பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

முரண்

கண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்
நீந்த விடப்பட்ட மீன்கள்
கடலையே உருவகப்படுத்திக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கின்றன

உயிர்க்காட்சி சாலையில் அலைந்துதிரிந்து
கொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்
மண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்
தோல்திரைகளை சிறிது மூடித்திறந்தன

திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி
சட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்
சுவரொட்டியிலிருந்த வண்ணவண்ணப்பூக்களில்
தேனெடுக்க முட்டி மோதின

கூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த
அந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற
சாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.

திரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே
அமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்
சலிக்காமல் குயில்கள் பாடிக்கொண்டிருக்கின்றன.

வலிந்து வாசிக்க முயலவில்லையெனினும்
வீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட
என் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.

ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
மெல்லிய மலரின் விரிதல்களையும்
சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.

- சின்னப்பயல்

No comments: