பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 27, 2012

கனவு...


ஆகப் பெரும் கனவைச் சுமந்தபடி அலைகிறேன்
அதுவோ தன்னில் சில சூரியன்களை நடுகிறது
நட்சத்திரங்களை வாரியிறைக்கிறது
ஒரு பேரலை ஒதுக்கிய சங்கென மணல் வெளியில்
மாறிக் கிடக்கிறது நானெனும் சுயம்
மெல்ல மெல்ல விரிகிறது அதன் பிரபஞ்சவெளி
எண்ணிலடங்கா நிலவுகள் தன் பாதையில்
என்னைச் சுற்ற மயங்கிச் சரிகிறேன்
பல கோள்களும் அதன் பாதைகளுமாய் நீளும் கனவில்
எதோ ஒன்றில் மழையடிக்கிறது
எதொ ஒன்றில் வேர் பிடித்து பூ பூக்கிறது
கனவுக்குள் ஒருவன் என்னைப் போலவே
தனிமையில் எதையோ தேடி அலைகிறான்
முன் பின்னறியா அவனுக்கும் இருக்கிறது
எனக்கிருக்கும் அதே முகத்தின் சாயல்
சுற்றிலும் சில் வண்டுகள் பறக்க
அவன் எதையோ பிடிக்க முயல்கிறான்
களைத்துப் போகிறான்
அக்கனவினால் நான் அழிக்கப் படலாம்
அழிவது மிக ரகசியமாய் எனக்கே தெரியாமல்
நடந்து விடக் கூடும்
ஏன் அது உங்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்
மெதுவாய் கண்கள் வலிக்கிறது
பாரமொன்றை சுமப்பது போல்
கனக்கிறது மனதும் தலையும்
திடுமென விழிக்கையில் தொலைவில் அலைகிறது
அப்பெருங் கனவு
அதன் கரையில் நான்
கவிதைகளால் வசியம் செய்து அக்கனவை அடைக்கிறேன்
என் முன் சிறு துகளெனக் கிடக்கிறது அக்கனவு
அதனிடம் சொல்கிறேன்
நானொரு மாபெரும் கனவு
என்னில் ஆயிரம் பிரபஞ்சங்கள்
அதில் நானே படைக்கிறேன் நானே அழிக்கிறேன்
கனவுகளும் அதில் அடக்கம்
மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கினோம்
என் கனவுகளை நானும்
என்னை என் கனவுகளுமாய்...

No comments: