பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 15, 2011

நாட்குறிப்பு


ஒரு நாட்குறிப்பில் என்னவெல்லாம்
குறித்து வைக்கலாம்
பெரும்பாலும் நிகழ்வுகளாக
நிறைந்து விடுகிறது
பிரபலங்களின் நாட்குறிப்பு
செலவு கணக்குகள்
குறித்து வைக்கப் படுகின்றன
பலரது வீட்டில்
புள்ளிகள் வைத்து கோலமும்
வரைகிறார்கள் சில பெண்கள்
பால் கணக்கும்
மளிகை தேவைகளும்
தொலை பேசி மின்சாரக் கட்டணங்களின்
கடைசி தேதியும்
மருத்துவ பரிசோதனை தினங்களும் கூட
கவிதைகளால் நிறைகிறது
காதலர்களின் நாட்குறிப்பு
தேதிகளே இல்லையென
புலம்புமோ நடிகர் நடிகைகளின் பக்கங்கள்
அந்தரங்கங்களாலும்
ரகசியங்களாலும்
நிறைந்து யாருக்கும் தெரியாமல்
கிடக்கிறது பரணில் சில நாட்குறிப்புகள்
மறைத்து வைக்கப் பட்ட
கடிதங்களும் புகைப்படங்களும்
இடையில் இருக்கலாம்
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டும் தேதிகளும்
குறித்து வைக்கப் படலாம்
நேற்று இரவு பேருந்து நிலையமொன்றில்
கடலை வாங்கும் பொழுது
சுருட்டித் தந்தார்
நாட்குறிப்பு பக்கமொன்றை
அதில்
என்றாவது ஒருநாள் கிழிக்கப்படும்
கவிதைகளை விட
அதிகமாய் என் மனது
........
........
........
........
........
யோசிக்கிறேன்
இனி
ஒவ்வொரு வருட துவக்கத்திலும்
நாட் குறிப்புகளை
பரிசளிக்க வேண்டுமா என?