பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 8, 2012

கலைக்கும் காற்றாய்...


நிலவின் இருண்ட பக்கமாய்-நீ
உதாசீனப்படுத்திய என் பிரியம்
காட்டாறு அடித்து வந்த கூழாங்கற்களாய்
உருண்டு உருண்டு கடக்கும்
உன்னோடு பேசாத என் மெளனங்கள்
கருக்கொண்டும் பொழியாத
காற்றலைத்த மேகமாய்-விரவிப்போன
நீ கேட்காத என் வார்த்தைகள்
குழந்தை தட்டி விட்ட பால்சோற்று விள்ளலாய்
மண்ணில் கிடக்கும் என் நேசம்
பொங்கும் போதெல்லாம்
நெருப்பணைக்கப்பட்ட பாலாய்
ஆடை படிந்தே கிடக்கும் என் பாசம்
ஊதிப்பெரிதான பலூனில்
ஊசியாய் இறங்கும்
என்னைக் காணும் போதான
உன் முகத்திருப்பல்கள்
உதிர்கின்ற போதும் மண்ணை
முத்தமிட்டே வீழும் பவளமல்லியாய்
உனைச் சுற்றியே கவிழும் என் நினைவுகளைக்
கவலையேபடாமல்
கலைத்து விட்டுப் போகிறாய்
காற்றைப் போல்.......

No comments: