பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 8, 2012

கலைக்கும் காற்றாய்...


நிலவின் இருண்ட பக்கமாய்-நீ
உதாசீனப்படுத்திய என் பிரியம்
காட்டாறு அடித்து வந்த கூழாங்கற்களாய்
உருண்டு உருண்டு கடக்கும்
உன்னோடு பேசாத என் மெளனங்கள்
கருக்கொண்டும் பொழியாத
காற்றலைத்த மேகமாய்-விரவிப்போன
நீ கேட்காத என் வார்த்தைகள்
குழந்தை தட்டி விட்ட பால்சோற்று விள்ளலாய்
மண்ணில் கிடக்கும் என் நேசம்
பொங்கும் போதெல்லாம்
நெருப்பணைக்கப்பட்ட பாலாய்
ஆடை படிந்தே கிடக்கும் என் பாசம்
ஊதிப்பெரிதான பலூனில்
ஊசியாய் இறங்கும்
என்னைக் காணும் போதான
உன் முகத்திருப்பல்கள்
உதிர்கின்ற போதும் மண்ணை
முத்தமிட்டே வீழும் பவளமல்லியாய்
உனைச் சுற்றியே கவிழும் என் நினைவுகளைக்
கவலையேபடாமல்
கலைத்து விட்டுப் போகிறாய்
காற்றைப் போல்.......

மஞ்சரளிமுகம்


அந்தியின் விழிப்புகளில்
கவிதைகள் வாசித்தபடி
கரம் பற்றி நடக்கிறாய்
மஞ்சரளித் தோட்டத்தினூடே
பள்ளி உறவுகளைப் பதியம் வைக்கையில்
கருப்பு குண்டன் என
வர்ணித்துச் சிரிக்கிறாய்
கண்களைச் சிமிட்டியபடி
கோபமாய்ச் சிணுங்கும் என்னிடம்
கொஞ்சலாய்ப் பேசி
சிறகடிக்கச் செய்கிறாய்
நீ நட்ட மரத்தின் காற்றையும்
கூடடையும் பறவைகள் பேச்சையும்
கைபேசிவழி
என் செவி சேர்க்கிறாய்
பால் மாற்றி விளித்தபடி
பால்யத்துக்குள் சிக்கிக் கொண்டு
மீள மறுக்கிறோம்
வயதுகளைத் தொலைத்தபடி
உருவம் அறியா உறவின் தன்மைக்கு
ஒற்றை முகம் எதற்கு?
ஓராயிரம் உருவகங்கள் இருக்கையில்!

வார்த்தை வியாபாரி


விசித்திர மூட்டையொன்றை
சுமந்தவண்ணம் வீதியெங்கும் அலைகிறாய்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி...
வசீகர எண்ணங்களை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரி... நீ!
யாரும் உட்புகா உன் தனிமைத் தாழினை
உடைத்து நடுநிசியைப் பகிர்ந்தளிக்கிறாய்
எனக்கு மட்டுமாய்!
பின்னிரவில் வானவில் ஒன்றை வரவழைத்து
யாகமொன்றை வளர்க்கத் துவங்குகிறாய்...
உன் மூட்டைக்குள்ளிருக்கும் மது தோய்ந்த
வார்த்தைகளை அக்னிமேல் வீசியபடி...
மென்மொழிச் சுடரொன்று பற்றியெரிகிறது
உன்மத்தம் கொண்டபடி...
பதினான்காம் நூற்றாண்டின் இளவரசனென
முழந்தாளோடு, முத்தமுமிட்டு
உன் காதலைப் பகன்ற பொழுதினில்
வானவில்லுக்குள் வளர்சிதை மாற்றம்!
உனக்கென்னவோ மூட்டையோடு பயணிப்பது
இலகுவாகவும், பாதுகாப்பானதாகவுமிருக்க,
நானோ,
பறவை இறகை இழுத்துச் செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்தவண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்!

விரல்மொழி


சற்று நேரமாவது

உன் விழிகளை

நேர் நோக்கியிருந்திருக்கலாம்

மெல்ல இமைமூடி, இதமாக

உள் தோளில் சாய்ந்திருக்கலாம்

கேசம் கலைந்திருந்த

உன் நெற்றியில் அழுத்தி ஒரு

முத்தமிட்டிருக்கலாம்

அவசரமாய் அங்கும் இங்கும் ஓடி

பேருந்தில் எனக்கொரு

இடம் தேடிக் களைத்த

சன்னலோரக் கம்பிகளில்

கைபதித்தப் பேசிக் கொண்டிருந்த

கடைசி நொடியிலாவது

மென்மையாக உன் விரல்களை

ஸ்பரிசித்திருக்கலாம்

எப்போதும் எனக்குள்

காலம் தாழ்த்தியே

முளைக்கின்றன

கவிதைக் கன்றுகள்...