ஓடி வருகிறேன்
எப்பொழுதாவது,
திரும்புகையில் புதிதாய் ஒன்று கூடுகிறது.

எந்தக் கதையும் உனக்கு சுவாரசியம் இல்லை
முன்பே நீ அறிந்திருக்கக் கூடும்
இல்லையெனில், நீ
ரசிக்கும் அளவுக்கு சொல்லத் தெரிவதில்லை.

அடிக்கடி உன்னை விடைபெறுவதன் நிமித்தமாய்
வட்டத்தினுள் அடைபட்ட காலத்தை பார்க்கிறேன்
என்னை தன் கையில் வைத்து விளையாடியபடி
புன்னகைக்கிறது அதன் போக்கில்.

கடந்து வெளிவரும் வேளையில்
சட்டென உதிரும் ஒரு துளி நீரில்
எதுவும் இருக்கலாம்
நீ
நான்
நம் உறவு
எல்லாவற்றையும் தாண்டி எதுவுமில்லையென
நீ அடிக்கடி சொல்லும் அந்த ஒன்று.


Dec 20, 2012

யாதுமறியேனடி தோழி…

குளிரறியேன்
சுடும் வெப்பமறியேன்
வாடைக் காற்றறியேன்
தென்றலறியேன்
யாதுமறியேனடி தோழி…

காடு மலையறியேன்
கடல் கொண்ட அலையறியேன்
சமவெளியறியேன்
பசும் புல்வெளியறியேன்
பாதாளமறியேன்
யாதுமறியேனடி தோழி…

சட்டெனக் கடக்கும்
வண்ணத்துப் பூச்சியறியேன்
தேன் குடிக்கும் வண்டறியேன்
மின்மினிப் பூச்சிகளுமறியேன்
காக்கை குயிலறியேன்
தோகை மயிலறியேன்
யாதுமறியேனடி தோழி…

மழையறியேன்
ஒடும் நதியறியேன்
உதிரும் பனியறியேன்
கொடும் பசியறியேன்
நெடுநாள் பிணியறியேன்
யாதுமறியேனடி தோழி…

மான் கூட்டமறியேன்
பிளிறறியேன்
ஓடும் மீன்களறியேன்
ஊரும் நத்தைகளுமறியேன்
யாதுமறியேனடி தோழி…

செம்பருத்திப் பூக்களறியேன்
தொட்டிச் செடிகளறியேன்
நெடிதுயர்ந்த மரங்களறியேன்
தவழும் மேகங்களறியேன்
வான் திரியும் பறவைகளறியேன்
யாதுமறியேனடி தோழி…

சுவையறியேன்
சுவாசமறியேன்
நில்லாமல் துடிக்கும் நாடியறியேன்
உடல் நிறைக்கும் குருதியறியேன்
காட்சியறியேன்
யாதுமறியேனடி தோழி…

கவிதைச் சொல்லறியேன்
மனமகிழ் இசையறியேன்
தாய்மொழியறியேன்
கடந்து போன உறவறியேன்
யாதுமறியேனடி தோழி…

உனையறிந்த ஒரு கணத்தில்
யாவும் நீயாகிட
அனைத்தும் நீயாக அறிந்தேனடி தோழி


Dec 19, 2012

காத்திருத்தல்


காத்திருத்தல்
எப்பொழுதும் காத்திருத்தலே
காத்திருத்தல் ஒரு நதி
வலியும் சுகமும் இருகரைகள்
வலியின் கரையில் சுடு மணல்
சுகத்தின் கரையில் மலர்த் தோட்டங்கள்,
ஒற்றைக் காலில் மரங்கள் பூத்தபடி  காத்திருக்கிறது
மலைகள்
கடல்
இரவுதோறும் விண்மீன்கள்
என எல்லாமே,
இதோ இங்கே யாரோ ஒருவன்
தொடர்ந்தபடியே இருக்கும்
நேசத்தின் நிராகரிப்புக்காக காத்திருக்கிறான்
சில நேரங்களில் மெளனத்தை
பல நேரங்களில் இயலாமையை,
ஒரு பாடலுக்காகவோ
இசைக்காகவோ காத்திருக்கும் ஒருவனை
பார்த்திருக்கிறேன்
ஒரு பூபாளத்தையோ முகாரியையோ
பல்லவிகளற்ற சரணத்தையோ
சுமந்தபடியே அலைகளோடு திரிகிறான்…
ஒருவன் கவிதைக்காகக் காத்திருக்கிறான்
ஒருவன் மழலைக்காக
சட்டென பொழியும் மழைக்காக...

ஒரு சிலுவையும் காத்திருக்கிறது
சிலுவையாய் மாறிப் போன பாவம் போக்க
அதற்கோ ஒற்றை உயிர் தேவை
அது புனிதனோ
பாவியோ,
யாரவது ஒருவர் காட்டிக் கொடுக்கும் போது
புனிதன் பாவியாகிறான்
பாவி புனிதனாகிறான்…
யார் புனிதன் என்பதையும்
யார் பாவி என்பதையும்
மற்றவர்களே முடிவு செய்கிறார்கள்,
...
..
எதைப்பற்றியும் கவலைப்படாமல்
காத்திருக்கிறது காலம்
எல்லோரையும் விழுங்க,
நமது முறைக்கு காத்திருப்போம்,
வேறென்ன சொல்ல
காத்திருத்தல் அழகானது என்றே
முடிப்பதைத் தவிர ...


Dec 17, 2012

ஆம், இப்படித்தான்...

எல்லோரிடமும் விலகிக் கொண்டிருக்கிறேன்
காரணங்கள் எதுவுமின்றி
என்னை நேசிப்பவர்களிடமிருந்து
என்னை வெறுப்பவர் களிடமிருந்து
எந்த இலக்கணமும் இல்லா
இக்கவிதையிடமிருந்து
எல்லா வெளிச்சங்களும் இருளின் புகைபோக்கிகளே
என்னை நேசிக்கவோ
என்னை வெறுக்கவோ
உங்களிடம் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்
அப்படி என்னிடம் எதுவுமில்லை தான்
என் மீதான அச்சம் என்பது
ஆகச் சிறந்தது
எனக்கான நிலையின்மை என்பது
சலிப்பானது
முடிவுகள் எடுப்பதில்லை எனும் போதும்
எனது செயல்கள் எனது முடிவுகளாகின்றன
ஒரு இறகு முளைத்த மீனென
பற்கள் முளைத்த பறவையென
இன்னும் எதோ ஒன்று தேவைப்படுகிறது
சுடும் சொற்களில்
பன்னீர் துளியின் நறுமணம்
அடங்கா காதலின்
அத்துமீறல் துயரங்கள்
இப்படி எதையாவது சொல்லிக் கொண்டிருத்தலில்
எதுவுமில்லை
எல்லோரிடமிருந்தும் விலகத் தொடங்கினேன்
என்னை நேசிப்பவர்களிடமிருந்தும்
என்னை வெறுப்பவர்களிடமிருந்தும்...



Oct 30, 2012

இரவோடு கரைதல் -4



அந்தி மயங்கிச் சரிந்த அப்பொழுதொன்றில்
விரல்கள் கோர்த்து நடை பழக்கும் குழந்தையென
எனை மாற்றியபடி
கதைகள் சொல்லத் துவங்குகிறான் அவன்...

அவன் கதைகள் சுவாரசியமானவை
அதன் லயங்களுக்குள்
அதன் கட்டுகளுக்குள் மெல்ல மெல்ல
தொலைகிறேன்
என்னை மறந்து சிரிக்கிறேன்
அவன் நகைச்சுவைகளில்
பிரம்மித்துப் போகிறேன்
அவன் புதிர்களில்...

சில துளி கண்ணீரையும்
கதைகளில் உருவாக்குகிறான்
என்னை அழ வைக்கும் முயற்சியில்
அவன் குரல் சிரிக்கிறது
அவன் குரல் அழுகிறது
அவன் குரல் சிலிர்க்கிறது...

அவன் கதை சொல்லியாக இல்லாமல்
கதையாகவே இருக்கிறான்
அதன் பாவங்களாக மாறியபடி
கதாபாத்திரங்களை எனக்கு அறிமுகம் செய்கிறான்
கதைக்குள் என்னை ஒரு தேவதையாக்கி
கவனமாக அழைத்துச் செல்லும்
அவன் நுட்பமும் நளினமும் அழகு...

மழை பொழிகிறது
வெயில் மணக்கிறது
விண்மீன்கள் உதிர நிலவு கரைய
எத்தனை காட்சிகள் மனச் சித்திரத்தில்
கண் மயங்கி உறங்கிப் போகையில்
மெல்லிய தாலாட்டென முடிகிறது அவன் கதை...

பிறகவனை காணவில்லை
அவன் கதைகள் நினைவிலிருக்க
அவன் மட்டும் இல்லாதிருந்தான்
பிறிதொரு நாள் உறங்கும் வேளையொன்றில்
தலையணை கட்டிக் கொண்டு
உறங்கச் செல்லும் சிறுபிள்ளையென
காதோரம் வந்து கேட்கிறான்
எனக்கொரு கதை சொல்லேன்”...

முயலும் ஆமையுமின்றி, தொப்பி திருடும் குரங்குகளின்றி
தெனாலிராமனும் பீர்பாலும், குட்டி கபீஷும் தவிர்த்து
ஒரு கதை சொல்ல வேண்டும்
அவனுக்கே அவனுக்காய்
தலையணைக்கு பதில்
என்னைக் கட்டிக் கொண்டு உறங்கும் படியாய்….

Sep 18, 2012

எவ்வளவு காலம்?



ஆமாம், எவ்வளவு காலம் தான் மனிதன் வாழ்கிறான்?
ஓராயிரம் நாளா அல்லது ஒரு நாள் மட்டும் தானா?
ஒரு வாரமா அல்லது சில நூற்றாண்டுகளா?
இறப்பதில் எவ்வளவு காலம் மனிதன் செலவிடுகிறான்?
என்றைக்குமேஎன்று சொல்வதற்கு என்ன பொருள்?
இந்தச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த நான்
இவற்றில் தெளிவு பெற முடிவு செய்தேன்.

ஞானமிகுந்த பூசாரிகளை அணுகினேன்
அவர்களின் சடங்குகள் முடியும் வரை காத்திருந்தேன்.
கடவுளையும் சாத்தானையும் சந்திக்க
அவர்கள் தத்தம் வழி செல்வதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் கேள்விகளால் அவர்கள் சலிப்படந்திருந்தனர்.
அவர்கள் அதிகமாய் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் நிர்வாகிகள்.
நாளுக்கு நாள் அலுவல் மிகும் மருத்துவர்கள்
கையில் ஆரியோமைசின் தோய்ந்த கத்தியுடன்
நோயாளிகளைப் பார்ப்பதற்கிடையில்
என்னை வரவேற்றனர்.
அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டது;
நுண்கிருமிகளின் மரணம் அன்று
அவை தாம் ஆயிரக்கணக்கில் மடிகின்றனவே
உயிர் பிழைக்கும் சில கிருமிகளின்
தொந்தரவுதான் சிக்கல்.”
அவர்கள் சொன்னது என்னை அதிர்ச்சியுறச்
செய்ததால்
வெட்டியான்களை அணுகினேன்.
கொடிய சாபங்கள் சூழ்ந்த பேரரசர்கள்
காலராவின் ஒரே வீச்சில் அவிந்து போன பெண்கள்,
அலங்கரிக்கப்பட்ட பெரும் பிணங்கள்,
சிறிய எலும்பு உடல்கள்-
இவை எரிக்கப்படும் ஆற்றோரம் சென்றேன்.
கரை மணல்வெளி முழுதும்
பிணங்களாலும் சாம்பல் வல்லுநர்களாலும்
நிறைந்திருந்தது.

வாய்ப்புக் கிடைத்ததும்
கேள்விகளைச் சரமாரியாகத் தொடுத்தேன்.
என்னை எரிக்க அவர்கள் முன்வந்தனர்
அது மட்டும் அவர்கள் அறிந்தது.
என் தாய் நாட்டில், வெட்டியான்கள்
குடிப்பதற்கிடையே பதில் சொன்னார்கள்
ஒர் அழகிய பெண்னைக் கட்டிக் கொள்.
இதப் பைத்தியகாரத்தனத்தை விட்டுத் தொலை.’

இவ்வளவு மகிழ்ச்சியான மக்களை நான் கண்டதில்லை.
மதுக் குவளைத் தூக்கிப் பிடித்து,
உடல் நலமும் மரணமும் வேண்டி
அவர்கள் பாடினார்.
அவர்கள் பெரும் கள்ளப்புணர்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதையும் சுற்றிவிட்டு
முதியவனாக நான் ஊர் திரும்பினேன்.

இப்போது யாரையும் நான் கேள்வி கேட்பதில்லை.
ஆனால், நாளுக்கு நாள் குறைவாக
அறிந்து கொண்டிருக்கிறேன்.