பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 30, 2011

அவளும் அவன் கவிதையும் -பிறாபுல் சீலீடர்


அறிந்து கொண்டீர்களா
அவள் மாறிவிட்டாள் என்பதை.
அந்தக் கவிஞனால் கூட
அவளை அடையாளம் காண
முடியவில்லை.
அவள்
பிறர் அறியாமல்
மறைவாய்
இந்த உலகத்தைச்சுற்றி வருகிறாள்.

மனித மனங்களின்
மூலைமுடுக்குகளில்
நுழைந்து
ஆழம் பார்க்கிறாள்.
அவள் சுமந்து வரும்
உலகளாவிய செய்திகளில்
அதிரடி மாற்றங்களில்
கவிஞனின் கவிதை
தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கவிதைக்கு முதலிடம் தர
மறுத்தவர்களையும்
முழுமையாக
ஆட்சி செய்கிறது
கவிதையின் ராஜாங்கம்.

கவிதை
அவளைப் பலியாடாக்கிவிட்டது.
தன் தலையில்
கைவைத்துக் கொண்ட
பத்மாசுரனாய் அவள்.
வாதங்களிலும்
இசங்களிலும்
கிழிந்து தொங்குகிறது
அவள் கவிதையுடல்.
அவள் இருக்கையை
அவளே அசைத்துப்பார்க்கிறாள்.
அவளுக்கான அவள் முகத்தை
கவிதை
ஒதுக்கித்தள்ளிவிட்டதோ
நிலத்தைப் போல
உறுதியான
அவள் ஆளுமையை
கவிதை விரும்புவதில்லை.
காற்றைப் போல
அவளிருக்கட்டும்.
உலகத்தைச் சுற்றிவரட்டும்.
அவன் கவிதைகள் மட்டுமே
அவளை அடையாளம் காணட்டும்.
அவளுக்கும்
அவன் கவிதைகளுக்குமான உறவு
தலைமுறைகளாக
தொடரும் கதை.

கவிதை..
அதுதான்
அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
கவிஞனின் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் அவள்.

மற்றபடி
அவனும்
பல்வேறுமொழிகளுக்கு நடுவில்
வந்துப்போகும்
ஒரு வலைப்பதிவு
அவ்வளவுதான்.

- மொழியாக்கம் : புதியமாதவி.

No comments: