பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 8, 2012

வார்த்தை வியாபாரி


விசித்திர மூட்டையொன்றை
சுமந்தவண்ணம் வீதியெங்கும் அலைகிறாய்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி...
வசீகர எண்ணங்களை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரி... நீ!
யாரும் உட்புகா உன் தனிமைத் தாழினை
உடைத்து நடுநிசியைப் பகிர்ந்தளிக்கிறாய்
எனக்கு மட்டுமாய்!
பின்னிரவில் வானவில் ஒன்றை வரவழைத்து
யாகமொன்றை வளர்க்கத் துவங்குகிறாய்...
உன் மூட்டைக்குள்ளிருக்கும் மது தோய்ந்த
வார்த்தைகளை அக்னிமேல் வீசியபடி...
மென்மொழிச் சுடரொன்று பற்றியெரிகிறது
உன்மத்தம் கொண்டபடி...
பதினான்காம் நூற்றாண்டின் இளவரசனென
முழந்தாளோடு, முத்தமுமிட்டு
உன் காதலைப் பகன்ற பொழுதினில்
வானவில்லுக்குள் வளர்சிதை மாற்றம்!
உனக்கென்னவோ மூட்டையோடு பயணிப்பது
இலகுவாகவும், பாதுகாப்பானதாகவுமிருக்க,
நானோ,
பறவை இறகை இழுத்துச் செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்தவண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்!

No comments: