பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 15, 2012

அவன் நினைவு...

ஒரு குடிசையின் ஓரத்தில்
அமர்ந்திருந்தேன்
சற்று நேரத்தில் யாரவது ஒருவன்
தேடியபடி வரலாம்
பேரம் படிந்தால் அவனுடன் இந்த இரவு
முடிந்ததும் இன்னொருவனுக்கான காத்திருப்பு
இங்கே எல்லோருக்கும் ஆசை தான்
இருக்கும் ஒன்றை விட
தன்னிடம் இல்லாத ஒன்றின் மீது
இதோ இப்போது வருபவனும்
அப்படித் தான் போல
நடு வயது
கலைந்த கேசம்
மெலிந்த உடல்
அவன் தன்னை சோதிக்க விரும்பி இருக்க வேண்டும்
நான் அவன் கரன்சிகளுக்கு
ஒரு முயலாகவோ எலியாகவோ
அருகில் வந்தான்
எந்த பேரமும் இல்லை
சரி என்றான்
எனக்கு புரிந்தது அவன் புதிதென்று
முடிந்த வரை கறக்கலாம் கரன்சிகளை
குடித்திருக்க வில்லை
புகை நாற்றம் இருந்தது
அவன் வீடாக இருக்க வேண்டும்
தனியன் போல
வீட்டுக்குள் நுழைந்ததும்
கட்டிலில் விழுந்தான்
சீக்கிரம் என்று தயாரானேன்
ஒரு நாள் என்றான்
தொகை சொன்னேன்
ம்ம்ம் என்றான்
சமையலறையைக் காட்டினான்
சமைக்கச் சொன்னான்
சாப்பிட்டோம்
தொலைக்காட்சியில் படம் பார்த்தான்
அருகில் அமரச் சொன்னான்
மடியில் படுத்திருந்தான்
மாலையில் தேநீர் கேட்டான்
பிறகு இரவு உணவு
படுக்கை அறைக்கு சென்றான்
மெல்ல தவழும் படியாய்
இசையை ஒலிக்க விட்டான்
இரவுடைக்கு மாறினான்
அருகில் வந்து உறங்கச் சொன்னான்
கட்டிக் கொண்டு உறங்கிப் போனான்
காலையில் கையில் பணம் திணித்து
பேருந்து நிறுத்தம் வரை வந்தான்
அதன் பின்
அவனை பார்க்கவே இல்லை
ஒரு நாள் யாரும் வராத இரவொன்றில்
அவன் நினைவு வந்தது
அவன் வந்தால் போதும் என்றிருந்தது...

No comments: