பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Apr 27, 2012

நான், சாத்தான், ஒரு தேவதை...

 


சில நாட்கள் நான் தேவதையைத்
தேடி அலைந்தபடி இருந்தேன்
சபிக்கப் பட்ட சாத்தானின் உதவியுடன்

மரத்தின் இலை உதிர்கிறது
தரை நோக்கி விழும் இலையில்
இதுவரை உலகம் காணா ஓவியமும் நடனமும்

காலி சிகரெட் பெட்டிக்குள் அடைபடுகிறது
அந்தரங்கக் கனவுகள் புகையும் துகளென
 என்னையும் உன்னையும் சுமந்தபடி

சாத்தான் சொன்னது இனி நீ தான் அரசன்
நான் உன் அடிமை
விழ்த்திவிடும் முதல் போதை வஸ்து

தரை படிந்து சருகாகி
மக்கி உரமாகலாம் இல்லையெனில்
என் நோட்டு புத்தகத்தில் ஒட்டப்படலாம்

அடைபட்ட காகித அட்டை எரிகிறது
என் கனவுகளை தனதாக்கிக் கொண்டு
புகைகிறது காணும் மனதும் கண்ணும்

அதோ உன் தேவதையென சாத்தான் சுட்டியது
அது தேவதையாகவும் இருக்கலாம்
உருமாற்றம் பெற்ற சாத்தானாகவும் இருக்கலாம்

இலையின் கனக்கிறது தன்னில் ஒரு மரம் கொண்டு
மரத்திற்கு ஒரு இலை தான்
இலைக்கு இன்னுமொரு மரம் சாத்தியமில்லை

மெல்ல மெல்ல சூடாகி அறை முழுதும் தகிக்க
வெந்து போன கனவுகளின் கருகும்
நாற்றமோ வாசனையோ சகிக்கவில்லை

சாத்தான் சிரிக்கிறது
கனவைத் தள்ளிவிட்டு எழுகிறேன்
சுற்றிலும் இரைந்து கிடக்கிறது சாம்பல் துகள்கள்

இந் நேரத்தில் நான் சாத்தானகி இருந்தேன்
ஒரு மரம் என்னுள் விதையாகியிருந்தது
சுவாசமெல்லாம் ஒரு தரம் கெட்ட புகை நாற்றம்

ஒரு தேவதை
ஒரு இலை
ஒரு சிகரெட்
ஒரு பெரும் கனவு
வேறு வழி இல்லை இதற்கும்
கவிதையென்றே பெயர் வை...

No comments: